Saturday 20 June 2015

தந்தையர் தினம்



அப்பா ... அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது ... வித்யாசமான பாசம் கொண்டது ... இந்த வார்த்தை சொல்லும்போதே மனம் சிலிர்க்கிறது. என் அப்பாவுக்கு என்னிடம் ரொம்ப ஆசை என்பார் என் அம்மா. முதல் குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்ற என் அப்பாவின் ஆசைப்படி நான் பிறந்ததால், எனக்குப் பின் மூன்று சகோதரர்கள் பிறந்தாலும், என் அப்பாவுக்கு என்னிடம் தனிப் பாசம் உண்டு என்பதை நான் பலமுறை உணர்ந்து அனுபவித்திருக்கிறேன். 

சிறு வயதில் அவர் என் கைபிடித்து பள்ளி  அழைத்துச் சென்றது, நான் படிப்பில் சிறப்புப் பெற்றபோது பெருமிதப் பட்டது, என்னைப் பாடச் சொல்லி ரசித்தது....எனக்கு குழந்தைகள் பிறந்தபோது ஒரு தாத்தாவாக சந்தோஷப் பட்டது, அவர்களின் படிப்பு, திருமணம் இவற்றை அன்போடு ரசித்து அனுபவித்து பாராட்டி வாழ்த்தியது என்று அவரின் அன்புக்கு சான்றாக எத்தனை விஷயங்கள். 

எனக்குத் திருமணம் நடந்த அன்று, அவர் மடியில் அமர்ந்து எனக்கு திருமாங்கல்ய தாரணம் செய்தபோது என் அப்பா கண்  கலங்கி அழுதது இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது. அதை நினைக்கும்போது இன்றும் என் கண்களில் கண்ணீர் வருவதைத் தடுக்க முடியவில்லை.


பிள்ளைகளிடம் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தந்தைகள், பெற்ற பெண்ணிடம் சற்று விட்டுக் கொடுத்துப் போவதுஎனக்கு மட்டுமல்ல பல பெண்களின் அனுபவமாக இருக்கும். பாசத்தில் பாரபட்சமா? இல்லை...அது ஒரு தனிப்பட்ட அன்பு எனலாம். நான் ஒரே பெண் என்பதால் அப்பாவுக்கு இத்தனை பாசமா என்று நான் நினைப்பதுண்டு. என் அம்மாவுடன் நான்கு பெண்கள் என் தாத்தாவிற்கு. நான்கு பெண்களிடமும் அவருக்கு தனிப்பட்ட பாசம் உண்டு என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். பல பெண்களும் அம்மாவைவிட அப்பா செல்லமாக இருப்பதைக் காணலாம்!

அம்மா என்கிறபோது உருகும் மனம், அப்பா எனும்போது ஒரு அதீதமான  வாஞ்சையை அனுபவிப்பதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. இன்று அப்பா என்னுடன் இல்லை என்றாலும் அவரின் ஆசிகள் என்னை என்றும் நன்கு வாழவைக்கும்.


இந்தத் தந்தையர் தினத்தில் என் பிரியமுள்ள அப்பாவுக்கு என் தலை தாழ்ந்த வணக்கங்களைக் கூறிக் கொள்கிறேன்.




ஒரு தந்தையைப் பற்றி மகனும், மகளும் ஒவ்வொரு வயதிலும் நினைப்பது பற்றி ...

6 வயதில் ...
'என் அப்பாவைப் போல கிடையாதாக்கும்...'

8 வயதில் ...
'என் அப்பாவுக்கு தெரியாதது எதுவும் இல்லை...'

12 வயதில்...
'என் அப்பா நல்லவர்தான்...ஆனாலும் கொஞ்சம் முன்கோபக்காரர் ...'

14 வயதில்...
'என் சின்ன வயதில் அப்பா என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார்...'

18 வயதில் ...
'இந்த நாளைக்கு ஏற்ற மாதிரி என் அப்பாவுக்கு நடந்து கொள்ளத் தெரியவில்லை.சுத்தமாக அவருக்கு ஒன்றுமே தெரிவதில்லை....'

20 வயதில்...
'என் அப்பா ரொம்பவே மோசமாகிவிட்டார். எல்லாவற்றுக்கும் எதிரிடையாகப் பேசுகிறார். எதையும் புரிந்து கொள்வதில்லை...'

23 வயதில்...
'ச்சே! வரவர அப்பாவின் செயல் எதுவும் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை நாளாக வாழ்கிறாளோ?'

25 வயதில்...
'வர வர அப்பாவுக்கு மூளையே சரியில்லையோ என்று தோன்றுகிறது. எது சொன்னாலும் எதிர்மறையாகவே பேசுகிறார். என்றுதான் இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளப் 'போகிறாரோ?

32 வயதில்...
'ஹ்ம்ம்..என் மகனை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. நான் சின்ன வயதில் என் அப்பாவுக்கு ரொம்பவே பயப்படுவேன்..'

40 வயதில்..
'என் அப்பா எங்களை மிக ஒழுக்கத்துடன் வளர்த்தார். அந்தப் புரியாத வயதில் அவர் எப்படி எங்களை மிகச் சரியாக வளர்த்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை..'

45 வயதில்...
'அவர் எங்களை எப்படி நல்லவிதமாக உருவாக்கினார் என்பது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது..'

50 வயதில்...
'நாங்கள் நான்கு சகோதர சகோதரிகள்..எங்களை வளர்க்க எங்கள் அப்பா ரொம்பவேகஷ்டப் பட்டதை நினைத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு மகனையே இன்று வளர்ப்பது கடினமாக உள்ளது.'

55 வயதில்...
'என் அப்பா மிகவும் முன்யோசனையுடன், திட்டமிட்டு எங்களை நல்ல விதமாக உருவாக்கினார். இன்றும் இந்த வயதிலும், தன் வேலைகளைத் தானே செய்து கொள்வதோடு, எந்த கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றலுடன் இருக்கிறார். அது அவரின் மிகச் சிறந்த குணம்.


மொத்தத்தில் என் அப்பா மிக மிக உயர்ந்தவர்!