Thursday 16 January 2014

மாசி மாசம் ஆளான பொண்ணு...

'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்', 'மார்கழிப்பூவே' பாடல்களைக் கேட்டஎனக்கு நான் சின்ன வயதில் எதிலோ படித்து ரசித்த ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது.தமிழ் மாதப் பெயர்களை மையமாக வைத்து யாரோ எழுதிய ஒரு அழகான கற்பனை!அதை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.
 
அந்தி மயங்கிய நேரம்...'கார்த்திகை' என்னும் பெயர் கொண்ட இளமை பொங்கும் அழகிய பெண்ணொருத்தி தன்  வீட்டு உப்பரிகையில் நிலவை ரசித்தபடி உலவிக் கொண்டிருந்தாள்.

கீழே சென்று கொண்டிருந்த இளம் வாலிபன் ஒருவன் அவள் அழகை ரசித்து அவளைப் பார்த்து, 'அழகியே..உன் மார்கி(க)ழி' (உன்மேலாடை கிழிந்திருக்கிறது) என்றான் துடுக்காக!

அந்தப் பெண்ணும் 'நீ வந்து தை(தை)யேன்!'என்றாள் மிடுக்காக!

'அது மாசில்லையா?' (தவறில்லையா)என்றான் அவ்விளைஞன்!

அந்த மாசில் பங்குநீ'(பங்குனி)'என்றாள் அந்தக் காரிகை!

'சரி! உன்  சிற்றிடை (சித்திரை) எனக்கு வேண்டுமே''என்றான் ஏக்கமாக!

'வை காசு(வைகாசி)'என்றாள் மிரட்டலாக!

'ஆ!நீயார்'(ஆனி) என்றான் விழி  உயர்த்தி!

'நானா?ஆடி(ஆடி)ப்பிழைப்பவள்'என்றாள்  ஏற்றமாக!

'இன்று எனக்கு விருந்தாக ஆவாய்நீ' (ஆவணி)என்றான் தாபமாக!

'புரட்டா செய்(புரட்டாசி)கிறாய்?'என்றாள் பொய்க் கோபத்துடன்!
'ஐ!பசி(ஐப்பசி)'என்று காதலுடன் சொல்லிக்கொண்டே   அந்தக்கட்டிளங்காளை உப்பரிகைப் படிகளில் ஏறினான்!

Thursday 9 January 2014

விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கு ஒரு ஜே!

மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதை சொன்ன கண்ணன்! மார்கழி மாதமே மேலுலக கடவுளர்கள் பூமிக்கு வரும் காலமாகக் கூறப் படுகிறது. அதனால்தான் மார்கழி மாதம் இறைவனைப் பாடவும்,  பூஜைகளை செய்யவும்,ஆலய வழிபாட்டிற்கும் சிறந்த மாதமாகப் போற்றப்படுகிறது. வாசலில் விடிகாலையில் கோலங்கள் போடுவதும், விளக்கேற்றி வைப்பதும் பூமிக்கு வரும் தேவர்களை வரவேற்கவே.அதனாலேயே எல்லா இடங்களிலும் பாட்டுக் கச்சேரிகள், காலை வேளைகளில் பஜனைகள், கதாகாலட்சேபங்கள், நடனம், நாடகம் என்று முத்தமிழையும்வளர்க்கும்மாதமாகவும்விளங்குகிறது.சென்னையின் டிசம்பர் மாதக் கச்சேரிகள் உலகப் புகழ்பெற்றவை.
சின்ன வயதில் நாங்கள் சென்னையில் இருந்தசமயம் எனக்கு பாட்டு கற்றுக் கொடுத்ததுடன் என் பெற்றோர் இதுபோன்ற கச்சேரிகளுக்கும்,  நிறைய அழைத்துச் செல்வார்கள். நான் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த சபாவில் தியாகராஜ  உத்சவம், ஸ்ரீராமநவமி சமயம் பக்க வாத்தியங்களோடு பாடியதுண்டு. ஒரு சிறந்த கர்நாடக இசைப் பாடகியாக வேண்டும் என்ற என் ஆசை, அதன்பின் திருமணம், குழந்தைகள், வெளிமாநில வாசம்...இவற்றால் கனவாகி,அதன்பின்  பாடும் வாய்ப்பும் குறைந்து போயிற்று. இன்றும் பாடகிகளைப் பார்க்கும்போது அந்த ஏக்கம் என் அடி மனதில் எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முடியவில்லை! ஆனால் கேசட்டுகள், சி.டிக்களில் பாட்டு கேட்டு அந்த ஆசையை ஓரளவு தீர்த்துக் கொள்வேன்! வட  மாநிலங்களில் வசித்தபோது நம் கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு எங்கு போவது?மும்பையில் இருந்த சமயம் அங்கிருந்த சபாக்களில் உறுப்பினர்  ஆகி, அவ்வப்போது கச்சேரிகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. ஒருவாறாக 40 வருடங்களுக்கு பின்பு திரும்ப சென்னை வாசம். டி.வியில் சேனல்களில் ஒளிபரப்பாகும் கச்சேரிகளைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இனி சென்னையில் நேரேயே போய்ப் பார்க்கலாம் என்ற பயங்கர சந்தோஷம்!
தொலைக்காட்சியில் கேட்டு ரசித்த மார்கழி மகா உத்சவத்தை நேரே போய்க் கேட்க ஆவல். இசையில் ஆர்வமுள்ள என் கணவர் சென்னை டிரா ஃ பிக்கில் வெளியில் கிளம்பவே அலுத்துக் கொண்டாலும்,   என் கெஞ்சலுக்காக அழைத்துச் சென்றார். கச்சேரி 5 மணிக்குதானே என்பதால் 4 மணிக்குமேல் கிளம்பிச்  சென்றோம். ஐயோ சாமி!அங்கிருந்த கூட்டத்தைப் பார்க்கணுமே! திருப்பதி கியூ மாதிரி நீ....ண்ட வரிசை!  ஒரு பெண் காலை 10 மணிக்கே கிளம்பி வந்துவிட்டதாக சொன்னார் கையில் டிபனோடு! இன்னொருவரோ எந்த இடத்தில்  உட்கார்ந்தால் டி .வியில் தெரிவோம் என்று கவலைப் படுகிறார் ! (அவருக்கு கச்சேரியைவிட டி .வியில் தெரிவதுதான் முக்கியம் போல!)பின்னாலிருக்கும் பெண்மணி 'எனக்கும் உங்கள் பக்கத்தில் இடம் போடுங்கள்'என்கிறார்! இதையெல்லாம் பார்த்த நான்  என் கணவரின் முகத்தை பயத்தோடு பார்த்தேன். அன்று எங்களுக்கும் கடைசியில்தான் சீட் கிடைத்தது.ஏதோ எட்டி, எட்டிப் பார்த்து கச்சேரி கேட்டு வந்தாயிற்று!

இன்னும்  சில சபாக்களில் டிக்கட் வாங்கச் சென்றால் , கடைசி வரிசைதான் இருக்கிறது என்றார்கள்! ஒரு மாதம் முன்பே ரிசர்வ் ஆகி விட்டதாம்.பல சபாக்களில் கேண்டீன் மெனுக்களையும், அங்குள்ள கூட்டத்தையும் பார்த்தால் இவர்கள்  பாட்டுக்காக வந்தவர்களா சாப்பாட்டுக்காக வந்தவர்களா என்று சந்தேகமாக இருக்கிறது!! 
 
சென்னையில் இந்த சீசனில் இலவச கச்சேரி, கதை, நடனம்,நாடகம் என்று நிறைய நடக்கிறது. வி.ஐ.பிக்களுக்கும், சபா உறுப்பினர்களுக்குமே பாதி இடத்திற்கு மேல் நிரம்பி விடுகிறதாம்!அதனால் எல்லாவற்றிற்கும் நெரிசல்தான்!.கிருஷ்ண கான சபாவில் விடிகாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் ஸ்ரீவிட்டல்தாசின் நாம பஜனைக்கு 41/2 மணி முதலே சபாவில் ஆஜராகி விடுகிறார்கள்!  தற்காலத்தில் பக்தி அதிகமாகிவிட்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது.சென்ற ஆண்டு சென்னையின் எல்லா சபாவுக்கும்(கணவரின் திட்டோடுதான்!) போய் கச்சேரி, கதை, டான்ஸ் என்று ரசித்து விட்டேன்.பொறுமை இழந்த என் கணவர்  'இனி கச்சேரிக்கு போற வேலையெல்லாம் வேண்டாம். பேசாமல் டி.வில பாரு...இல்ல ஆன்லைன்ல கேளு' என்று சொல்லிவிட்டார். உடனே என் பிள்ளையும் ஒரு ஐ பேடை வாங்கிக் கொடுத்து 'இதில் நிம்மதியாக எல்லாத்தையும் ரசிச்சுக்கோம்மா' என்று சொல்லிவிட்டான்!
இந்த  வருடம் நாங்கள் இருப்பது ஜெர்மனியில் என் மூத்த மகன் வீட்டில்.  இப்போ ஆன்லைனில் இந்த வருடக் கச்சேரிகள் மட்டுமில்லை, திரு.செம்பை,திரு மதுரைமணி, திருமதி.எம்.எஸ், எம்.எல்.வசந்தகுமாரி போன்ற அந்நாளைய பெரிய இசை மேதைகளோடு, இன்றைய இசைக் கலைஞர்கள் கச்சேரி, நாம  சங்கீர்த்தனம், கதை என்று அமர்க்களமாகக்  கேட்க முடிகிறது. இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தின் பலன்தானே இது?தொலைக் காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளையும் நம் வீட்டு வரவேற்பறையில் மட்டுமல்ல, சாப்பாட்டு அறை , சமையலறையில் கூட ஐபேட், ஐ ஃபோன், மொபைல் மூலம் கேட்க முடிகிறதே?! இப்பல்லாம் நானும் சமைத்துக் கொண்டே, சாப்பிட்டுக்  கொண்டே, வீட்டு வேலைகளை செய்து கொண்டே இசையை ரசிக்கிறேன். இன்றைய விஞ்ஞான  தொழில்நுட்பத்திற்கு ஒரு ஜே!

ஆஹா...குளிர் விட்டுப் போச்சு!

அப்பப்பா...என்ன  குளிர்! வெளியில்  தலை  காட்டினாலே   குளிர் பல்லைக் கிட்டுகிறது! பனிப் பொழிவு  அழகோ அழகுதான்! சன்னல் வழியே பார்க்கும்போது! நம் நாட்டில்  மார்கழிக்  குளிருக்கே  இழுத்துப்  போர்த்தி  தூங்கும்  நமக்கு  இந்த  நாட்டுக்  குளிர்  எப்படி  தாங்கும்? ஆம்...நான்  இப்பொழுது  இருப்பது  ஜெர்மனியில்  என்  மகன்  வீட்டில்! மைனசில்  இருக்கும்  இந்தக்  குளிர்  இங்குள்ளவர்களுக்கு  பழக்கமான  விஷயம். சின்னக்  குழந்தைகள்  கூட  அனாயாசமாக  அதற்கான  ஆடைகளை  அணிந்துகொண்டு  வெளியில்  செல்லுகிறார்கள். நமக்கு  அந்த  ஆடைகளே  தொல்லையாக  இருக்கிறதே! ஒண்ணா ,  ரெண்டா? கிட்டத்தட்ட  அரை  டஜனுக்கு மேல் ஆடைகள்!உள்ளே  இன்னர்,  மேலே  ஜீன்ஸ்  பேன்ட், ஸ்வெட்டர், அதன்மேல் கோட், ஷால்,  தலைக்கு  கேப், கைகளுக்கு  கிளவுஸ், காலுக்கு  முழங்கால்  வரை  ஷூ...இதுவே  ஒரு  5 கிலோக்கு  மேல  இருக்கும்  போலருக்கு! இவற்றை  அணிய  ஒருமணி  நேரம்! வந்து  அவிழ்க்க  ஒரு  மணி...வெளியில்  கிளம்பவே  சோம்பலாகத்தான்  இருக்கு!
இந்தக்  குளிரிலும்  வாக்கிங்  செல்கிறார்கள் இந்நாட்டு  முதியவர்கள்!  நடக்கும்வேகத்தைப்பார்க்கணுமே..
.அப்படி  விரைவாக  நடந்தால்  குளிர்  தெரியாதாம் !இங்கு  கோடை  காலம்  3  மாதங்கள்.  அச்சமயம்  மிகக்  குறை...ந்த(!)  ஆடைகளோடு  செல்பவர்கள், குளிரில்  முகம்  மட்டுமே  தெரிய  அணிகிறார்கள்! தினம்  ஒரு  சூப்,  தினுசு  தினுசான  பிரட்,  ஆயத்த  உணவுகள்  என்று  சமையலில்  அதிக  நேரம்  செலவிடாத  ஈசியான  சாப்பாடு! காரம் என்றாலே ஒரு காதம் அல்ல, 10 காதத்துக்கு ஓடுகிறார்கள்!! தெரிந்தவர்  என்று  இல்லாமல்  யாரைப்  பார்த்தாலும்   ஒரு  புன்முறுவலுடன்  கூடிய  ஹலோ! (வலியப்  போய்  பேசினாலும்  முகம்  திருப்பிக்  கொள்ளும் நம்மவர்களின்  நினைவு  வந்தது) வெள்ளை  உடலைப்  போன்றே  வெள்ளந்தியான  மனசும்  உண்டாம்  அவர்களுக்கு ! இது  என்  மகன்  சொன்னது! அவர்களைப்  போலவே  இங்கு   காய்கறிகள்,  பழங்கள்,  வீட்டு  மேல்தளங்கள், ஏன்  சாலைகள் கூட  பளபளக்கின்றன! மாசில்லாத சூழல்!ஆனால்  பாவம்  செடிகளும், மரங்களும்தான்  இலைகளை  உதிர்த்து  மொட்டையாக  நிற்கின்றன. 

இவற்றை எல்லாம்  பார்த்த  எனக்கு  மனதில்  தோன்றிய  எண்ணம்  இது...

தாங்க  முடியாத  குளிரில் 
மனிதன்  பல  ஆடைகளை  அணிகிறான்:
மரங்கள்  தம்  இலைகளைக்  களைகின்றன.