Tuesday 11 December 2018

குறும்புக்குழந்தைகள்-- Part-1


#குறும்புக்குழந்தைகள்# Part-1

குழந்தைகள் என்றாலே குறும்புதானே? குழந்தைக் குறும்புக்கு authority விஷமக்காரக் கண்ணன்தானே? அவன் செய்யாத குறும்பா! எனக்கு மூன்று பிள்ளைகள்...ஒரே செல்லப்பெண்!

நாங்கள் மதுராவில் இருந்தபோது பிறந்த என் மூத்த மகன் பெயரும் கண்ணன்தான்! அவன்செய்த விஷமங்கள் சொல்லி மாளாது. நாற்பது வருடங்களுக்கு முன்பு நாங்கள் அங்கு குடியிருந்த வீடு மகா பழசு! அலமாரிகளுக்கு கதவு கிடையாது. பாத்ரூமில் அலமாரியே கிடையாது! சோப்பெல்லாம் பாத்ரூம் படியில்தான் வைத்திருப்போம். என் மகன் தவழ ஆரம்பிக்கும்போது நைஸாக பாத்ரூம் சென்று அங்குள்ள சோப்பெல்லாம் தின்று விடுவான்!

ஒருநாள் அலமாரியைப் பிடித்துக் கொண்டு நின்று, அங்கிருக்கும் சாமானெல்லாம் கீழே தள்ளி பெரிய சத்தம் கேட்க, சமையலறையில் வேலையாயிருந்த நான் ஓடிவந்து பார்க்க வாய் முழுக்க மாவுடன் வெண்ணை தின்ற கண்ணனாகக் காட்சிதர, எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!

மறுநாள் முதல் மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு bench காலில் கட்டிப் போட்டு விடுவேன். சிறிது நேரம் ஏதாவது விளையாடிவிட்டு, நகர முடியாததால் நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி பெரிதாக அழ ஆரம்பித்து விடுவான். அடுத்த வீட்டுக்காரர்களெல்லாம் வந்து 'என்னாச்சு' என்று கேட்டு'குழந்தையை இப்படிக் கட்டாதீர்கள்' என்று advice வேறு செய்வார்கள்! தவறானால் யசோதையே கட்டியிருப்பாளா என்பேன் நான்! பின் வீட்டு வேலைகளை யார் செய்வது?

எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவனுக்கு பிடிக்காது. கூட்டத்தைக் கண்டாலே உடனே பெரிதாக அழ ஆரம்பித்து விடுவான். 2 வயதாக இருக்கும்போது அவனை என் பெற்றோர் ஒருமுறை சுவாமிமலை கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தனர். அன்று மதுரைசோமு அவர்கள் முருகன் சன்னதியில் பாடிக் கொண்டிருந்திருக்கிறார். என் அம்மா பாட்டைக் கேட்கும் ஆசையில் உள்ளே கால் வைத்ததுதான் தாமதம், என் பிள்ளை அவரைவிட பெரிதாக அழ ஆரம்பிக்க, எல்லோரும் என் அம்மாவை திரும்பிப் பார்க்க வெளியில் வந்துவிட்டாராம். என் அப்பாவிடம் கொடுத்துவிட்டு உள்ளே போக நினைத்தால் என் அம்மாவையும் விடாமல் ஒரே அழுகையாம்!

பள்ளியில் படிக்கும்போது தினமும் பென்சில், ரப்பர், ஸ்கேல் என்று ஏதாவது ஒன்றைத் தொலைத்துவிட்டு வநதுவிடுவான். கேட்டால்'கீழ விழுந்துடுத்து' என்று அநாயாசமாக சொல்வான்! +1 படிக்கும்போது ஒருநாள் பஸ்ஸ்டாண்டில் சைக்கிளை நிறுத்திவிட்டு சாவியையும் அதிலேயே விட்டுவிட்டு போயிருக்கிறான். மாலை வீட்டுக்கு வநதவன் 'சைக்கிள் சாவி எடுக்க மறந்து ஸ்கூல் போய்ட்டேன். சைக்கிளைக் காணும்' என்று கூலாக சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டான்! 'ஏண்டா இப்படி தொலைத்துவிட்டு வந்திருக்கயே' என்றால்,'அது போயிடுத்து. இப்ப எனக்கு பசிக்கறது. டிஃபன் கொடு' எனக் கேட்கும் அவனை என்ன செய்வது? என் கணவரோ 'ஏதோ பண்ணிட்டான். போகட்டும் விடு. அவனை வெய்யாதே' என்பார். என் கணவர் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்தவர் என்பதால், குழந்தைகள் மேல் பாசம் அதிகம்.

அவன்+2வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று, BITS Pilaniயில் படித்து, ஜெர்மனியில் M.S மற்றும் மூன்று Ph.D-க்களை பெற்று, பெர்லினில் பல்கலைக்கழகத்தில் ப்ரொஃபஸராகப் பணிபுரிகிறான்.இப்பொழுது அவன் பெண்களுக்கு பணத்தை அநாவசியமாக செலவழிக்கக் கூடாது என்று பாடம் எடுக்கும்போது, நான் இந்த சம்பவத்தை சொல்வேன்! சிறு வயதில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தவன், இன்று நாள் முழுதும் பேசிக் கொண்டிருக்கிறான்!

அடுத்தவன் இவனைவிட மகா மெகா குறும்புக்காரன்! இருவருக்கும் ஒன்றரை வயதே வித்யாசம் என்பதால் எப்பவும் அடிதடிதான் வீட்டில்! மூத்தது மோழை இளையது காளை என்பதற்கேற்ப பெரியவனிடம் வம்புக்கு போய், அவன் சாமான்களை உடைத்து அவனை அழவிடுவதில் அலாதி ஆசை!

இரண்டு வயதில் மருந்து என்று நினைத்து டெட்டாலைக் குடித்து விட்டான். 'மருந்து நன்னால்ல' என்று என்னிடம் சொன்னபோதுதான் அவன் குடித்தது டெட்டால் என்று தெரிந்து பதறிவிட்டேன். நல்லவேளையாக அதில் 4,5 சொட்டுகள் மட்டுமே இருந்தது. என் அம்மா பயந்துபோய்'பிள்ளையாரப்பா காப்பாத்து.  தூன்னு துப்பு 'என்று சொல்ல, அவனும் 'பிள்ளையாரப்பா காப்பாத்து தூ...தூ'என்று சொல்லிக் கொண்டே துப்ப, அந்த நேரத்திலும் எனக்கு சிரிப்பு வந்தது! உடன் என்தம்பி அவனை டாக்டரிடம் அழைத்துப் போக, அவரும் பரிசோதித்து வாயில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தாராம். 'நான் டெட்டால் குடிச்சேன்' என்று எல்லாரிடமும் மழலையில் பெருமையாக சொல்லிக் கொள்வான்.

இவனுக்கு எண்ணை தேய்ப்பதற்குள் நான்படும் பாடு! அந்தநாளில் வேண்டாம் என்றும் விடமுடியாது. என் மாமியாரோ பேரனுக்கு சரியாக'அதென்ன பிடிவாதம் எண்ணை தேச்சுக்க'என்று சொல்லி அவனை இழுத்து வந்து, இறுகப் பிடித்துக் கொள்ள, எண்ணையை தேய்த்தால் நேரே போய் தலைகாணி, மெத்தை எல்லாவற்றிலும் தலையைத் தேய்த்து விடுவான். இவன் தலையை அலசுவதோடு மறுநாள் அவற்றை துவைப்பது எக்ஸ்ட்ரா வேலை எனக்கு!

அடிக்கடி வங்கியில் என் கணவருக்கு மாற்றலானதால் என் குழந்தைகள் 6 பள்ளிகளில் படித்தார்கள். மதுரையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எப்பொழுதும் முதல் rank வாங்குபவன் கணக்கில் மார்க் குறைந்து second rank வாங்கினான். கணக்கில் மார்க் குறைந்ததால் அந்த டீச்சரிடம் பேசாமல் இருந்தானாம். இதை அந்த டீச்சரே எங்கள் வீடு தேடி வந்து சொல்லி, கணேஷ் என்னுடன் பேசாதது எனக்கு வருத்தமா இருக்கு என்றார்!

ஈரோடில் 10th படிக்கும்போது 90சதம் மார்க்குகள் பெற்றான். பள்ளி ஆசிரியைகள் அவனை science க்ரூப் எடுத்துக் கொள்ள சொன்னார்கள். அவனோ தனக்கு பிடித்த காமர்ஸ் க்ரூப்தான் எடுத்துக் கொண்டான். ப்ரின்சிபால் அவனிடம் 'science எடுத்துக் கொண்டால் state1st வரலாம்' என்று சொல்ல, இவனோ commerceலேயே வந்து காட்டுகிறேன்' என்று சவால் விட்டு 1996ல் state first பெற்று எங்களுக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தான். அன்றைய முதல்வர் திரு. கருணாநிதி கையால் பரிசுகளும், கல்லூரிப் படிப்புக்கான தொகையும் பெற்று, என்னை ஈன்றபொழுதின் பெரிதுவக்க வைத்தான். மேலும் KKR Palmoil கம்பெனியாரால் மாருதி800 கார் பரிசாகப் பெற்றான். ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளியில் +2வில் முதலாக வந்த மாணவர்களில் என் இரு மகன்களின் பெயரும் உள்ளது.

அச்சமயம் என் கணவருக்கு மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூருக்கு மாற்றலாக, அங்கு B.Com. படித்து, XIM புவனேஸ்வரில் MBA முடித்து Education Consultantஆகப் பணிபுரிகிறான்.

No comments:

Post a Comment