Saturday 12 April 2014

மூன்றாம் பரிசு பெற்ற என் விமரிசனம்...

 திரு வை.கோபு சார் அவர்களின் கதைக்கு நான் எழுதிய விமரிசனம் மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!


கதைக்கான இணைப்பு 

 http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html


கதைக்கு என் விமரிசனம்...
 
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-11-03-03-third-prize-winner.html

 நாவினால் சுட்ட வடு...

குழந்தை பிறக்காத பெண்களின் மனநிலையையும், ஒரு சின்ன வார்த்தை வாய் தவறி கூறுவது அடுத்தவரின் மனதை எவ்வளவு காயப் படுத்தும் என்பதையே இக்கதையின்   கருவாக ஆசிரியர் கூறியுள்ளார். 

இரண்டு பெண்களின் நட்பை மிக அழகாகக் கோடிகாட்டியுள்ள  ஆசிரியர், அதே தோழி  குறும்புக்   குழந்தைகளுடன் வரும்போது, அதே நட்பு தொல்லையாக இருப்பதையும், நம் கதாநாயகிக்கு ரேவதியின் வருகை எவ்வளவு கலக்கத்தைக் கொடுக்கிறது என்பதையும்  மிக அழகாக எடுத்துச் சொல்கிறார். 

இரண்டு வயது கூட நிரம்பாத இரண்டுங்கெட்டானான இரட்டைக் குழந்தைகள் வரும்போதே இன்னிக்கு என்ன விஷமம் செய்யலாம் என்று வருவது வீட்டில் இருப்பவர்களுக்கு படு டென்ஷன் தான்! 

பொதுவாக குழந்தைகள் இல்லாத வீட்டில் எல்லா சாமான்களும் வைத்தது வைத்தபடித்தான் இருக்கும்.வெள்ளை டைல்ஸ் தரையும், அடுக்கி வைத்த  புத்தகங்களும் வீட்டுக்கு அழகில்லையே?

'கோலம் அழிக்க ஒரு குழந்தை இல்லையே' என்று ஏங்குபவர்களுக்குதான் குழந்தைகளின் அருமை தெரியும். அதிலும்  குறும்பு செய்யாத குழந்தைகள் உண்டா என்ன? .  

தன்  வீட்டில் விஷமம் செய்வது சரி...அடுத்தவர் வீட்டில் சென்று அப்படி இருக்கக் கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒரு தாயின் பொறுப்பு.நம் வீட்டில் தொல்லை விட்டால் சரி என்று வெளியார் வீட்டுக்கு அனுப்பிவிடும் தாய்மார்களும் உண்டு! ரேவதியின் நாத்தனார் அந்த ரகம் போலும்! 

தனக்கு குழந்தை இல்லாத ஒரு பெண் எந்தக் குழந்தையாக இருந்தாலும் தன்னை அறியாமல் தூக்கிக் கொஞ்சுவாள்; குழந்தைக்கு ஆசையுடன் உணவு ஊட்டுவாள்.ஆனால் நம் கதாநாயகிக்கு அந்தக் குழந்தைகளின் விஷமம்தான் பெரிய தலைவலியாக இருக்கிறது. மாறாக அந்தக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி அவற்றுடன் அன்புடன் நடந்து  கொண்டால் அந்தக் குழந்தைகளும் அவளிடம் பிரியத்துடன்,அவள் சொல்வதைக் கேட்டு நடக்குமே?அந்த வித்தை அவளுக்குத் தெரியவில்லை, பாவம்! 

தோழிகளின் அன்னியோன்னியத்திற்கு தடையாக இருக்கும் குழந்தைகளை அவள் விரும்பவில்லை. அன்று ஒரு குழந்தை மட்டுமே வந்ததால் இருவரும் பலநாட்களாகப்  பேசாத விஷயங்களை எல்லாம் மனம் விட்டுப் பேசமுடிந்தது.ரேவதியின் நாத்தனார் ஊருக்குப் போய்விட்டால் இந்தக் குழந்தைகள் அவளுடன் வராததுடன்,அவற்றின் விஷம அலங்கோலங்களும் இருக்காது! தோழிகளும் வெகு நேரம் மனம் விட்டுப் பேசலாமே என்ற சந்தோஷம் நம் ஹீரோயினுக்கு! 

தனக்கு பதிலாக இந்த வீட்டிற்கு வாழ வந்திருக்க வேண்டியவள் தன்  தோழி என்று  தெரிந்தும்,அவளைத  தன்  வீட்டுக்கு வரச் சொல்லி நட்பைத் தொடர்வதும், தன் கணவருக்கு அவளைப் பார்த்ததும் ஒரு உற்சாகம் ஏற்படுவது தெரிந்தும் அவர்களை சந்தேகப் படாமல் தன் வீட்டில் அனுமதிப்பதும் கதாநாயகியின் உயர்ந்த குணங்களாகக் கூறுகிறார் கதாசிரியர்.

அதே நேரம் தன்னைப் போன்றே ரேவதிக்கும்  குழந்தை இல்லாதது சந்தோஷமாக இருப்பதையும்,தங்கள் இருவருக்கும் ஒரு குழந்தை கூடப் பிறக்காதபோது ரேவதியின் நாத்தனாருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை சற்று மனத்தாங்கலாக (பொறாமை என்றுகூட சொல்லலாம்) இருவரும் பேசிக் கொள்வதையும்  ஒரு சராசரிப் பெண்ணின்  குணமாகக் கூறுகிறார் ஆசிரியர். பெரும்பாலான பெண்கள்   இந்தக் குணத்திற்கு  விதிவிலக்கல்ல.

வளைகாப்பின்  போது ,மருமணையில் அமர்த்தி வளைகாப்பு செய்வதும்,தொட்டில் போடும் அன்று அம்மிக்குழவியைக் குளிப்பாட்டச்    சொல்லி அலங்கரிக்கச் சொல்வதும்  இன்றும் கூட தொடரும் அநாகரீகமான செயல்கள்.பெண்களைக் கேவலப் படுத்தும் இந்த வழக்கங்கள்  தடை செய்யப்பட வேண்டும் என்பதை ஆசிரியரின் ஹை  லைட்   எழுத்துக்களில் இருந்து அறிய முடிகிறது. 

லாப்டாப்பை தள்ளிவிட்டு குழந்தை கட்டில் விளிம்பிலிருந்து எட்டிப் பார்ப்பதை கற்பனை செய்யவே மிக அழகாக இருக்கிறது!

தன் கணவரிடம் குழந்தை லாப்டாப்பை தள்ளிவிட்டதைச் சொல்லியதுடன், அந்தப் பச்சைக் குழந்தைமேல் அவள் சரமாரியாகக் குற்றம் சொல்லி தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது.

உனக்கு குழந்தைகளின் மதிப்பு தெரியவில்லை என்று சொன்ன கணவரின் மேல் எந்த மனைவிக்குதான் கோபமும், வருத்தமும்  வராது? தான் குழந்தைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும்போது அடுத்தவர்கள் பழிப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்வாள் ஒரு பெண்.அதற்கு ஆறுதல் தேடுவது அவள் கணவரிடம்தானே? இது இருவரும் சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே? 

லாப்டாப் சரியாக வேலை செய்வதை ரேவதியிடம் தன் கணவர் சொன்னது அவர் மனைவிக்கு பிடிக்கவில்லை.அந்த விஷயத்தை அவர் தன்னுடைய மனைவியிடம் சொல்லி ரேவதியிடம் சொல்லும்படி சொல்லியிருக்கலாம். 

அவர் சாதாரணமாகப் பேசினாலும், அவரது பிரகாசமான முகம் மனைவிக்கு எரிச்சல் ஏற்படுத்துவதை, ஒரு சராசரி மனைவி தன்  கணவன் வேறு பெண்ணிடம் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைக்கிறார் ஆசிரியர்.

யதார்த்தமாக அவர் சொன்ன வார்த்தை 'கவலைப்படாதே.லாப்டாப் உடையவும் இல்லை...நொறுங்கவும் இல்லை...ஒரு சின்ன கீறல் கூட இல்லை' என்பது.ஆனால் அந்தச் சின்ன வார்த்தை மனையின் மனதில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தி விட்டதே.

உடைந்து நொறுங்கியதோடு பெரிய கீறலும் விழுந்துவிட்ட மனைவியின் மனதை இறைவன் விரைவில் ஒரு மழலைச் செல்வத்தைக் கொடுத்து சரியாக்க வேண்டும்.

அவள் தோழி ரேவதியும் தாய்மைப் பேரு அடைய வாழ்த்துவோம் 

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் 
மழலைச் சொல் கேளாதவர் 

இந்த வள்ளுவரின் வாக்கு தாம் பெற்ற குழந்தைகளுக்குதான் பொருந்தும் போலும்!

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்டவடு.

நாம் யாரிடமும், எதையும் யோசிக்காது பேசக் கூடாது என்பதை கணவர் தன் மனைவியிடம் வாய்தவறிச் சொன்ன சொல் அவள் மனம் உடைய காரணமாகிவிட்டதை ஆசிரியர் இக்கதை மூலம் மிக அருமையாகச் சொல்லிவிட்டார்.
 
 


No comments:

Post a Comment