Tuesday 2 April 2019

குருவாயூருக்கு வாருங்கள்!

குருவாயூரப்பன் நாமம் பாடிடுவோமே|
குறையில்லா வாழ்வுதனை நாடிடுவோமே|

என்னப்பன் குருவாயூரப்பனைப்
பற்றி பாடவோ பேசவோ இந்த ஜன்மம் போதாது.
குருவாயூர் போகவேண்டும் என்று நிறைய நாட்களாக நான் சொல்லிக் கொண்டிருக்க, சென்றவாரம் திடீரென்று என் கணவர் 'நாம் நாளை குருவாயூர் செல்கிறோம்'என்றவரை நான் ஆச்சரியமாகப் பார்க்க, 'உன் ஆசையை நிறைவேற்றுவதே ஈசன் எனக்கிட்ட பணி'என்று தலை சாய்த்து சொல்ல என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

நாற்பது வருடங்களுக்கு பின் குருவாயூர் தரிசனம். என் எண்ணம் முழுதும் கிருஷ்ணஸ்மரணை. திருச்சியிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸில் பயணம். ரொம்....ப நாளைக்கு பிறகு ரயில் பயணம்..படித்துக் கொண்டும், தூங்கிக் கொண்டும், பக்கத்து சீட் பயணிகளுடன் பேசிக்கொண்டும்!

நாங்கள் அங்கிருந்த இரண்டு நாட்களும் குட்டிக் கண்ணனை தைலாபிஷேகம், சந்தனக்காப்பு, மலர் அலங்காரம், அத்தாழபூஜை என்று ஏழுமுறை வரிசையில் சென்று தரிசித்தும்,அவனை தரிசிக்கும் ஆவல் தணியவில்லை!

ஒவ்வொரு அலங்காரத்திலும் ஒவ்வொரு அழகில் மாயப் புன்னகை செய்கிறான் அந்த மாமாயன் மாதவன்! இந்த அழகுதான் அன்று ராதையையும் கோகுலத்து கோபியரையும் இவனிடம் காதல் கொள்ள வைத்ததோ!

குருவாயூரின் வரலாறு நாம் அறிந்ததே. ஸ்ரீகிருஷ்ணனால் பூஜிக்கப்பட்ட  பாதாளஅஞ்சனம் என்ற விலை மதிப்பற்ற கல்லினால் செய்யப்பட்ட சங்கு சக்கரம் கமலம் கதாயுதம் கழுத்தில் துளசிமாலை முத்து அட்டிகை தரித்த மகாவிஷ்ணுவின் திருச்சிலை, பிரகஸ்பதி மற்றும் வாயு பகவானால், ஶ்ரீமகாதேவரின் ஆணைப்படி பூலோகவைகுண்டம் எனப்படும் இத்தலத்தில் ருத்ரதீர்த்தத்தின் கரையில் நிறுவப்பட்டது. அதுவே குருவாயூரப்பன் இங்கு கோவில் கொண்ட வரலாறு.

குங்குமப்பூ, கஸ்தூரி, கோரோசனை, அகோவனம், செஞ்சந்தனம் ஆகிய ஐவகைத் திரவியங்களை பன்னீரில் கலந்து அரைத்த நறுமணச் சந்தனத்தையே குருவாயூரப்பனுக்குப் பூசுகிறார்கள்.

விடியற்காலை கருவறை திறந்தவுடன், முன்தினம் சாத்தப்பட்ட சந்தனக் கலவையைக் கண்டுகளிக்கலாம். குருவாயூரப்பனுக்கு நல்லெண்ணெயில் தைலாபிஷேகம் செய்யப்படுகிறது.

இந்த உஷத்கால பூஜையில் குருவாயூரப்பன் உற்சவ விக்ரகம், வெளிப் பிரகாரத்தை மூன்று முறை சுற்றிக் கொண்டு வரப்படுகிறது. அந்த நேரத்தில், அஷ்டதிக் பாலகர்களுக்கும், குரு, வாயு பகவான் ஆகியோருக்கும், பலிபீடத்தில் அன்னம் இடப்படுகிறது. இவ்வாறு பரிவார தேவதைகளுக்குச் செய்யப்படும் வழிபாடு ‘சீவேலி’ எனப்படும்.
ஆலயத்தின் அழகும் புனிதமும் நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

வரிசையில் நின்று அனைவருக்கும் ஒரே மாதிரியான தரிசனம்.சிறப்பு தரிசனம், தனிவரிசை எதுவும் இல்லை. Senior Citizens வரிசை ஆலயத்தினுள் பிரகாரத்தில் காலை 8-10, மாலை 6-8  உண்டு.
உள்ளே பூஜிக்கும் அர்ச்சகர்கள் மனம் ஒன்றி அவர்கள் கடமையை செய்வது மனநிறைவு. அர்ச்சனைகள் செய்யப்படுவதில்லை என்பதால் யாரும் எவரிடமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.

கர்ப்பகிரகத்தில் சந்தனம்,
அபிஷேகித்த பால் எதுவும் கொடுப்பதில்லை.தரிசனம் செய்துவிட்டு வெளிவரும்போது அபிஷேகமான சந்தனமும்,காலை தைலாபிஷேகம் ஆனதும் தைலமும்,பாலும்  இலவச பிரசாதமாகத் தரப்படுகிறது. அத்தைலம் தீராத நோய்களையும் தீர்க்க வல்லது.

உன்னிகிருஷ்ணனுக்கு நிவேதித்த நெய்பாயசம், பால்பாயசம்,
அப்பம்,அவல்,அடை,களபம்,வெண்ணெய்,திரிமதுரம்,சர்க்கரை பாயசம்,அபிஷேக எண்ணெய் அனைத்தும் விற்பனை செய்யப் படுகிறது.

ஆலயத்தின் கிழக்கு, மேற்கு வாசல்களில் அழகான உயர்ந்த தீபஸ்தம்பங்கள். சன்னிதிக்கு முன்பாக தங்கக் கவசம் பூட்டிய 100 அடி உயர கொடிமரத்தின் இருபக்கமும் தீபஸ்தம்பங்கள் அழகுற காட்சி தருகின்றன. கருவறைக்கு செல்லும் முகமண்டபத்தின் நுழைவாயில் மேல் இரு பெரிய தந்தங்கள் அழகுற அமைக்கப்பட்டு நடுவில் மகாலட்சுமியின் திருவுருவம் காட்சி தருகிறது.

இந்த வாயில்படி தாண்டியதும் இடப்பக்கமுள்ள திண்ணையில் அமர்ந்துதான் பட்டதிரி நாராயணீயம் எழுத, குழந்தை கண்ணன் அதைத் தலையசைத்து ஆமோதித்தானாம்!
விடிகாலை 3 மணிக்கு நிர்மால்யம். இரவு முழுதும் தேவர்கள் இறைவனை பூஜிப்பதாக ஐதிகம். காலை விஸ்வரூபம் காண்பது மிக புண்ணியமாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து தைலாபிஷேகம்,
வாகைசார்த்து, சங்காபிஷேகம், அலங்காரம், உஷத்கால பூஜை என்று
121/2 மணிவரை சிரித்த முகத்துடன் கையில் வாழைப்பழம் வெண்ணெய் குழல் இவற்றுடன் மாறுபட்ட அலங்காரங்களில் காட்சி தரும் அந்த சின்னக்கண்ணனை கையில் தூக்கிக் கொஞ்ச ஆசை வருகிறது!

மாலை 4 1/2 மணி முதல் மீண்டும் நமக்கு அருள தயாராகிவிடுகிறான் அந்த தாமோதரன்! பின் மாலை சீவேலி அத்தாழ பூஜை இரவு சீவேலி என்று 9.15 வரை நமக்கு தரிசனம் தரும் தயாபரனுக்கு அதன் பின்பே ரெஸ்ட்!

இந்த உன்னிகிருஷ்ணனின் லீலைகள் ஒன்றா..இரண்டா? அவற்றை பதிவு 2ல் தொடர்கிறேன்.

No comments:

Post a Comment