Friday 12 April 2019

ராமரிடம் கோபித்த அனுமன்!

முடிகொண்டான் ஶ்ரீகோதண்ட
-ராமஸ்வாமி ஆலயம்.

ஶ்ரீராமநவமி ஸ்பெஷல்..

ஶ்ரீராமருக்கு தமிழகத்தில் நிறைய ஆலயங்கள். முடிகொண்டானில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீகோதண்டராமர் ஆலயம் மிகச் சிறப்பு பெற்றது. அனுமன் இல்லாத மூலவரை இங்கு மட்டுமே தரிசிக்கலாம்.

ராமர் வனவாசம் சென்றபோது பரத்வாஜரின் ஆசிரமம் சென்றார். அச்சமயம் முனிவர் அவருக்கு விருந்து தர ஆசைப்பட்டார். ராமர் தாம் வனவாசம் முடித்து திரும்ப வரும்போது அவர் ஆசை நிறைவேறும் என்றார்.

ராவணவதம் முடித்து சீதையுடன் அயோத்தி திரும்பும்போது அனுமனை அவ்விஷயத்தை பரதனிடம் சொல்லும்படி அனுப்பிவிட்டு புஷ்பக விமானத்தில் பரத்வாஜ ஆசிரமம் வந்தார் ஶ்ரீராமபிரான். முனிவரிடம் தாம் ரங்கநாதனை வழிபட வேண்டும் என்று கூற அவரும் ஶ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்கிறார். பூஜை முடித்து ராமர் விருந்து உண்டார்.

அப்போது திரும்ப வந்த அனுமன் தன்னை விட்டு ராமர் விருந்து சாப்பிட்டதால் கோபித்து ஆசிர
-மத்திற்குள் வராமல் வெளியில் நின்றுவிட்டார். பின்பு ராமர் அவரை சமாதானம் செய்து தன் உணவில் பாதியைக் கொடுத்தாராம்! தனக்கு ராமர் அவரை அடுத்து இலை போட்டு வைக்காததால் கோபத்தில் அவ்வூரில் 'வாழைமரம் வளராது' என்று சபித்து விட்டாராம் ஞ்சனை மைந்தன்! இன்றுவரை முடிகொண்டானில் வாழை மரங்கள் வளர்வதில்லையாம். அதனால் அனுமன் சன்னிதி எதிரில் தனியாக உள்ளது.

பரத்வாஜர் வேண்டிக் கொண்டதால் பட்டாபிஷேகத்திற்கு முன்பே இத்தலத்தில் மகுடம் சூடி காட்சி கொடுத்த கோதண்டராமருக்கு 'முடி கொண்ட ராமர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஊரும் முடிகொண்டான் என ஆயிற்று.

வலப்பக்கம் சீதையும் இடப்பக்கம் இலட்சுமணருமாக கழுத்தும், இடுப்பும், காலும் வளைந்து 'உத்தம லட்சணம்' என்ற சிறப்பான வடிவத்தில் அற்புத அழகில் ஜொலிக்கும் உற்சவர் கண்களோடு நம் மனதையும் கொள்ளை கொள்கிறார். எதிரில் கோபத்திலும்  பணிவாக கைகுவித்து நிற்கும் ஆஞ்சநேயர் தாசானுதாசன். ராமனுக்காக ஶ்ரீரங்கநாதரை பரத்வாஜ முனிவர் உருவாக்கிய சிறப்பு பெற்ற தலம்.

வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட பரத்வாஜ ஆசிரமம் இருந்தது இவ்வூரே எனக்கூறப்படுகிறது. ஶ்ரீராமர் பல ஆலயங்களிலும் தெற்கு நோக்கி காட்சி தருவது இலங்கையில் ஆட்சி புரியும் விபீஷணன் வேண்டியபடி தன்னை வணங்குவதற்காக என்பர். மாறாக  இவ்வாலயத்தில் மட்டுமே ஶ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கியும் ராமர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

இவ்வாலயத்தில் ஶ்ரீராமநவமி பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பே தோன்றிய தலம்.இங்கு வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் என்றும் வெளிநாட்டில் படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட நிச்சயம் நிறைவேறும் எனப்படுகிறது. கலைகளில் சிறந்து விளங்க இத்தல இறைவன் அருள்பாலிப்பது கண்கூடு.

முடிகொண்டான் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணபுரம் சிறுபுலியூர் திவ்ய தேசங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து 20கி.மீ. தூரத்தில் திருவாரூர் ஹைவேயில் முடிகொண்டான் உள்ளது.

No comments:

Post a Comment