Saturday 6 April 2019

குருவாயூருக்கு வாருங்கள்..2


குருவாயூருக்கு வாருங்கள்...
பதிவு..2
பதிவு 1..Link
https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=1058905997630547
சென்ற பதிவில் குருவாயூர் ஆலயம் பற்றி அறிந்தோம். இந்த உன்னிகிருஷ்ணனின் லீலைகள் ஒன்றா..இரண்டா?
வடக்கு பிரகாரம் யானைப்பந்தல் மண்டபம். இதன் மேல் ஒரு சதுர துவாரம் உள்ளது. ஆதிசங்கரர் ஒருநாள் ச்ருங்கேரிக்கு வான்வழியே சென்றபோது  குருவாயூர் ஆலயத்தில் சீவேலி நடக்க, கீழே இறங்காமல் அலட்சியமாய் சென்றார்.
அவர் அகந்தையை அடக்க எண்ணிய இறைவன் அவரைக் கீழே விழும்படி செய்தார். மூர்ச்சை தெளிந்த சங்கரருக்கு விஷ்ணு தரிசனம் கிடைத்தது. அங்கு 41 நாட்கள் தங்கி பூஜைமுறைகளை வகுத்து, கோவிந்தாஷ்டகம் இயற்றினார். இன்றும் அந்த துவாரத்தை அங்கு காணலாம். அதற்கு அடையாளமாக கீழே ஒரு சதுரம் வரையப்பட்டுள்ளது. இன்றும் சீவேலி செல்லும்போது வாத்ய இசையை அவ்விடம் வரும்போது நிறுத்தி விட்டு செல்வார்களாம்.
மேல்பத்தூர் நாராயண பட்டதிரி தன்குருவின் வாதநோயைத் தான் பெற்றுக் கொண்டு குருவா
யூரப்பனின் முன்பு அமர்ந்து தினமும் பாகவதத்தை ஆதாரமாகக் கொண்டு நாராயணீயம் பாட, அழகுக்கண்ணன்
தலையசைத்துஆமோதிக்க
அவரது நோயும் தீர்ந்தது..நமக்கு நாராயணீயம் என்ற அற்புதப் பொக்கிஷம் கிடைத்தது. மகா பெரியவர் குருவாயூருக்கு சென்று தரிசனம் செய்ததுடன் நாராயணீயத்தின் மகிமையை பலமுறை எடுத்துச் சொல்லியுள்ளார்.
குருவாயூரப்பன் தரிசனம் முடித்து கருவறையை வலம்வரும்போது நேர்பின்னால் செதுக்கப்பட்டிருக்கும் பள்ளிகொண்டபரமனின் அழகு சொக்க வைக்கிறது.அருகிலுள்ள தசாவதாரத் தூண்களும் அழகு.
1970ல் ஆலயத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அந்த மண்டபத்தில் தூணிலுள்ள  மரத்தாலான சிற்பங்கள் சிதிலமடைய, பிரச்னத்தில் வந்தபடி கருங்கல் சிலைகள் பதிக்கப்பட்டன.
அச்சமயம் தசாவதாரங்களில் கண்ணனுக்கென கம்சவத காட்சி சிலை செதுக்கப்பட்டதாம். அச்சமயம் அங்குவந்த சிறுவன் ஒருவன் அங்கு வேணுகோபாலன் செதுக்கப்பட்ட தூணை வைக்கச் சொல்ல, அப்படி ஒரு தூண் செய்யவில்லையே என சிற்பி கூறினார். அச்சிறுவன் சிற்ப
சாலையில்  அந்த தூணைக்காட்டி மறைந்து விட்டான்.
அழகு நிறைந்த அந்தச் சிலை அந்த கோபாலனாலேயே உருவாக்கப்பட்
டதாக நம்புகிறார்கள். சமீப காலத்தில் நடந்த இந்த சம்பவம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
மஞ்சுளா வாரியர் என்ற பெண்மணி தினமும் குருவாயூரப்பனுக்கு இரவில் சார்த்த மாலை கொண்டு வருவாள். ஒருநாள் கோவில்நடை சார்த்திவிட அவள் மனம் கலங்கி நின்றபோது அவ்வழி வந்த பூந்தானம் அடியார் அவள் நின்றிருந்த ஆலமரத்தடியையே கண்ணனாக பாவித்து மாலையை சார்த்தச் சொன்னார். அவளும் அப்படியே சார்த்தினாள்.
மறுநாள் காலை மேல்சாந்தி, அய்யன் மேலிருந்த மாலைகளை அகற்றும்போது ஒரு மாலை மட்டும் எடுக்க முடியவில்லை. அங்கிருந்த பூந்தானம்...அது மஞ்சுளாவின் மாலையெனில் கீழே விழட்டும்...
என்று சொல்ல அது கீழே விழுந்தது. அந்த சம்பவத்தின் சாட்சியாக இன்றும் அந்த ஆலமரம் உள்ளது. அதனடியில் ஒரு பெரிய கருடன் சிலையும், மறுபக்கம் பூந்தானத்தின் உருவமும் உள்ளது. அந்த மரத்தடி..மஞ்சுளா ஆல்.. எனப்படுகிறது.
இறைவனே விருப்பப்பட்ட இளநீர் அபிஷேகம் இவ்வாலயத்தில் ஆராட்டு நாளன்று நடக்கிறது. அதற்கான இளநீர் காய்களை இழவ சமூகத்தைச் சேர்ந்த தம்புரான் படிகள் குடும்பத்தினரே இன்றுவரை அளித்து வருகின்றனர்.
அந்த நாட்களில் அந்த சமூகத்தினருக்கு ஆலயத்தில் நுழைய அனுமதி இல்லை. ஆராட்டு நாளன்று ஆலய அர்ச்சகர் ஒருவர் கிட்டை என்ற தென்னை மரமேறியிடம் சுவாமிக்கு இளநீர் அபிஷேகத்திற்கு சில தேங்காய்களைக் கேட்டார்.கிட்டை அவரது வேலையில் கவனமாக இருந்ததால் இவரை கவனிக்க
வில்லை.அர்ச்சகர் சிறிது நேரம் நின்றுவிட்டு திரும்பிவிட்டார்.
அப்பொழுது திடீரென்று தேங்காய்கள் மடமடவென்று கீழே விழ, பயந்த கிட்டை அவற்றை எடுத்துக்கொண்டு ஆலயம் சென்று நடந்ததை சொன்னபோது, அர்ச்சகர் எவரும் அவர் இருப்பிடம் செல்லவில்லை எனத் தெரிய வந்தது. கிருஷ்ணனே இளநீர் அபிஷேகத்திற்கு ஆசைப்பட்டு நிகழ்த்திய இந்த சம்பவத்தை உணர்ந்தனர். அதுமுதல் ஆராட்டு நாளன்று இளநீர் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஆரம்பமானது.
பூந்தானம் நம்பூதிரி குருவாயூரப்பனிடம் மிக ஆழ்ந்த பக்தி உடையவர்.மிக எளிமையாக எழுதுபவர். அவர் தான் எழுதிய ஞானப்பானையை படித்து தவறு இருப்பின் சரி செய்யும்படி பட்டதிரியிடம் கேட்டார். அவரது திறமையைப் பற்றி ஏளனமாகப் பேசிய பட்டதிரி மறுத்துவிட்டார். மனம் வருந்திய பூந்தானம் கண்ணனிடம் இது பற்றி முறையிட்டார்.
அன்றிரவு வழக்கம் போல் நாராயணீயத்தை பட்டதிரி படித்தபோது அவர் அருகில் வந்து அமர்ந்த சிறுவன் ஒருவன் முதல் சுலோகத்தில் ஒரு தவறு.. இரண்டாவதில் இரண்டு தவறு..மூன்றாவதில் மூன்று தவறு என்று சொல்லிக் கொண்டேபோக, வந்திருப்பவன் பாலகிருஷ்ணன் என்றுணர்ந்த பட்டதிரி, உடன் பூந்தானத்திடம் சென்று மன்னிப்பு கேட்டு அவரது ஞானப்பானையை படித்து அதில் எந்தத் தவறும் இல்லாததை ஒப்புக் கொண்டார்.
மற்றொருமுறை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வரும்...பத்மநாப அமரப்ரபு...என்பதை ..பத்மநாபோ மரப்ரபு...மரங்களின் கடவுள் என்ற பொருளில் படிக்க,பட்டதிரி ஏளனமாக சிரித்தபடி...நீ சொல்வது தவறு. அது மரப்ரபு அல்ல,  அமரப்ரபு...என்று சொல்ல..கருவறையிலிருந்து குருவாயூரப்பன்...நான் மரப்ரபுதான்..என்று சொன்னார். பட்டதிரியைவிட பூந்தானத்தின் பக்தியை இறைவன் அதிகம் விரும்பினார் என்பதை பட்டதிரி அறியவே இந்தத் திருவிளையாடல்!இந்த சம்பவத்தை உணர்த்தும் விதமாக டெர்ரகோட்டாவினால் செய்யப்பட்ட  உயரமான மரப்ரபு சிலை ஸ்ரீவல்ஸம் கெஸ்ட் ஹவுஸில் நிறுவப்பட்டுள்ளது.
50 வருடங்களுக்கு மேல் ஐயனைச் சுமந்த கிரிராஜன் கேசவன் குருவாயூர் ஏகாதசி அன்று குருவாயூரப்பனைப் பார்த்படியே இறைவனடி அடைந்தது. கேசவனுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வில்வமங்கலம் சுவாமி
களுக்கும்,குருரம்மைக்கும் மட்டுமே  கிருஷ்ணன் பல வடிவங்களிலும் காட்சி கொடுத்திருக்கிறார். வில்வமங்கலம் ஒருநாள் கருவறையுள் கண்ணனைத்தேட  அந்த உன்னிகிருஷ்ணனோ கால்களில் சலங்கையுடன் சுட்டம்பலம் என்ற வடக்கு பிரகாரத்தில் நடனமாடிக் கொண்டிருந்தாராம்! அதுமுதல் அவ்விடம்  'நிருத்தம்' என அழைக்கப்பட்டது. வில்வமங்கலம் தியானத்தில் இருக்கும்போதும் தனை மறந்து கண்ணனைப் பாடிக்கொண்டு ஆடும்போதும் பலமுறை கண்ணன் தரிசனம் கொடுத்ததுண்டாம்.
மற்றொரு முறை கண்ணனைக் காணாமல் தேட அவனோ கிழக்குநடையில் கிருஷ்ண
னாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தானாம். இப்படி அடிக்கடி கருவறையை விட்டு ஓடிவிடுவதால் அதுமுதல் கிருஷ்ணனாட்டம் கருவறை பூஜைகள் முடித்து மூடப்பட்டபின்பே நடக்க ஆரம்பித்ததாம்!
குருரம்மாவுக்கு குழந்தை வடிவில் வந்து வேலைகளைச் செய்து கொடுத்தும், குறும்புகள் செய்தும், அவர் அடித்தபோது சிரித்து மகிழ்ந்தும், ஒரு மகனைப்போல் அவளுக்கு வேலைகளை செய்து கொண்டும் அந்த பாலகிருஷ்ணன் லீலைகள் புரிந்தானாம்!
ஒரு விவசாயி தன் தென்னந்
தோப்பில் இருக்கும் மரங்களின் முதல்காயை குருவாயூரப்பனுக்கு அர்ப்பணிப்பதாக வேண்டிக
கொண்டான். தேங்காய் மூட்டைகளுடன் குருவாயூர் வரும் வழியில் திருடன் ஒருவன் வழிமறித்தான்...இவை குருவாயூரப்பனுக்கு காணிக்கை...
என விவசாயி சொல்லியும் கேட்காத திருடன் ...இந்தத் தேங்காய்க்கென்ன கொம்பா முளைத்திருக்கு...என்றபடி மூட்டையைப் பிரிக்க அத்தனை தேங்காயும் கொம்புகளோடு இருந்ததாம்! இதன் சாட்சியாக இன்றும் ஆலயத்தில் ஒரு கொம்புத் தேங்காய் பக்தர்களின் பார்வைக்காக உள்ளது.
ஒரு சிறுவன் பசி பொறுக்க முடியாமல் ஒரு கடையிலிருந்து வாழைப்பழத்தை திருடி விட்டான். குருவாயூரப்பனின் பக்தனான அவன் கோவில் உண்டியலில் பாதி பழத்தைப் போட்டுவிட்டு மீதியை தான் சாப்பிட்டுவிட்டான். இது தெரிந்த கடைக்காரன் அவனுக்கு தண்டனை கொடுக்க எண்ணி, ஆலயத்தை சில சுற்றுகள் சுற்றச் சொன்னான். அச்சமயம் அந்தப் பையனின் பின்னாலேயே குருவாயூரப்பன் சுற்றுவதைக் கண்டு பதறிவிட்டான்.அன்றிரவு அவன் கனவில் தோன்றிய கண்ணன்...பாதி பழத்தை நானும் சாப்பிட்டதால் ஆலயத்தை சுற்றி வந்தேன்..என்றார்!
வில்வமங்கலத்தின் நண்பரான மானதேவன் என்ற அரசர் தானும் கண்ணனைப் பார்க்க ஆசைப்
படுவதாயும்,வில்வமங்கலம் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டினார்.வில்வமங்கலம் ....கண்ணன் மறுநாள் விடிகாலை இலஞ்சி மரத்தடியில் விளையாடும்போது  நீங்கள் காணலாம். ஆனால் தொடக்கூடாது...என்றார். அதேபோல் மறுநாள் கண்ணன் விளையாடும்போது மன்னர் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணனை ஆலிங்கனம் செய்து கொள்ள...நீ என்னைத் தீண்டுவாய் என்று வில்வமங்கலம்
சொல்லவில்லை...என்றபடி
மறைந்து  விட்டார் கிருஷ்ணர். அணைக்கும்போது  கிருஷ்ணனின் மயிற்பீலி ஒன்று மன்னன் கையில் கிடைத்தது. அது இன்றுவரை நடைபெறும் கிருஷ்ணனாட்டத்தின் கிருஷ்ணனின் தலைகிரீடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மானதேவர் இயற்றிய 'கிருஷ்ணகீதி' என்ற கிருஷ்ணன் கதை 8 அத்தியாயங்கள் கொண்டது. அவதாரம், காளியமர்த்தனம்,
ராஸக்ரீடா, கம்ஸவதம்,ஸ்வயம்வரம்,
பாணயுத்தம், விவிதவதம்,
ஸ்வர்காரோகனம். இவை இன்றுவரை குருவாயூரில் ஆலயத்தில்  இரவு கருவறை நடை சாத்தியபின் பக்தர்கள் வேண்டுதலாக கிருஷ்ணனாட்டம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
உபன்யாச சக்கரவர்த்தி சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் தொழுநோயால் பாதிக்கப்
பட்டிருந்தபோது நாராயணீயத்தை பாராயணம் செய்து குருவாயூரப்பன் அருளால் நோய் முற்றிலும் நீங்கப் பெற்றார்.குருவாயூர் மற்றும்  நாராயணீயத்தின் மகிமையை நம் தமிழ்நாட்டில் பரவச் செய்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு.
செம்பை வைத்யநாத பாகவதர் நாம் அனைவரும் அறிந்த பிரபலமான பாடகர். அவர் ஒருமுறை  திருச்செங்கோட்டில்... பாவன குருபவன புராதீச மாஸ்ரயே...என்று கச்சேரி  செய்து கொண்டிருந்தபோது திடீரென்று குரல் வெளிவராமல் நின்றுவிட்டது. பல மருத்துவர்களிடம் காட்டியும் குணமடையவில்லை.
அச்சமயம் அவர் குருவாயூர் சென்று கண்ணனிடம்...உன் பெயரைப் பாடும்போதுதான் என் குரல் நின்றது. அதனைத் தொடர்ந்து பாட மீண்டும் குரலைக் கொடு.என் வாழ்நாள் முழுதும் கிடைக்கும் சம்பாத்தியத்தை உன் ஆலயத்திற்கு தருகிறேன்...என மனமிறைஞ்சிக் கதற, அவரது குரல் அக்கணமே  திரும்பக் கிடைத்தது.  இறுதிவரை சொன்ன சொல்லை நிறைவேற்றினார். ஆலயத்தில் அவரது திருவுருவப்படம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாத குருவாயூர் ஏகாதசி சமயம் நடக்கும் பத்துநாள் உற்சவம் 'செம்பை ஏகாதசி இசைவிழா' என்ற பெயரில் நடைபெறுகிறது.
ஐயனை தரிசித்து விட்டு வெளிவருமபோது பிரகாரத்தில் ஆல்ரூபம் என்ற பெயரில் உடல்உறுப்புகள் வீடு தொட்டில் போன்றவற்றின் வெள்ளி உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. நமக்கு என்ன நோய் அல்லது குறை தீர வேண்டுமோ அதைக் கைகளில் எடுத்து மனமொன்றி வேண்டிக் கொண்டு, நம்மால் முடிந்த காணிக்கை உண்டியலில் சேர்க்க வேண்டும்.
ஒரு வெண்கல உருளி நிரம்ப குந்துமணி வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கும் ஒரு கதை உண்டு.
குருவாயூரப்பனிடம் மிகவும் பக்தியுள்ள ஒரு முதியவள் 
மிகவும் ஏழை. எல்லாரும் கோபாலனுக்கு விலை உயர்ந்த பொருட்களைக் காணிக்கையாகக் கொடுப்பதைப் பார்த்து தானும் ஏதாவது கொடுக்க நினைத்தாள். அச்சமயம் குந்துமணிகள் ஒரு மரத்திலிருந்து நிறைய கீழே விழுந்திருப்பதைக் கண்டு, அவற்றை தினமும் எடுத்து அலம்பி ஒரு பையில் வைத்திருந்தாள்.
வெகுதூரத்திலிருந்து அவற்றை சமர்ப்பிக்க குருவாயூர் சென்றநாள் விஷு. அன்று அவ்வூர் மன்னன் வழிபட  வருவதால் அனைவரையும் வழிவிடச் சொல்லி தள்ளினர். நிலைதடுமாறிய முதியவள் கீழே விழ குந்துமணிகள் கீழே கொட்டிவிட்டது. அச்சமயம் திடீரென்று அரசன் ஏறிவந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. மன்னன் அஞ்சி மணிவண்ணனை வேண்ட, கருவறையிலிருந்து...எங்கே என் குந்துமணிகள்?...என்ற குரல் கேட்டது.
அனைவரும் தவறை உணர்ந்து அந்த முதியவளை அழைத்து அவளது குந்துமணிகளைத் திரட்டி இறைவன் முன் வைத்தபின்பே யானை சரியானது. அதுமுதல் அப்பனை அன்புடன் பக்தி செய்த மூதாட்டியின் பெருமையை அனைவரும் அறிய குந்துமணிக்கு இறைவன் சன்னிதியில் இடம் கிடைத்தது.
பள்ளியில்படிக்கும் குழந்தைகள் இந்த மணிகளை இரு கையாலும் அள்ளி எடுத்து மும்முறை அதிலேயே போட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
சோறூட்டல் எனும் அன்னபிராசனம், அங்கபிரதட்சணம், துலாபாரம்,திருமணம்  இவை இவ்வாயத்தில் சிறப்பான வேண்டுதல்கள்.
குருவாயூரின் சிறப்புகளையும் உன்னிகிருஷ்ணனிடம் பக்தி வைத்தவர்களிடம் அவன் காட்டிய கருணைக்கும் எல்லையே இல்லை.அவனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அவன் அருமையும் பெருமையும் நிறுத்த முடியாமல் தொடர்ந்து பதிவு நீளமாகி விட்டது🙏
🙏🙏ஶ்ரீக்ருஷ்ணாய துப்யம் நம:🙏🙏

No comments:

Post a Comment