Tuesday 16 April 2019

சங்கி ஶ்ரீராமர் ஆலயம் சிங்கப்பூர்

ஶ்ரீராமநவமி ஸ்பெஷல்...

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகமென்பதால் இந்துக்கடவுளரின்
ஆலயங்கள் நிறைய உண்டு. அதில் சங்கியிலுள்ள ஶ்ரீராமருக்கான
ஒரே  கோயில் மிகப் பிரசித்தமானது.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரச மரத்தடியில் வைத்து சங்கி கிராம மக்களால்  ஆராதிக்கப்பட்ட  மூர்த்தி இவர்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் பணி புரிந்த ராமா நாயுடு என்பவர் ராமருக்கு ஆலயம் கட்ட விரும்பினார். இரண்டாம் உலகப்போர் முடிந்த சமயம் ஆங்கிலேயர்களிடமிருந்து இவ்விடத்தை வாங்கி ஆலயம் கட்டினார்.

அருகிலிருந்த தமிழர்களும் பங்கு பெற்று உதவி செய்ய அழகிய கோவில் உருவாயிற்று.

கட்டுமானப் பணிகளை மதுரையிலிருந்து சென்று பார்வையிட்ட  ஆலய வாஸ்து சாஸ்திர கட்டிடக்கலை வல்லுனர்கள் இவ்வாலயம் கிழக்கு நோக்கி, கடலைப் பார்த்து அமைந்துள்ளது மிகவும் தெய்வீகமானது மற்றும் அங்கு வாழும் மக்களைப் பாதுகாக்கும் கடவுள் என்று கூறியுள்ளனர்.

அதுமுதல் ஆலயத்தின் சிறப்பை பலரும் அறிய அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாயிற்று. இந்துக்களுக்கான திருமணம், முன்னோர் காரியங்களும் அங்கு செய்து வைக்கப் படுகிறது.

ராமநவமி, நவராத்திரி, ஹனுமத் ஜெயந்தி, சண்டி ஹோமம்  போன்ற உற்சவங்களும் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

ஆலயத்துள் நுழைந்ததும் அரசமர விநாயகர் அருட்காட்சி தருகிறார். அடுத்து புத்தர் ற்றும் Quan in (Goddess of Mercy) உருவங்கள் அமைந்துள்ளன. இந்துக்கள் அல்லாதவரும் வணங்க இவற்றை அமைத்துள்ளனர்.

இருகை கூப்பிய ஓங்கி உயர்ந்த அனுமன் கண்ணுக்கு விருந்து. ஶ்ரீகோதண்டராமர் வலப்பக்கம் இனியவளும் இடப்பக்கம் இளையவனும் நிற்க கோதண்டமும் பாணங்களும் கொண்டு அழகுறக் காட்சி தருவதைக் காண கண் கோடி வேண்டும்.

இவை தவிர சிவன் அம்பிகை ஶ்ரீராகவேந்திரர் வைஷ்ணவி துர்க்கை சந்நிதிகளும் அமைந்துள்ளன.

சிங்கப்பூரில் நான் கண்டு வியந்த விஷயம் சிவபெருமானும் விஷ்ணுவும் வேறுபாடின்றி எல்லா ஆலயங்களிலும் சன்னிதி கொண்டிருப்பது! ஒவ்வொரு கடவுளின் அழகும் அலங்காரங்களும் நம்மை நகரவிடாமல் நிற்கச் செய்கின்றன.

ஆலயத்தின் சுத்தமும் அடிக்கடி பிரசாத விநியோகமும் சிறப்பான விஷயங்கள். அங்குள்ள இந்து மக்கள் திரளாக வந்து வழிபடுகின்றனர்.

சென்ற ஆண்டு நான் ராமநவமிக்கு இவ்வாலயம் சென்றபோது அபிஷேகங்கள் அற்புத அலங்காரம் ஹோமங்கள் முறையாக சிறப்பாக நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணைத்துள்ளேன்.


எல்லாம் முடிந்தபின் பிரசாதமாக இலை போட்டு சாப்பாடு!  சிங்கப்பூர் செல்வோர் அவசியம் தரிசிக்க வேண்டிய அழகான ஆலயம்!
ஆலயம் East Coastல் சங்கி கடற்கரை அருகில் உள்ளது.

No comments:

Post a Comment