Sunday 12 May 2019

அன்னையர்தினஸ்பெஷல்


அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்!

அன்புள்ள அம்மா...

அம்மா என்றதும் நமக்குள் ஊற்றெடுத்துப் பிரவாகமாக ஏற்படும் உணர்வு....அது வேறு எந்த உறவுக்கும் ஏற்படாது.

ஐயிரண்டு மாதங்கள் சுமந்து, தன்  உதிரத்தால் பாலூட்டி, நம் தேவைகளை அவ்வப்போது அறிந்து அதற்கேற்ப அவற்றை நிறைவேற்றி நமக்காகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து முடிக்கும் நம் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள் அன்னையர் தினம்.

நம் கூடவே இருக்கும்போது தெரியாத அம்மாவின் அருமையை அவள் மறைந்த பின்பே உணர முடிகிறது என்பது கசப்பான உண்மை.

நம்மை தாலாட்டி, சீராட்டி, நல்லவைகளை சொல்லி வளர்த்து நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, நாம் உயர்ந்தால் தான் மகிழ்ந்து, நம் கண்ணீரை தன்  ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல்சொல்லித் துடைத்து...😞

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டு மறைந்த என் அம்மாவின் ஞாபகம் என்னை அம்மாவுடன் வாழ்ந்த அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கிறது.

சின்னப் பெண்ணாய் இருந்தபோது, கனிவும், கண்டிப்புமாய் என்னை அரவணைத்து வழி காட்டியவள். நல்லன சொல்லி அல்லனவற்றை நீக்கியவள்.

பலமுறை அம்மாவின் கண்டிப்பு கோபத்தை ஏற்படுத்தினாலும் நான் தாயானபோது அதன் அவசியத்தை உணர்ந்தேன்!

என்னை நேரில் பாராட்டாமல், அடுத்தவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிய அம்மாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்!

வேறு யாரிடமும் சொல்ல முடியாத தன் மன ஆதங்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது ஆறுதல் சொல்லியிருக்கிறேன்!

தன் சந்தோஷங்களை உடனுக்குடன் குழந்தையைப்போல் சிரித்துக் கொண்டே சொல்லி மகிழ்ந்த சமயம் நானும் இணைந்து மகிழ்ந்தி
-ருக்கிறேன்.

என் திருமணத்தன்று என்னைப் பிரியும் சமயம் கலங்கி அழுத அம்மாவைப் பார்த்து என் மன வருத்தத்தை வெளிக் காட்டாமல் சென்றாலும், பலநாட்கள் அவளை நினைத்து அழுதிருக்கிறேன்.

என் குழந்தைகளின் உயர்வில் என் அம்மா அடைந்த மகிழ்ச்சியில் நான் ஆனந்தப் பட்டிருக்கிறேன்!

2005 ம் ஆண்டு  எட்டாம் தேதி அன்னையர் தினத்துக்கு அம்மாவிடம் தொலைபேசியில் பேசி வணங்கியபோது அம்மா சற்று உற்சாகம்  இல்லாதது போல தெரிந்தாலும், அடுத்த எட்டே நாட்களில் அம்மா என்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணியும் பார்க்கவில்லை.

என் அம்மாவின் 68ம் வயதில்..2000ல் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. பல டாக்டர்களையும் சோதனைகளையும் செய்தபின் என் அம்மாவின் இருதய வால்வில் கசிவு ஏற்பட்டு அது ஃபங்கஸாகி பரவியிருப்பதாக தெரிந்தது.

அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்ட தஞ்சை டாக்டர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்யும்படி கூறினார். அவர்கள் பல சோதனைகளைச் செய்தபின் bypass surgery செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

என் அம்மாவுக்கு ஊசி போட்டுக் கொள்ளவே பயம். இதில் ஆப்பரேஷன் என்றதும்...வேண்டாம். எனக்கு தேவையில்லை...என்று சொல்லிவிட்டார்.

பின் மருந்து மாத்திரை ஊசி என்று சாப்பிட்டதில் சிறிது முன்னேற்றம் இருந்தது. 2004ல் மும்பையில் நடந்த என் மகள் திருமணத்திற்கு டாக்டர் ...ஃப்ளைட்,ரயிலில் ஜெர்க் இருக்கும்.போக வேண்டாம்... என்று சொல்லியும்..என் முதல் பேத்தி திருமணம். எனக்கு என்ன ஆனாலும் சரி. நான் போகவேண்டும்...என்று டாக்டரிடமே சொல்லிவிட்டு வந்தார்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் கடைசியில் நடந்த என்மகன் நிச்சய
தார்த்தத்திற்கு வந்தவர்...பேரன் கல்யாணமும் பார்த்து விட்டால் எனக்கு மிகவும் சந்தோஷம்...என்றார்.

ஆனால் மே15 திடீரென்று உடல்நிலை மோசமாகி, என் தம்பியும் அவன் மனைவியும் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய முடிவு செய்து, அழைத்துச் சென்றபோது அங்கு தங்கவேண்டி வருமென்று ஒரு செட் புடவை, சீப்பு, கண்ணாடி, குங்குமம்,விபூதி, சத்யசாயிபாபா படம் அத்தனையும் எடுத்துச் சென்றாராம்.

அவ்வளவு நம்பிக்கையுடன் சென்றவர்...ஆஸ்பத்திரியில் வீல்சேரில் போகும்போதே தலை சாய்ந்துவிட..உடன் எமர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்து எத்தனையோ முயற்சித்தும் இறந்து விட்டார்.அம்மாவை எப்போதும் பிரிந்திராத என் அப்பா இச்செய்தி கேட்டு அதிர்ச்சியாகி விட்டாராம்.

என் அம்மா காலமான செய்தியைக் கேட்டபோது உள்ளத்தில் ஒரு வெறுமை சூழ்ந்த உணர்வு ஏற்பட்டது. மனதின் துக்கத்தையும் என்னால் அடக்க முடியவில்லை. மும்பையிலிருந்து சென்னை வருவதற்குள் ஒரு யுகம் போலிருந்தது. அம்மாவை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தபோது உள்ளம் உடைந்து நொறுங்கி அழுதுவிட்டேன்.

மறுநாள் காரியங்கள் செய்ய அம்மாவை வெளியில் எடுத்தபோது அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டேன்.

இனி அம்மாவிடம் ஏதும் பேச முடியாது, எதையும் சொல்ல முடியாது, நமக்கு ஆறுதல் சொல்லவும், அன்பாய் தலை கோதவும் இனி அம்மா இல்லை என்பதை நினைக்கும்போது 'இதுதான் யதார்த்தம்' என்று மனம் சொன்னாலும் கண்கள் அழுவதை நிறுத்த முடியவில்லை.

ஒவ்வொருமுறை நான் அம்மாவைப் பார்க்க வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போதும் என்னைக் கட்டியணைத்து கண்கலங்கி வழியனுப்பும் அம்மாவை இனி காண்பது எங்கே..எப்போ😩😰

அம்மா என்ற உறவுக்கு அழிவு ஏது? அன்றும், இன்றும், என்றும் இறுதிவரை அம்மாவின் அன்பும், அரவணைப்பும்,பாசமும் மறக்க முடியாது.எத்தனை உறவுகள் சுற்றிலும் இருந்தாலும் அம்மா என்ற வார்த்தைக்கு இணை ஏது?

அன்னையே உனக்கு நமஸ்காரம்🙏

No comments:

Post a Comment