Wednesday 28 August 2019

ஆடி வெள்ளி சிறப்பு


ஆடி பிறந்தாலே பண்டிகைகளும் வரிசைகட்டி வந்துவிடும்.
ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரமும், விழாக்களும் ஆரம்பமாகி விடும். 

கன்னியாக்குமரி,  திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை பூஜித்து  சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். இதனால் குடும்பத்தில் சுபிட்சமும், மாங்கல்ய பாக்யமும் நிறைந்திருக்கும்.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆடி வெள்ளிகளில் நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை அர்ச்சிக்கும் 'நவசக்தி அர்ச்சனை’,  'சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் ஆலயங்களில் நடைபெறும்.

மொத்தத்தில் இந்த ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்கும் மாதமென்றால் மிகையாகாது. ஆலயமோ அலுவலகமோ அல்லது வீடோ எல்லா இடங்களிலும் பெண்கள் ஓங்கி நின்று ஆண்களை காக்கும் மாதம் ஆகும்!

மற்ற வெள்ளிக்கிழமைகளை விட  ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியை தரிசிப்பது சகல நலன்களைத் தரும்.

‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’யில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும்.

சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது.

‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு.

ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும், ஆனந்தம் வந்து சேரவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை செய்தால்  வருடம் முழுவதும் வசந்த காலமாகும்.

கண்ணனின் பிறந்தநாள்

கண்ணன் பிறந்தான் களிப்புடன் நாமும் கும்மியடிப்போம்
வாரீர்..வாரீர்!
கோகுலம்தனிலே குதூகலமாகக் கொண்டாடுவோம் வாரீர்..வாரீர்!

ஆண்டுகள் பல்லாயிரம் ஆயினும்
கண்ணனின் லீலைகள் விளையாட்டாகவும்..ஆனந்தமாகவும்..சிருங்காரமாகவும்..தத்துவார்த்தமாகவும் அவரவர் வயதுக்கேற்றபடி இன்பம் தரும். அந்த லீலாவிநோதன் கோகுல பாலனின் பிறந்த நாளே ஜன்மாஷ்டமி.

இந்தியா முழுதும் இந்த நாள் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.கிருஷ்ணர் பிறப்பின் சிறப்புகள்..
பிறந்தவுடன் பேசியவன் கண்ணன்
நான்கு கரங்களில்சங்குசக்ர பீதாம்பரதாரியாக அவதரித்தான்.
பிறந்ததும் அழவில்லை.

கண்ணன் நடுஇரவில் கம்சன் அயர்ந்திருக்க, காவலாளிகள் உறங்கும் நேரம் அவதரித்தான். கம்சனாகிய ஆணவம் அடங்கி, காவலாளிகளாகிய புலன்கள் உறங்கும்போது இறைஒளி தோன்றும் என்பதே அவதார தத்துவம்.

வாழ்க்கை தர்மத்தை எடுத்து
ரைப்பதே கிருஷ்ணாவதாரம். வாழ்க்கையில் நேர்மை வேண்டும்.. தீயன ஒழிய வேண்டும்.. சிருங்கார ரசம் இன்றியமையாதது என்பன கண்ணன் உலகுக்கு எடுத்துக் காட்டியது. பராசக்தியின் அழகையும், ராமனின்
லாவண்யமும் ஒருங்கே கொண்ட கண்ணனின் அழகில் மயங்காதவருண்டோ?

கண்ணன் பூஜைக்கு வெண்ணெய் அவசியம் வேண்டும். ஆனால் சீடை, முறுக்கு? இதற்கு திரு.நீடாமங்கலம் ஸ்ரீகிருஷ்ண
மூர்த்தி பாகவதரின் விளக்கம் வித்யாசமானது! எல்லா அவதாரங்களும் மங்கல ஒலிகளோடு நிகழ்ந்தன. ஆனால் கண்ணன் பிறந்த நடுநிசியில் ஏது மேளமும் தாளமும்! அச்சமயம் தூங்கிக் கொண்டிருந்த கம்சன் பயங்கர கனவுகள் கண்டு பற்களை 'நறநற'வென்று கடித்தானாம்! அந்த ஒலியை நினைவுபடுத்தவே சீடை முறுக்கு செய்யப் படுகிறதாம்!

கோபியர்கள் வீட்டில் கண்ணன் வெண்ணெய் திருட வர வேண்டுமென விரும்புவார்களாம். அவன் வந்துவிட்டுத் திரும்பப் போகும்போது அந்தக் குட்டிப் பாதங்கள் கண்ணன் வந்துவிட்டு போனதைக் காட்டிவிடும்.அதனால் அந்நாளில்  வெண்ணெயில் பாதச் சுவடுகளை போடுவார்களாம். இக்காலத்தில் அதை நினைவுறுத்தவே மாவினால் பாதம் போடுகிறோம்.

தமிழ் நூல்களில் சிறப்பாகக் கூறப்படும் நப்பின்னையே தமிழ் நாட்டின் ராதை.இவளை ஏழு எருதுகளை அடக்கி கண்ணன் மணந்ததாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் உரைக்கிறது.

இளம் வயதில் பால லீலைகளைச் செய்த கண்ணன், பாரதத்தில் கீதாசாரியனாகிறான். கீதையின் உபதேசங்கள் எந்த நாளுக்கும் ஏற்றவை.

மற்ற மதங்களில் கடவுளின் தூதரே மத உண்மைகளை விளக்கியிருக்கிறார். ஆனால் ஹிந்து மதத்தில் மட்டுமே கடவுளாகிய கண்ணன் நேரில் நின்று 700 ஸ்லோகங்களில்  வாழ்வின் தர்மம் மற்றும் மத உண்மைகளை விளக்கியுள்ளார்.

மற்ற தெய்வங்களை மரியாதையுடன் வணங்கும் நம்மால் கண்ணனை மட்டுமே கொஞ்ச முடியும்..கோபிக்கவும் முடியும். நீ என்னிடம் வராதே என்று சொல்லும் போதே மானசீகமாக அவனை அள்ளி அணைத்து உச்சி முகர முடியும்! இப்படித்தானே கண்ணன் நாமதேவர், சூர்தாசர், முக்தாபாய், துக்காராம், ஞானதேவர் ஆகியோருடன் கூடவே இருந்திருக்கிறான். ஆழ்வார்களும் ஆண்டாளும் அவனையே நம்பியிருந்து அவனடி அடைந்ததை  நாம் அறிவோம்.

சின்னக் கண்ணனின் பிறந்தநாளை நாமும் அவன் நாமங்களைப் பாடியும் பேசியும் 'கண்ணன் பிறந்தான்..எங்கள் கண்ணன் பிறந்தான்'என கோலாகலமாகக் கொண்டாடி அவன் தாளிணைகளை இறைஞ்சுவோம்.






சென்னை..பதிவு..2


சென்னை..பதிவு..2
'76ல் எனக்கு திருமணமானதும் திருச்சியில் வாழ்க்கை. நாங்கள் சென்னையில் settle ஆக விரும்பி என் கணவரின் வங்கிக் கடனில் 1976ல் சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டூடியோ அருகில் தனிவீடு 50000ரூபாயில் வாங்கினோம்.
ஆறு மாதத்தில் என் கணவருக்கு உ.பி.யில் மதுராவுக்கு மாற்றல். வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களால் நிறைய தொந்தரவு. என் கணவரும் அடிக்கடி வருவது கஷ்டமாக, 2 வருடங்களில் விற்க வேண்டிய
தாயிற்று.
அந்த வீடு இருந்திருந்தால்
இன்று அதன் மதிப்பு கோடிகளில்! நானும் சென்னைவாசியாக
இருந்திருப்பேன்!
2001லிருந்து மும்பையில் பத்து வருடங்கள். அச்சமயம் என் தம்பி வேளச்சேரியில் இருந்தபோது அம்மா அப்பாவைக் காண அடிக்கடி சென்னை பயணம்.
என் பிள்ளைக்கும் சென்னையில் வேலை கிடைக்க, நினைத்த நேரமெல்லாம் சென்னை கிளம்பி வந்து விடுவேன்! இப்படியெல்லாம் சென்னை ஆசை அவ்வப்போது நிறைவேறியது!
மாட்டுப் பெண்ணுக்கு  சென்னை.
2011ல் என் மகன் வேலை நிமித்தம் சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் குடியேறினோம். எதிரில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை. சென்னையில் கீழ்ப்பாக்கம் என்றாலே பைத்தியத்தை மனதில் வைத்து 'அப்படியா.. நல்லா இருக்கீங்க இல்ல' என்பார்கள்!
கீழ்ப்பாக்கம் எல்லாவற்றிற்கும் centre place. அங்கிருந்த இரண்டு வருடங்களும் மறக்க முடியாத நாட்கள். எப்பவும் traffic. வீட்டுக்குள் இரண்டு நாளுக்கு ஒருமுறை தூசு படிந்து விடும்!
எங்கள் வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில்  Ega , சங்கம் தியேட்டர்கள். அவ்வப்போது புரசை அபிராமி! என் கணவர், பிள்ளைக்கு சினிமாவில் ஆர்வம் இல்லாததால் நானும் என் மாட்டுப் பெண்ணும் அடிக்கடி நல்ல படங்களுக்கு சென்று விடுவோம். பேத்திக்கு தாத்தா காவல்!
அவ்வப்போது தி.நகருக்கு போய் shopping, purchaseம் உண்டு!
விஜய் டி.வியின் பக்தித் திருவிழா, மார்கழி மகா உத்சவம், டிசம்பர் கச்சேரிகளுக்கு நானும் என் கணவரும் ஸ்கூட்டரில் சென்று வருவோம். மார்கழியில் விடிகாலை கிருஷ்ணகானசபாவில் நடக்கும் ஸ்ரீவிட்டல்தாஸ் பஜனையைத் தவறவிட்டதில்லை. இலவசமாகக் கிடைக்கும் இதுபோன்ற கலா நிகழ்ச்சிகளுக்கு சென்னை போல் வேறு இடம் கிடையாது.
சென்னை மெட்ரோ ரயில் பாதைத் திட்டம் ஆரம்பித்ததும் pollution அதிகமாகி விட்டது. என் பேத்திக்கு ஒவ்வாமையினால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. என் மகன் ஆஃபீஸ் டைடல் பார்க்கில் இருந்ததால் நாங்கள் சேலை
யூருக்கு குடிபெயர்ந்தோம்.
அங்கிருந்து  தி.நகர், மயிலை, மாம்பலம் எந்த இடத்துக்கு வருவதானாலும் ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகும்.
அப்பொழுதெல்லாம் ஓலா, ஊபர் கிடையாது. Call taxi driverகளை புக் பண்ணிக் கொண்டு எங்கள் காரில் செல்வோம்.அங்கிருந்து
சென்னைக்குள் வருவது
என்றாலே அலுப்பாக இருக்கிறது. சென்னை, மும்பை, பெங்களூர், போபால் என எல்லா நகரங்க
ளிலும் இருந்தது போதும் என்றாகிவிட்டது. அமைதியான வாழ்க்கைக்கு மனது ஏங்க ஆறு வருடங்களாக திருச்சிவாசம்.
இப்போதைய சென்னை ரொம்பவே மாறிவிட்டது. முன்பெல்லாம் சைக்கிள் ரிக்ஷாக்கள்தான். அதிகமாக   அவர்கள் பணம் கேட்டால் கொஞ்சம் குறைக்கச் சொல்லி கேட்போமே நாம்! முடியும் முடியாது என்று சாதாரணமாக  பதில் சொல்வார்கள்.
இப்போது ஆட்டோக்காரர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் நமக்கு கோபத்தோடு அலுப்பையும் தருகிறது. 'இந்த  பணத்தில நீ வூடு கட்டப் போறியா. நான் சொன்னதில ஒரு பைசா குறைக்க முடியாது. வேற ஆளு வந்தா பார்த்துக்க' என்று பேசுவதைக் கேட்கவே கஷ்டமாக இருக்கும். சக ரிக்க்ஷாகாரர்களிடம் 'அவங்கள்ளாம் ஓசில கூட்டிட்டு போனா வருவாங்க' என்பான்.
நல்லவேளையாக ஓலா,ஊபர் வந்ததால் நியாயமான கட்டணத்தில் பிரயாணம் செய்ய முடிகிறது. இப்பவும் சாதாரண ஆட்டோ ஓட்டுனர்கள் ஏமாற்று
வதாகக் கேள்விப்பட்டேன்.
வள்ளலாரின் கந்தகோட்டம் முருகனைப் பாடிய தெய்வமணி
மாலையில் 31 பாடல்களிலும் தருஓங்கு,  தரமேவு, தள்ளறிய, தாமம்ஒளிர், தலைவர்புகழ், தரையில் உயர், தளர்விலா, தார்கொண்ட, தப்பற்ற, தாய்கொண்ட, தானமிகு, தர்மமிகு சென்னை என்று 31 விதமாகப் புகழ்கிறார். அவர் காலத்திய  சென்னை இப்படியெல்லாம் இருந்தது போலும்! 'தலைவர்புகழ்' 'தாய்கொண்ட'  என்ற இரண்டையும் தீர்க்கதரிசியாக அன்றே பாடிச் சென்றுள்ளார்!
380 வயது நிறைந்த செழிப்பான அந்நாளைய சென்னையின் ஏரிகளும் குளங்களும் இன்று அடுக்குமாடிக் கட்டிடங்களாக நிற்பது ஊருக்கு அழகு..ஆனால் மக்கள் தண்ணீரின்றி தவிப்பதைப் பார்க்கும்போது நம் கண்களில் தண்ணீர் வருகிறதே!
அந்த நாட்களில் சோலை போல் இருந்த இடங்களெல்லாம் இன்று குடியிருப்புகளாக மாறிவிட்ட
பின்பே மரங்களின் பயனை அறிந்து விழித்துக் கொண்டுள்
ளோம் நாம்!
ஒருபெண் இரவில் தனியாக பயமின்றி நடந்து செல்லவேண்டும் என்ற காந்தியின் கனவு இன்று தடம் மாறிப் போய்விட்டதே?
சுற்றிலும் மக்கள் இருக்கும்போதே பெண்ணின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கும் இந்த இன்றைய சென்னையின் நிலை அதன் சிறப்பில் குறைந்து விட்டதே! பெண் குழந்தைகளைப் பாதுகாப்பின்றி வெளியே அனுப்புவதற்கும் தயங்க வேண்டியுள்ளது!
அந்நாட்களிலும் தெருக்களில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததுண்டு. ஆனால் இன்று போல் பிளாஸ்டிக், sanitary napkins, குழந்தைகளின் pamperகள் இல்லை.இன்று இவை சுற்றுப் புறத்தின் ஆரோக்யத்தை மாசுபடுத்துவதை சீர்செய்ய முடியாமல் திணறுகிறது நம் அரசு.  
பல்லவர்கள் ஆட்சி செய்த நகரம்..திருவள்ளுவர் வாழ்ந்த மயிலை..வள்ளலார் புகழ்ந்து பாடிய கந்தகோட்டம்..பக்தி மணம் பரப்பும் பெருமை பெற்ற பார்புகழ் ஆலயங்கள்..சிறப்பான உயர்தர மருத்துவமனைகள்..உலகத்தரம் பெற்ற கல்விக் கூடங்கள்..
உயர்வான தகவல் தொழில் நுட்பங்களுடனான கணினி நிறுவனங்கள்..ஆனால் இத்தனையும் இருந்தும் இன்றைய சென்னையில் ஏதோ குறை இருப்பதை உணர முடிகிறது.
எங்கும் லஞ்சமும்,ஊழலும் பெருகிவிட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. 'பணம் ஒன்றே வாழ்க்கைக்கு தேவை.அதை எந்த அதர்மத்தை செய்தும் பெறலாம்' என்பதே பலரின் நோக்கமாகி விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒருபுறமிருக்க ஆலயங்களிலுள்ள அந்த இறைவனுக்கே பாதுகாப்பு இல்லை என்பதை நினைத்து மனம் வெதும்புகிறது.
நல்ல நம்பிக்கைகள் சிதைந்து
விட்டதாலேயே இந்த நிலைமை
என்று புரிகிறது. சென்னை பலருக்கு சொர்க்கமாக இருந்தாலும்..எனக்கு இன்றைய சென்னையில் வாழ்வதற்கு ஆசையில்லை..ஆர்வமுமில்லை!என் கணவருக்கும் விருப்பமில்லை!
என் பேத்திகளின் அன்புக்கு கட்டுப்பட்டு அவ்வப்போது வந்து தங்கிச் செல்வோம். இப்பவே என் சின்ன பேத்தி அடுத்தமாதம் அவளின் பிறந்தநாளுக்கு வரச் சொல்லி order போட்டுவிட்டாள்! கிளம்ப வேண்டியதுதான்!

சென்னை தின ஸ்பெஷல்..ஆகஸ்ட்22


#சென்னை..ஞாயிறு ஸ்பெஷல்
ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!
ரொம்ப சுருக்கமாக எழுதியும்  பெரிய பதிவாகி விட்டது..!!
சென்னை..என் வாழ்வின் ஆரம்ப நாட்கள் சென்னையில்தான் ஆரம்பித்தது. அதை மறப்பதெப்படி? அன்றைய மதராஸ்க்கும்...
இன்றைய சென்னைக்கும்..
அடேயப்பா..எத்தனை மாற்றங்கள்!
1961 முதல் '71வரை சென்னை வாசம். நாங்கள் குடியிருந்தது நுங்கம்பாக்கம், கோடம்பாக்கத்
துக்கு நடுவில் இருந்த சூளை
மேட்டில், பஜனை கோவில் தெருவில்.
நான் ஐந்தாம் வகுப்பு வரை கார்ப்பரேஷன் பள்ளியிலும், பின்  அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தேன். அந்த நாட்கள் கவலையின்றி இருந்த கனாக்காலம்!
பள்ளி வீட்டிற்கு அருகில்..மதியம்  வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு செல்வேன். நான்தான் school leader. நான் நன்றாகப் பாடுவேன் என்பதால் தினமும் Prayer பாடுவதோடு பள்ளியின் எல்லா நிகழ்ச்சிகளிலும்  நான்தான் பாடுவேன். ஆஸ்தான பாடகி!
கே.பாலாஜியின் முதல் வெற்றிப்
படமான ‘தங்கை’ படத்தில் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்த அந்நாளைய நடிகை ஜெய
கௌசல்யா என் பள்ளியில் படித்தார். என்னை விட சீனியர். அவர் 'சிலநாள்' மட்டுமே பள்ளிக்கு வரும்போது நாங்கள் அவரை  வாய்பிளக்க பார்ப்போம்!

பாடகர் SPBயின் அத்தை வீடு எங்கள் வீட்டின் பின்புறம் இருந்தது.அங்கு வரும் அவர் 'இயற்கை எனும் இளைய கன்னி' பாடல் மற்றும் தெலுங்கில் அவர் பாடிய பாடல்களையும்  பாடிக் கொண்டிருப்பார்.  நடந்துதான் செல்வார். அவர் இன்று இத்தனை பெரிய பாடகராவார் என்று தெரிந்திருந்தால் அன்றே அவரிடம் ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம்!
இன்றைய மொபைல் அன்று இருந்திருந்தால் அவரோடு selfie எடுத்திருக்கலாம்!
அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் ஸ்ரீவெங்கட்ரமண பக்தசபாவில்
சங்கீதம் கற்றுக் கொண்டேன். அங்கு ஸ்ரீராமநவமி, தியாகராஜ உத்சவமெல்லாம் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அந்த இடம் அக்ரஹாரம் மாதிரிதான். மார்கழி முழுதும் நகர் பஜனை உண்டு. பாட்டில் நான் தேர்ச்சி பெறக் காரணம் #பெருமைமிகு சென்னைதான்!
எங்கள் வீடு அந்நாளைய சென்னை வீடுகள் போல் ரயில்வே கம்பார்ட்மென்ட் மாதிரி வரிசையாக மூன்று அறைகள். கட்டில்,bed எல்லாம் கிடையாது. இரண்டே வீடுகள். வாசலில் பெரிய open space உண்டு. அதுதான் எங்கள் playground. பெரிய கோலங்களை என் அம்மா வழிகாட்டுதலில் நான் கற்றுக் கொண்டது #கவின்மிகு சென்னையில்தான்!
நாங்கள் பத்து ஆண்டுகள் அதே வீட்டில்தான் இருந்தோம்.
வீட்டுக்காரர் ஒருநாளும் வந்து பார்த்ததில்லை. நான்தான் ஒவ்வொரு மாதமும் வாடகையை அந்தத் தெரு கடைசியிலிருந்த அவர் வீட்டில் கொண்டு கொடுத்து வருவேன். நாங்கள் காலி செய்தபோது வாடகை 50 ரூபாய் கொடுத்தோம்.
எல்லா வேலைகளும் கிணற்றில் தண்ணீர் இழுத்து தான் செய்ய வேண்டும். பக்கத்தில் துவைக்கும் கல். என் அம்மா தோய்க்கும் போது நான்தான் தண்ணீர் இழுத்துக் கொடுப்பேன். வெந்நீர் அறையில் அடுப்புப் புகையில் கண் எரியக் குளிப்பதற்குள் போதும் என்றாகிவிடும். அங்கு தண்ணீர் கஷ்டமே வந்ததில்லை. குடிக்க, சமைக்க எல்லாம் அந்தத் தண்ணீர்தான்.
அன்று மிக்ஸி, கிரைண்டர்,
டி.வி.இல்லாத நாட்கள்.
ரேடியோவில்தான் பாட்டு,நாடகம், நியூஸ்,சினிமா (3மணிநேர சினிமா 1மணி நேரத்தில்!)எல்லாமே கேட்போம்.
1965ல் இந்திய பாகிஸ்தான் போர் நடந்தபோது 'சங்கு ஊதும் போதெல்லாம் வெளியில் யாரும் வரக்கூடாது. தெருவில் அப்படியே படுத்து விட வேண்டும்' என்ற அறிவிப்பு ரேடியோவில் கேட்கும்போது வெளியில் போகவே பயமாக இருக்கும்.
வெளியூர் சொந்தங்களின் வீட்டுக்கெல்லாம் போனால் 'நீ மெட்ராஸ்காரியாச்சே' என்பார்கள்! நாங்கள் கோடம்பாக்கம் அருகில் இருந்ததால் 'சிவாஜி, M.G.R., பத்மினி, K.R.விஜயாவையெல்லாம் பார்த்திருக்கியா' என்று விழி விரியக் கேட்பார்கள், நாங்கள் ஏதோ ஸ்டூடியோவிலேயே குடியிருப்பது போலவும்,அவர்கள் எங்கள் வீட்டு வழியே தினமும் நடந்து செல்வது போலவும்!
சென்னையை சுற்றிப் பார்க்கவென்றே அடிக்கடி உறவினர்கள் வருவார்கள்! LIC  கட்டிடம் அந்நாளைய கண்காட்சித் தலம்!
ஒருமுறை விஜய வாஹினி ஸ்டூடியோவில் ஷூட்டிங் பார்த்ததுண்டு. ஒரே காட்சியை பல தடவை திரும்ப நடித்ததைப் பார்த்து 'ஐயோபாவம் நடிகர்கள்' என்ற எண்ணம்தான் தோன்றியது! அப்பொழுது கோடம்பாக்கத்தில் பல ஸ்டூடியோக்கள் உண்டு. அவை இப்பொழுது அடுக்குமாடிக் கட்டிடங்களாகிவிட்டது.
அப்பொழுதெல்லாம் நிறைய கடவுள் படங்களும் சிறுவர்களும் ரசிக்கும் நல்ல படங்களும்  வரும். எதையும் விட்டதில்லை! திருவிளையாடல், திருவருட் செல்வர், சரஸ்வதி சபதம், தெய்வம், துணைவன், ஆதிபராசக்தி கந்தன்கருணை
பாமா விஜயம், பணமா பாசமா, எதிர் நீச்சல், வாராஜாவா, அன்பு சகோதரர்கள், தில்லானா மோகனாம்பாள், சிவந்தமண், உயர்ந்த மனிதன்,வியட்நாம் வீடு, இரு‌ கோடுகள்...இப்படி நல்ல பல படங்களுக்கு என் பெற்றோர் அழைத்துச் செல்வார்கள். எங்களின் அன்றைய அபிமான தியேட்டர்கள் வீட்டிற்கு அருகிலிருந்த லிபர்ட்டி, ராம்தான்!
தேவி தியேட்டர் ஆரம்பித்தபோது அதில் AC push back seatஎல்லாம் பார்க்க ஆசைப்பட்டு (என் அம்மா ஆசைப்பட்டதால்!) 'உத்தரவின்றி உள்ளே வா' படத்துக்கு அப்பா அழைத்துச் சென்றார்! அந்த சீட்டுகளைத் தடவிப் பார்த்ததும், சாய்ந்தால் விழுந்துவிடுவோமோ என்று பயந்ததும் இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது!
மாதம் ஒருமுறை மெரினாபீச் விஸிட் உண்டு! உலகின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான அதன் அன்றைய அழகே அழகு! அலையை விட்டு நகரவே மனம் வராது! விடுமுறை நாட்களில் மகாபலிபுரம் வேடந்தாங்கல் திருக்கழுகுன்றம் திருநீர்மலை செல்வோம். வடபழனி, சிவவிஷ்ணு ஆலயம், கபாலீஸ்வரர், பார்த்தசாரதி கோயில்களுக்கு விசேஷ நாட்களில் செல்வோம். மயிலை அறுபத்துமூவர் உற்சவம் ஒவ்வொரு வருடமும் செல்லத் தவறியதில்லை. பல கச்சேரிகள், கதாகாலட்சேபங்களுக்கும் செல்வோம்.
விடுமுறைகளில் அடையாரில் இருந்த என் பெரிமா வீட்டுக்கு செல்வேன். நானும் என் பெரிமா பெண்ணும் கொரிப்பதற்கு ஏதாவது எடுத்துக் கொண்டு பஸ்ஸில் காந்தி மண்டபம் செல்வோம். அங்கு ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு பொழுது போக்கிவிட்டு வருவோம்.
அப்பொழுதெல்லாம் தனியாக வெளியில் செல்ல பயந்ததே இல்லை. இந்தக் காலத்தில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பக் கூட பயமாக இருக்கிறது.
1968ல்  திரு அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடந்தது. அச்சமயம் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களான  திருவள்ளுவர்,   ஔவையார், கம்பர், G.U.போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சி., வீரமாமுனிவர் ஆகியோருடன் கண்ணகிக்கும் சிலை அமைக்கப்பட்டது.  அச்சமயம் நம் தமிழின் பெருமையை கலைகள் சங்ககாலக் கதைகள் சேர சோழ பாண்டிய மன்னர்களின் பெருமைகளை உரைக்கும் விதமாக நடந்த அலங்கார ஊர்திகளைக் காண  என் அப்பா அழைத்துச் சென்றார். காணக் கண்கொள்ளாக் காட்சி!
அதே ஆண்டு நடந்த World Trade Fairம் மிக அருமையான ஒன்று.  உலகநாடுகளின் சிறப்புகளைப் பற்றி யாவரும் அறிய அது ஒரு காரணமாக அமைந்தது. மிகப் பெரிய அந்தப் பொருட்காட்சியைக் காண நாங்கள் இருமுறை சென்றோம். அந்தப் பொருட்காட்சி நடந்த இடமே இன்றைய அண்ணாநகர்.இவை #சீர்மிகு சென்னையின் பெருமைக்கு மேலும் மெருகு சேர்த்தன!
தேர்தல் நேரங்களில் வாசலில் ஓட்டு கேட்க வந்த காமராஜர், MGR, அண்ணாதுரை, கருணாநிதி எல்லாரும் வருவார்கள். அப்பொழுதெல்லாம் அவர்களைச் சுற்றி இத்தனை கூட்டமு
மில்லை..பாதுகாப்பும் கிடையாது.
சென்னையில்தான் இனி இருக்கப் போகிறோம் என எண்ணிய என் அப்பா அன்றைய தாம்பரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ரூ. 500ல் ஒரு plot வாங்கினார். அப்பொழுது தாம்பரம் அடுத்த ஊர் மாதிரி இருந்தது. மாற்றல் வந்ததால் அதை வேறு நண்பரிடம் விற்றுவிட்டார். 
'71அக்டோபரில் என் அப்பாவுக்கு வங்கியில் பதவி உயர்வு கொடுத்து ஈரோடு மாற்றலாகியது.  11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் நான். நான் state rank வாங்குவேன் என்று எதிர்பார்த்த சென்னை பள்ளி ஆசிரியைகள் என்னை இங்கேயே படிப்பைத் தொடரச் சொன்னார்கள். நானும் என் தோழிகளும் WCCயில் படிக்கலாம் என்று plan செய்து கொண்டி
ருந்தோம். இந்த மாற்றத்தால் என் வாழ்க்கையில் கல்லூரிப் படிப்புக்கே இடமில்லாமல் செய்துவிட்டது.
என் அம்மா சென்னையில் எங்களுடன் தனியாக இருக்க விரும்பவில்லை. ஈரோடிலிருந்த கலைமகள் கல்வி நிலையம் பள்ளியில் பரீட்சை எழுதி என்னை அங்கு சேர்த்து விட்டார் என் அப்பா.  அத்துடன் என் #மாண்புமிகு மதராஸ் வாசம் முடிந்தது.
பின் 40 வருடங்களுக்குப் பின் 2011ல் மீண்டும் சென்னை வாசம்! அது பற்றிய பதிவு தொடரும்!

அன்பு முரளி


அன்பு முரளி
இன்று காலை முதல் நீ பிறந்த அந்த நாள்தான் என் நினைவில்.கோகுலாஷ்டமியன்று நம் அம்மா கண்ணனை வரவேற்க அத்தனை பட்சணமும் செய்து வைத்து விட்டு ஆஸ்பத்திரி சென்ற அந்தநாள் மறக்க முடியுமா? 
அன்று மாலை நம் வீட்டின் குட்டிக் கண்ணனாக நீ பிறந்தாய். உன் பெயரும் அதனால்தான் முரளி! உன் பிஞ்சுக் கையைத் தொட்டுப் பார்த்தபோது நான் அடைந்த சந்தோஷம் இன்றும் என் மனதில்!
மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா!
அன்புத்தம்பியே!
இன்று போல் என்றும் நீ
இளமையுடன் இன்பமுடன்
வளமையுடன் மகிழ்ச்சியுடன்
பாங்குடனே வாழ்வில்
சீரும் சிறப்பும்
பேறும் புகழும்
பெருமையும் திறமையும் இறையருளால் பெறுவாய்!
உன் கனவுகளும் ஆசைகளும்
கச்சிதமாய் நிறைவேறி
*வாகைசூடி சரித்திரம் படைத்திடவும்*
*வானம் தொடும்
புகழ் அடைந்திடவும்*
*வசந்தமான வாழ்வு
நிலைபெறவும்*
வாழ்த்துகிறேன்
தாங்கொணா மகிழ்ச்சியுடன்
தமக்கை நான்!
உன் வாழ்க்கை பந்தயத்தில்
புது உலகம் படைக்கவும் ,
சாதனைகள் நிறைக்கவும்,
தொட்ட இடம் எல்லாம்
சிறக்கவும் வாழ்த்துகிறேன்!
ஒவ்வொரு ஆண்டும்
புதுப்புது சொந்தங்கள்,
புதுப்புது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
பொறுப்புகள் போன்றவையும்
கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு
மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து
ஆண்டுகளிலும்
நிறைவேறிட
வாழ்த்துகிறேன்.💐💐🌺🌸🍰🎂

உமையாள்புரம்

இதிகாச புராண பிரசித்தமான தலங்களுள் தஞ்சை காவிரியின் வடகரையிலுள்ள உமையாள்
புரமும் ஓன்று. இங்குள்ள சிவன், பெருமாள் கோயில்கள் மிக பிரசித்தமானது.

இங்கு காவிரிக்கரையில் கோயில் கொண்டுள்ள ஆனந்த மகா
கணபதியின் பெருமையை சொல்ல வார்த்தைகளில்லை!

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு இந்த கணபதி ஓர் அரச மரத்தி
னடியில் இருந்ததாகவும், அம்மரம் ஒருநாள் விநாயகருக்கு சிறிதும் சேதமின்றி வேருடன் விழுந்து விட்டதாம். சுவாமிகள் ஒருவர் யந்திரம் ஒன்றை வைத்து கணபதியை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. 1931ம் ஆண்டு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்வாலயம் என் நாத்தனார் குடும்பத்தாரால் மிக சிறப்பாக பராமரிக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.

அழகிய உருவத்துடன் காட்சிதரும் கணபதியின் முன் நிற்கும்போது நம் இடர்கள் அனைத்தும் மறைந்து விட்ட உணர்வு ஏற்படுகிறது. நாம் வேண்டியவைகள் அனைத்தும் அக்கணமே நிறைவேறிவிட்டதைப் போல் மனம் நிறைந்து விடுகிறது.

மாதந்தோறும் சங்கட ஹர சதுர்த்தி அன்று இரவு அபிஷேக ஆராதனையும்,ஒவ்வொரு வருஷமும் ஆவணி அமாவாசைக்கு முன்பு நடை பெறும் நிறைமணி என்ற ஒரு நாள் உத்ஸவமும்,
பிள்ளையார் சதுர்த்தியும் மிக விமரிசையாகக் கொண்டாடப்
படுகின்றன.

நிறைமணி அன்று காலையில் சிறப்பான அபிஷேக, அலங்
காரமும், இரவில் நடைபெறும் புஷ்பலங்காரமும் கண்கவர் காட்சியாகும். சின்ன உருவில் சிங்காரமாய் அமர்ந்து  அன்பர்களின் துன்பங்களைத் தீர்த்து வேண்டிய வரங்களை வாரி வழங்கும் கற்பக விருட்சமான ஆனந்த மகாகணபதி, அவ்வூர் மக்களுக்கு மட்டுமன்றி,
அருகிலுள்ள கிராம மக்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றி அருள்பவர்.

இவ்வருட நிறைமணி உத்சவம் கடந்த ஞாயிறு அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை அர்ச்சனா, ஆர்த்தி சகோதரிகளின் இசைக்கச்சேரி கண்ணுக்கு விருந்தான புஷ்ப அலங்காரத்துடன், காதுகளுக்கும் இனிய விருந்தாக இருந்தது.



Sunday 18 August 2019

மத்யமர் இசை விழா



இசை..சங்கீதம்..பாட்டு..இவை அனைத்துமே நம் வாழ்வோடும் உணர்வோடும் கலந்தது. இறை உணர்வை நம்முள் தோற்றுவிப்பது.இசை  (music) என்பது ஒழுங்காக, கட்டுப்
படுத்தப்பட்ட, நம் செவிவழிச் சென்று மனதை மயக்கும் இனிய ஒலியாகும்.
குழந்தைகள் பாடும் ரைம்ஸோ, கிராமிய இசையோ, திரைப் பாடலோ, கர்நாடக இசையோ, ஹிந்துஸ்தானி சங்கீதமோ, வேத மந்திரமோ...எல்லா இசைக்கும் முக்கியம் ராகம் தாளம் பாவம்.
நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே இசை நம்மோடு பயணமாகிறது. குழந்தை பிறந்ததும் தாலாட்டு, அடுத்து திருமணங்களில் ஆரம்பிக்கும் மந்திர ஒலியும்,அந்தந்த நிகழ்ச்சிகளுக்கான ஊஞ்சல், மாலைமாற்றல், நலங்கு முதலான பாடல்கள். இது போல் பிறந்தது முதல் ஆரம்பமாகும் இசை இறந்தபின் ஒப்பாரி வரை  ஒவ்வொரு அங்கத்திலும் இணைந்து பிணைந்து வருகிறது.
சற்குரு தியாகராஜ சுவாமிகள் சரபோஜி மகாராஜாவின் வயிற்று வலியை கீர்த்தனைபாடி குணப்படுத்தியதும், முத்துசாமி தீட்சிதர் எட்டையபுரத்தில் வறண்டு கிடந்த பூமியை அமிர்தவர்ஷினி ராகக் கீர்த்தனம் பாடி மழையை பொழிய வைத்ததும், நாவுக்கரசர் அரவம் தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனை உயிர்ப்பித்ததும், ஞானசம்பந்தர் பூம்பாவையை பதிகம் பாடி  உயிரெழச் செய்ததும் அன்றே நடந்த உண்மை நிகழ்ச்சிகள்.
இன்று நாம் இசையை ரசித்து கேட்கும்போது நரம்பியல் சம்பந்தமான ‘என்டார்பின் ஹார்மோன்’ அதிகமாக சுரக்கிறது என்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதன் விளைவாக அதிகமாக கோபப்படுபவர்கள், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இசையை கேட்டால் குணமடைகிறார்கள் என்று நிரூபணம் ஆகி இருக்கிறது.
இசையைக் கேட்பதால், மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோன் சுரப்பதால்  இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி, ஃபீல் குட் உணர்வு தோன்றுவதாக  ஆய்வுகள் கூறுகின்றன.
மென்மையான இசையைக் கேட்கும்போது மனஅழுத்தத்தின்
போது சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதால் மனம் சோர்வாகவோ,சோகமாகவோ இருக்கும்போது  பிடித்த இசையைக் கேட்கும்போது மனது லேசாகிறது.
இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மகுடி இசையில் மயங்கி ஆடும் கொடிய விஷமுள்ள நாகம் முதலாக  மற்ற உயிரினங்களையும்
பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.இசையைக் கேட்கும் பசு அதிக பால் தருவதாகக் கூறப்படுகிறது.
ஏழு ஸ்வரங்களும் ஒவ்வொரு பிராணிகளின் ஒலியாக,  ஸ-மயில், ரி-ரிஷபம், க-ஆடு, ம-க்ரௌஞ்சபட்சி, ப-குயில், த-குதிரை, நி-யானை என்று மகாபெரியவர் சொல்வாரென்று  திருமதி விசாகா ஹரி ஒரு கதாகாலட்சேபத்தில் கூறினார்.
வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா முழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக் கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விரண்டு  இசைகளுமே சாமகானத்தி
லிருந்தே தோன்றியவை ஆகும்.
டிசம்பர் கச்சேரிகள் ஆரம்பித்தது எப்படி தெரியுமா? சுதந்தரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் டிசம்பர்,ஜனவரி மாதங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தங்கள் நாட்டுக்குச் செல்வர். அப்போது, இங்கே விடுதலை போராட்டங்கள் நடந்தால் யார் தடுப்பது என்று யோசித்தனர்.
நம் மக்களை  வசப்படுத்தக்கூடிய சக்தி இசைக்கு இருப்பதை உணர்ந்து டிசம்பர் மாதத்தில் நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்க, தங்களுக்கு ஆதரவாக இருந்த தமிழர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தனர். டிசம்பர் சீசன் இசை நிகழ்ச்சி உருவானதற்கு இதுவே காரணமாம்!
கடந்த பத்து நாட்களாக நம் மத்யமரில் நடந்த இசை விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.  விதவிதமாய் ராகங்கள்..
வித்யாசமான பாடல்கள.. பலப்பல பா(ba)வங்கள்! கர்நாடக இசை..மெல்லிசை..திரையிசைப் பாடல்கள் என்று அசத்திவிட்டார்கள்!
நான்கு வயது முதல் தொண்ணூற்று நான்கு வயது வரை சிறப்பாக பாடிய அத்தனை பேரின் திறமைகளையும் பாராட்ட வார்த்தைகள் ஏது? வயதானவர்களும் இளமையாக மாறி அமர்க்களப் படுத்தி விட்டார்கள்!
நம்மால் பாடமுடியுமா..நாம் பாடினால் ரசிப்பார்களா..லைக் கமெண்ட் வருமா..நமக்கு ராகம் தாளம் சரியாகத் தெரியாதே..
பாடலாமா..வேண்டாமா என்றெல்லாம் 'பூவா தலையா' போட்டு யோசித்துக் கொண்டிருந்தவர்களையும்  பாடவைக்க மேலும் நான்கு நாட்களை அதிகரித்த அட்மின்களின் ஐடியா பாராட்டத் தக்கது! ஆரம்பத்தில் பாடியவர்களைவிட கடைசி இரண்டு நாட்கள்தான் அதிகம் பேர் பாடியிருப்பார்கள் என நினைக்கிறேன்!
டிசம்பர் இசைவிழாக்களுக்கு சென்றால் தனிஆவர்த்தனத்தின் போது பாதி பேருக்கு மேல் கேன்டீனுக்கு சாப்பிடப் போய்விடுவார்கள்! நம் மத்யமரில் ஆலாபனை,ஸ்வரம், தனி ஆவர்த்தனம் எதுவும் இல்லாத தொடர்ந்த இசைமழை!
நம் இசைமழையில் நனைவதற்கு அவ்வப்போது வான்மழையும் இறங்கி வந்ததோ! நாமும் சுகமாக snacksகளைக் கொறித்துக்  கொண்டும், காஃபி, டீ என்று குடித்துக் கொண்டும் சொகுசாக இருந்த இடத்திலிருந்து கொண்டே விதவிதமான சங்கீதத்தை ரசிக்க முடிந்தது!
பதிவுகளை உடனுக்குடன் பத்து நிமிடங்களில் அப்ரூவ் செய்த அதிவேக மாடரேட்டர்களின் பணி சிறப்பானது.பாராட்டுக்கள்!
விலை கொடுத்தாலும் வாங்க முடியாத சந்தோஷத்தை இங்கு பாடிய ஒவ்வொருவரும் அடைந்ததை மறுக்க முடியாது. அனைத்து மத்யமர்களுக்கும் தம் குரலைக் காட்ட மேடை அமைத்துக் கொடுத்து, பலரின் பாராட்டையும் பெற்றுத் தரக் காரணமான மத்யமர் அட்மின்களுக்கு @Shankar Rajarathnam, @Meenakshi Loganathan,@Revathi Balaji,@Keerthivasan Rajamani நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை🙏
#ராதாபாலு
அனைவரின் பாடல்களையும் கேட்டு ரசித்து லைக், கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்திய அனைத்து மத்யம நண்பர்களுக்கும் நன்றி🙏

ஆடி அமாவாசை ஸ்பெஷல்



ஆடி, தை, மகாளய அமாவாசைகள் சிறப்பானவை. ஆடி அமாவாசையன்று பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக, இறந்த முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வது சிறப்பாகக் கூறப்
படுகிறது.
மகாளய அமாவாசைதினத்தன்று பித்ருக்கள் ஆசி வழங்க பூலோகத்தை வந்தடைவதாகவும்,
தை அமாவாசை அன்று  மீண்டும் பித்ரு லோகத்திற்கு கிளம்பிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. 
பால் பாயசம்
தேவை
பால்---  1 லிட்டர்
அரிசி---3 டேபிள்  ஸ்பூன்
சர்க்கரை--- 1 கப்
முந்திரிப்  பருப்பு--- 15
பாதாம் பருப்பு---10
ஏலக்காய்--- 8
குங்குமப்பூ---  சிறிது
செய்முறை
பாலை  குக்கரில்  விட்டு அதில்  அரிசியை  நன்கு களைந்து  போட்டு 
ஆவி வந்ததும்  வெயிட்டைப் போடவும். கேசை சிம்மில் அரை  மணி 
நேரம் வைக்கவும். அணைத்துவிடவும்.
குக்கரைத்  திறந்து   கேசை
சிறிதாக  வைத்து  சிறிது நேரம் 
விடாமல்  கிளறவும்.
அரிசி  வெந்து  பால் கெட்டியாகி 
இளமஞ்சள் நிறமானதும்,  அதில்
சர்க்கரை  சேர்க்கவும். சர்க்கரை
கரைந்து  சேர்ந்து கொண்டதும், முந்திரி,பாதாம் பருப்புகளை
மிக்சியில்  நைசாக அரைத்து
சேர்க்கவும்.
ஏலக்காயைப்  போடி  செய்து
போட்டு,  குங்குமப்பூவை போட்டு  மேலும் ஐந்து நிமிடம் 
கொதிக்க  வைத்து இறக்கவும்.
முந்திரிப்  பருப்பை  சீவிப் போட்டு சூடாகவோ,  குளிர வைத்தோ கப்புகளில் ஊற்றி  பாயசத்தைப்
பரிமாறவும்.   பார்ட்டிகளுக்கு ஏற்ற  சுவையான  ரிச்சான பாயசம்  இது!
இதற்கு நல்ல திக்கான பால் தேவை. இல்லையெனில் சிறிதளவு மில்க்மெய்ட் சேர்த்துக் கொள்ளலாம்.
முழுதும் பாலில் செய்யும்போது இருக்கும் சுவை மில்க்மெய்டில் செய்யும் பாயசத்தில் இருக்காது.

புன்னகை என்ன விலை!😊 fu



நம் உள்ளத்து உணர்வுகளை ‘பளிச்’சென வெளிக்காட்டுவது நம் முகம். அந்த முகம் எப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தால் எத்தனை அழகாக இருக்கும்?😀
ஒரு புன்னகை சிந்த விலையேதும் தேவையில்லை. ஆனால். அந்த ஒரு புன்னகை அவரை பெரிய கூட்டத்திலும் கூட நடுநாயக
மாக்கும் தன்மையுடையது.😃
உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன. அதனால் நம்  மனமும் தேகமும் சிரிக்கும்போது புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.😆
ஆய்வொன்றின் படி ஒரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றோமாம். இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்துகொண்டு
போவதை அறிய முடிகிறது. 😄
நாம் சிரிக்கும்போது 'என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.😆
‘சிடுசிடு’வென்ற முகத்துடன் இருப்பவரை யார்தான் விரும்புவர்? சிரிப்பதற்கு கஞ்சப் படுபவர்கள் பல சந்தோஷங்களை வாழ்வில் இழந்தவர்களாவர். சிரிப்பதற்கு ஆகும் நேரம் சிறிது; ஆனால், அதன் பலனோ மிகப் பெரியது!🤩
வாயால் சொல்லும்வரை காதல் புரிவதில்லை! அது போல் புன்னகை புரியும் வரை அதற்கு மதிப்பில்லை! 😍
புன்னகையை விலைக்கோ, கடனுக்கோ வாங்க முடியாது. திருடவும் முடியாது! 😁
ஒரு சின்னக் குழந்தையின் சிரிப்பு நம் கவலைகளை மறந்து அதனுடன் விளையாடத் தூண்டுவதை நம்மால் மறுக்க முடியுமா!👶
முதியவர்களின் சிரிப்போ அவர்களது வெற்றிகரமான வாழ்வின் பிரதிபலிப்பு!👴
மோனாலிசாவின் மயக்கும் சிரிப்பை மறக்க முடியுமா?😄
ஃபெங்ஷுயி சிரிக்கும் புத்தரைப் பார்க்கும்போதே நம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறதே!💃
வாழ்க்கையை சிரித்துக் குதூகலித்துக் கடக்க வேண்டும் என்பதைச் சொல்வதைப் போல இவர் சிரித்துக் கொண்டே இருக்கிறாராம்! இவர் உருவம் வீட்டில் இருந்தால் வளமும், மகிழ்ச்சியும்,  செல்வமும்
வீட்டில் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை!💷
மருத்துவர் மற்றும் நர்ஸூகளின் பரிவான புன்னகை எத்தனை பெரிய நோயாளியையும் சீக்கிரம் குணமடையச் செய்யும்! 😌
காதலர்களுக்கிடையே, தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேறுபாட்டை நிமிடத்தில் விலக்கி, உடைந்த இதயங்களை இணப்பது அன்பான காதல் புன்னகையே!❤️
வரவேற்பாளர்களின் புன்னகை இனிய வரவேற்பு! 🧛
விற்பனையாளார்களின் புன்னகை அவர்களின் வியாபார உத்தி! 🤵
சிரித்த முகத்துடன் இருப்பவர்களை உலகில் எவரும் விரும்புவர்!😊
நிறைவான மனதுடன், மகிழ்ச்சியாக வாழும் மனிதனால்தான் சிரித்த முகத்துடன் உலவ முடியும். அவர்களுக்கு வாழ்க்கையே ஒரு திருவிழா! அவர்களோடு பேசுபவர்களுக்கும், பழகுபவர்களுக்கும் கூட அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.😄
மனம் நிறைந்த மகிழ்ச்சியால் மலரும் புன்னகை எவரையும் வசப்படுத்தும்! சின்னப் புன்னகை பெரிய காரியங்களைக்கூட நிறைவேற்றும்!😊
நம் அன்றாட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது.நாம் எந்த
விஷயத்தையும் எப்படி அணுகுகிறோமோ, அதன்படிதான் விளைவுகளும் இருக்கும். நம் முகத்தின் ஒரு சின்ன வளைவு, பல பிரச்சினைகளை நேராக்கும் தன்மையுடையது.☺️
பொய்யும் புன்னகையும் உடன் பிறந்தவை! பிடிக்காதபோது பொய்யாக புன்னகைக்கலாம்! மகிழ்ச்சியாக இருப்பதாக பொய்யாகப் புன்னகைத்தும் காட்டிக் கொள்ளலாம்!🙂
நம் மனதில் கவலையும், துன்பமும் தோன்றும்போதெல்லாம் 'இதுவும் கடந்து போகும்' என்பதை நினைவில் கொண்டால் முத்தில் சுருக்கங்கள் நீங்கி புன்னகை தவழ்வதை உணரலாம்!😉
எந்த விஷயத்துக்கும் கோபப்படாமல், சிடுசிடுக்காமல், மலர்ந்த முகத்துடன் காணப்படுவது ஒரு சிறந்த கலை. அதற்கு நல்லெண்ணெங்கள், கடவுள் நம்பிக்கை, திருப்தியான மனநிலை ஆகியவை அவசியம்.🤓
‘நாம் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் நம் ஆயுள் கூடுவதாக’க் கூறப்படுவதால், இன்று சிரிப்பதற்குக் கூட சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன! 😁
எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் மனம் திறந்து மகிழ்ச்சியாக சிரித்துப் பேசுங்கள். அனைவரும் உங்களை விரும்புவர். பிறர் சிரிக்கும்படி வாழாமல், சிரித்து வாழுங்கள்!😆🤩

#சபாஷ்_மத்யமர்_ஓவியப்போட்டி


சகுந்தலை-துஷ்யந்தன்..இது நமக்கு தெரிந்த கதை. இவர்கள் மகன்தான் பரதன். விசுவாமித்திரர்..மேனகையின் மகளான சகுந்தலை கண்வ முனிவரால் வளர்க்கப் பட்டாள். அப்பொழுது வனத்திற்கு வேட்டையாட வந்த துஷ்யந்தனிடம் காதல் வயப்பட்டு இருவரும் காந்லர்வ மணம் புரிந்து கொண்டனர். துஷ்யந்தன் பிரியும்போது மோதிரம் கொடுத்துச் செல்லும் காட்சியே இந்த ஓவியம்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு காகிதத்தில் வரைந்த ஓவியம்.  வரிசையாக பண்டிகைகள். பொறுமையாக வரைய நேரமில்லை. மத்யமரில் பல ஜாம்பவான்களின் அற்புதமான ஓவியங்களுடன் இது போட்டி போட முடியாது என்று தெரிந்தாலும், பங்கு கொள்வதே ஒரு சந்தோஷம் என்பதே என் எண்ணம்.

இப்படி வரையும் வாய்ப்பை அளித்த மத்யம அட்மின்களுக்கு நன்றி!

ஆவணி அவிட்டமும்..காயத்ரி ஜபமும்..


ஆன்மாவைப் பாவங்களிலிருந்து நீக்கி பண்படுத்துவது பண்டிகை. ஸ்ராவணம் என்னும் ஆவணி அவிட்டம் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூவர்ணத்தாரும் கடைப் பிடிக்க வேண்டிய பண்டிகை.

இதுவரை செய்த பாவங்களை நீக்கி  தம்மைப் புனிதப்படுத்து
வதற்காக ஆண்களால் செய்யப் படுவதே ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிதலும், காயத்ரி ஜபத்தன்று காயத்ரி மந்திரம் ஓதுவதும். ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீராமரும் கூட ஆவணி அவிட்டம் செய்ததாக புராணங்கள் உரைக்கின்றன. ஆவணி அவிட்டத்தன்று வேதம் ஓதுவது மிக விசேஷமானது.

இதில் செய்யப்படும் காயத்ரி ஜபம் மிக சக்தி வாய்ந்த கர்மா. காயத்ரீ என்பது தன்னை தியானம் பண்ணுபவர்களை ரக்ஷிப்பது. காயத்ரி வேத மந்திரங்க
ளுக்கெல்லாம் அன்னை, காயந்தம்+த்ராயதே இதி = காயத்ரி. சந்தியாவந்தன காயத்ரியான நிச்ரு காயத்ரியில் 23 எழுத்துக்களும், வேதத்தில் வரும் காயத்ரி சந்தஸில் 24 எழுத்துக்களும் உள்ளன. இதிலுள்ள 24 எழுத்து மந்திரங்களும் எல்லா தேவதைகளையும் குறிப்பது.

வேதங்களின் மாதாவான ஸ்ரீகாயத்ரி தேவியை காலையில் பிரம்ம ஸ்வரூபிணியாயும், ஸ்ரீசாவித்ரி தேவியை மதியம் ருத்ர ஸ்வரூபிணியாயும், ஸ்ரீசரஸ்வதி தேவியை மாலையில் விஷ்ணு ஸ்வரூபிணியாயும் த்யானம் செய்வதே ‘த்ரி கால சந்த்யா வந்தனம்’ எனப்படுகிறது.

'யக்ஞ ஸ்வரூபியான விஷ்ணுவின் ஜீவஸ்வரூபத்தைக் கொண்டதும், மிக புனிதமானதும், எல்லா தோஷங்களையும் நீக்கி பரிசுத்தம் செய்யக் கூடியதும், ஆயுளைக் கொடுக்கக் கூடியதும், மிக உயர்வுள்ளதும், வெண்மையாக பிரகாசிப்பதுமான யக்ஞோபவீதமே, நீ எனக்கு மோட்சத்தை அளிப்பாயாக’ என்பதே உபவீதம் அணியும் போது கூறும் மந்திரத்தின் பொருள்.

சந்தியாவந்தனம் பிரும்மசாரி, கிருஹஸ்தன், வானப்ரஸ்தன் ஆகிய மூவராலும் செய்யத் தக்கது. சந்தியாவந்தனம், மாத்யான்னிகம் செய்வதாலேயே ஒருவன் சகல வைதிக காரியங்களும் புரிய அருகதை பெறுகிறான். சந்தியாவந்தன மகிமையைப் பற்றி ஜகத்குரு மகா பெரியவாள் அவர்கள் 1939-ல் முடிகொண்டான் கிராமத்தில் அருளிய உபதேசத்தின் சாரம்.

ஸந்தியாவந்தனத்தின் மகிமை
யைப் பற்றி ஒரு கதை.சுமார், அறுநூறு வருஷங்கள் முன்னால் திருவனந்தபுரத்திலிருந்து
கொண்டு ஆட்சி செய்த ஒரு கேரள ராஜாவுக்கு தீராத ரோகம் உண்டாயிற்று. எத்தனை வைத்யம் பார்த்த போதிலும் வியாதி பிடிபடவில்லை. ஒரு நாள்
ராத்திரி பகவானையே ப்ரார்த்தனை பண்ணிக்கொண்டு அப்படியே கொஞ்சம் கண்ணயர்ந்து விட்டான்.

அப்போது அவன் ஸ்வப்னத்தில் ஆகாசத்துக்கும் பூமிக்குமாக ஒரு பெரிய ரூபம் தோன்றி அவனிடம், “ராஜாவே! உனக்கு ஏற்பட்டிருப்பது கர்ம வியாதி. அதாவது போன  ஜன்மத்தில் நீ பண்ணின பாபத்தில் தீராமல் மிச்சமாயிருந்த சேஷமே ரோகமாகியிருக்கிறது. இதை நீ அனுபவித்துத்தான் தீர்த்துக்
கொள்ள வேண்டுமேயோழிய மருந்தால் குணப்படுத்த முடியாது. ஒன்று வேண்டுமானால் நீ செய்யலாம். உன் அளவிற்கு  எள்ளினால் ஒரு ப்ரதிமை பண்ணி அதற்குள்ளே பூராவும் தங்கத்தினால் நிரப்பி, அதிலே உன் கர்மாவை, பாபத்தை, ரோகத்தை ஆவாஹனம் செய்து சத்தான ஒரு ப்ராமணனுக்கு தானம் கொடுத்துவிடு. அப்போது கர்மா உன்னைவிட்டு அவனிடம் போய்விடும். அவன் நல்ல மந்த்ர சக்தியுள்ளவனாயிருந்தால் ரோகத்தை செரித்துக்கொண்டு விடுவான். அது எப்படியானாலும் அவனுக்கு இப்படி ரோகத்தை உண்டாக்குவதற்கு பரிஹாரமாகத்தான் இவ்வளவு தங்கம் கொடுக்க வேண்டும்” என்று சொல்லிற்று.

விடிந்ததும் ராஜா   எள்ளினால் ஒரு கால புருஷன் உருவத்தைச் செய்து அதனுள் துவரம்பருப்பு வடிவில் ஏராளமான பொற்காசுகளை வைத்து, அவற்றை தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். ஆனால் அவன் ரோகத்தை வாங்கிக் கொள்ள யாரும் வரவில்லை.

வெளியூர், வெளி ராஜ்யங்களி
லிருந்தாவது எவராவது வரமாட்டார்களா என்று நாலா திக்கிலும் தண்டோரா போட ஆள் அனுப்பினான். இந்த விஷயம்
கர்நாடக ராஜ்யத்திற்கும் எட்டிற்று.
நல்ல மந்த்ர சக்தியும் தைர்யமும் உள்ள ஒரு கன்னட பிரம்மசாரி தானம் வாங்கிக் கொள்ளுவ
தற்காகத் திருவனந்தபுரம் வந்தான்.

ராஜாவுக்கு ஸந்தோஷம் தாங்க முடியவில்லை. முறையாகத்
தாரை வார்த்து எள்ளுப் பொம்மையை பிரம்மசாரிக்குத் தானம் பண்ணினான்.

அப்போது ஓர் ஆச்சரியம் நடந்தது. பிரம்மச்சாரி ப்ரதிமையையே உற்றுப் பார்க்க, அது தன்னுடைய வலது கையை உயரத் தூக்கிக் கொண்டு சுண்டு விரலையும் கட்டை விரலையும் மடித்துக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் நீட்டிக் காட்டிற்று.
ராஜாவின் பூர்வகால கர்ம சேஷம் கால புருஷன் என்ற மூர்த்தியாக ப்ரதிமையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதனால், உயிரற்ற பிம்பம் நிஜமாகவே பிராணன் உள்ள ஜீவனாக ஆகி விட்டது.

அது இப்படி மூன்று விரலை உயர நீட்டிக் காட்டியதும் பிரம்மச்சாரி தலையை ஆட்டி “அதெல்லாம் முடியாது” என்றான்.
உடனே பிம்பம் மோதிர விரலை மடக்கி விட்டு மற்ற இரண்டு விரல்களை மட்டும் நீட்டியபடி வைத்திருந்தது.“அதுவும்கூட
முடியாது” என்று கர்னாடக பிரம்மச்சாரி தலையாட்டினான்.
பிம்பம் நடு விரலையும் மடக்கி, ஆள்காட்டி விரல் ஒன்றை மாத்திரம் காட்டிக் கொண்டிருந்தது.
”போனால் போகிறது. உன்னிஷ்டப்
படியே ஆகட்டும்” என்றான் பிரம்மச்சாரி.

அப்படி அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் பிம்பம் பரம ஸந்தோஷத்தோடு அவன் காலிலே விழுந்து ஸாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுந்தது. அப்புறம் பிம்பம்
வெறும் பிம்பமாக மட்டும் நின்றது. காலபுருஷன் அதை விட்டுச் சென்று விட்டான்.

அந்த உருவச் சிலையிலிருந்த பொற்காசுகள் அனைத்தையும் அந்தப் பிரம்மசாரி தானமாக அடைந்தார்.

காலபுருஷன் காட்டிய மூன்று விரல்களும் மூன்று வேளைகளில் செய்யப்படும் சந்தியாவந்தனம், மற்றும் மாத்யான்னிகத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை, மாலை சந்தியாவந்தனங்களின் பலன். ஒரு விரல் ஒரு வேளை மட்டும் செய்யப்படும் மாத்யான்னிகத்தின் பலன். கால புருஷன் கடைசியாகக் கேட்ட அந்த ஒரு வேளையின் பலனை மட்டும் பிரம்மசாரி அவனுக்கு அளித்ததால் அவருக்கு ஐஸ்வர்யம் கிட்டியது.

ஆனால், மாத்யான்னிகத்தின் பலனைக் கொடுத்து தானத்தைப் பெற்றுக் கொண்ட்தால் அவருக்கு பாபம் சம்பவித்தது. அதைப் போக்கிக் கொள்வதற்காக, தனக்குத் தெரிந்த கோவில் குருக்களிடம் பொற்காசு மூட்டையைக் கொடுத்து பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு, அவர் தல யாத்திரை புறப்பட்டார்.

வழியில் ஒரு கிழ வேதியர் எதிர்ப்பட்டார். அவரது தவக்கோலம் கண்ட பிரம்மசாரி அவர் காலில் விழுந்து வணங்கித் தன் பாபம் போக்க வழி சொல்லுமாறு கேட்டார். அந்த வேதியர், “நீ செல்லும் வழியில் ஒரு பசு மாடு எதிர்ப்படும். நீ அதைப் பின் தொடர்ந்து செல். அது எவ்வளவு தூரம் போகிறதோ அவ்வளவு தூரம் நீ ஒரு கால்வாய் வெட்ட வேண்டும். இதுவே உன் பாபம் நீங்க வழி” என்று சொன்னவர், தானே அகத்திய முனிவர் என்பதை வெளிப்படுத்தி விட்டு மறைந்தார்.

பிரம்மசாரி அதன்படியே கால்வாய் வெட்டும் செலவுக்காக கோயில் குருக்களிடம் சென்று தான் கொடுத்து வைத்த திரவியத்தைக் கேட்டார். அவருக்கோ பிரம்மசாரி தன்னிடம் கொடுத்த செல்வத்தை அபகரித்துக் கொள்ளவேண்டும் என்று துராசை ஏற்பட்டது.

அவர் பிரம்மசாரியிடம் ஒரு மூட்டை துவரம் பருப்பைக் கொடுத்து, “நீங்கள் கொடுத்தது இதுதான்” என்று சொல்லி விட்டார். பிரம்மசாரி மன்னனிடம் சென்று முறையிட, குருக்கள் வரவழைக்கப்
பட்டார். பிரம்மசாரி தங்கள் ஊர் கோயிலில் உள்ள சுவாமி முன் அவரை சத்தியம் செய்யச் சொன்னார்.

குருக்கள் ஆபிசாரப் பிரயோகம் செய்வதில் வல்லவர். அவர் சுவாமியைப் பக்கத்தில் உள்ள மரத்தில் ‘ஆவாஹனம்’ செய்து விட்டார். அதை இறைவன் பிரம்மசாரிக்கு உணர்த்திவிட, அந்த மரத்தின் முன்தான் குருக்கள் பிரமாணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார் அவர். மன்னனும் அவ்வாறே செய்யுமாறு கட்டளையிட்டான்.

வேறு வழியில்லாமல் குருக்கள் மரத்தடியில் பிரமாணம் செய்தபோது தீச்சுவாலைகள் தோன்றி அவரை எரித்தன. பிரம்மசாரி தன் தனத்தை அடைந்து அதன் மூலம் வேதியர் சொன்னவாறு கால்வாய் வெட்டி தன் பாபத்தைப் போக்கிக் கொண்டார். அதுவே இன்றும் கன்னடியன் கால்வாய் என்ற பெயரில்  இருக்கிறது.

ஸ்ரீபரமாச்சார்யாள் சொன்ன இந்தக் கதையினால் சந்தியாவந்தனம், மாத்யான்னிகம் இவற்றின் மகிமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday 7 August 2019

பரமபதம் பிறந்தது எப்போ..

Unbelievable!!!
The 13th century poet saint Gyandev created a children's game called Moksha Patam. The British later named it Snakes and Ladders instead of the original Moksha Patam.
In the original one hundred square game board, the 12th square was faith, the 51st square was reliability, the 57th square was generosity, the 76th square was knowledge, and the 78th square was asceticism. These were the squares where the ladders were found and one could move ahead faster. The 41st square was for disobedience, the 44th square for arrogance, the 49th square for vulgarity, the 52nd square for theft, the 58th square for lying, the 62nd square for drunkenness, the 69th square for debt, the 84th square for anger, the 92nd square for greed, the 95th square for pride, the 73rd square for murder and the 99th square for lust. These were the squares where the snake waited with its mouth open. The 100th square represented Nirvana or Moksha.The tops of each ladder depict a God, or one of the various heavens (kailasa, vaikuntha, brahmaloka) and so on. As the game progressed various actions were supposed to take you up and down the board as in life... Amazing, isn't it???!
🙏🙏

அத்தி வரதா..வரம்தா🙏




அன்புள்ள அத்தி வரதா..
ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்🙏உனக்கு ஆதங்கத்தில் சில கேள்விகள்.

அத்தி வரதா..அத்தி வரதா..என்ற கோஷம் உனக்கு தேனாய் இனிக்கிறதா?

ஆயாசமாகப் படுத்திருந்த நீ இப்பொழுது ஆரவாரமாக நின்றிருக்கிறாயே..கால்கள் துவளவில்லையா?

மீண்டும் நாற்பதாண்டுகள் நீரினுள் சயனிக்க இரவும் பகலும் நின்று உன் உடம்பை நிலைக்குக் கொண்டுவர இந்த தோற்றமா?

உன்னைக் காணவரும் மக்கள் படும் பாட்டைக் கண்டாயா..காணாதது போல் காட்சி தருகிறாயா?

உன்னை கூட்டத்தில் முட்டி மோதி, பாடுபட்டு தரிசித்தால் மட்டுமே பரமபதம் தருவாயா?

சயனித்திருந்தபோது கண்களைத் திருப்ப முடியாமல் மேலே பார்த்திருந்தாய்..இப்போதோ நேராகப் பார்த்தும் எதுவும் தெரியவில்லையா?

பணம் இருந்தால் மட்டுமே  உன் பதவிசான கோலத்தை பக்கத்தில் வந்து பார்க்க முடியுமா?

பக்தி என்ற பெயரில் பொய்யாக உலாவருபவர்களை உன்னால் அறிய முடியாதா?

பாமர மக்கள் உனை தரிசிக்கப் படும் பாட்டை உன் கண்கள் காணவில்லையா?

'கோவிந்தா' என்று கதறியழைத்து உன் தரிசனத்தை கண்சிமிட்டும் நேரம் கூட காணமுடியாது திரும்பும் பாமர மக்களை பார்த்தாயா?

ஈரேழுலகையும் கட்டி மேய்க்கும் ஆநிரைக் கண்ணா... உனக்கு 'எதுவும் தெரியாது' என்று ஜாலம் செய்துவிட்டு மீண்டும் 'ஜலவாசம்' செய்யப் போகிறாயா?

உன்னிடம் நாங்கள் கையேந்துவது ஆழிமழை வேண்டி..இது உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

கோகுலத்து மக்களுக்கு கோவர்த்தனம் தூக்கி மழையிலிருந்து காப்பாற்றினாயே..அந்த மலையைத் தூக்கியபடியே இங்கு வந்துவிட்டாயோ?!

அதனால்தான் வருணதேவனும் உன்னிடம் பயந்து வரத் தயங்குகிறானோ!

'நாராயணா'என்று மகனை அழைத்த அஜாமிளனுக்கு ஓடி வந்து மோட்சம் அளித்த பரந்தாமா!

'என் மானத்தைக் காப்பாற்று' என்று கதறிய திரௌபதிக்கு உடன் அருள் செய்த வாசுதேவா!

'ஆதிமூலமே' என்றலறிய கஜேந்திரனைக் காப்பாற்ற சங்கு சக்கரத்தை கைமாற்றி எடுத்து வந்த  ஜகத்ரட்சகா!

பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிவந்த பரமாத்மா!

அன்று ஒருவரின் குரலுக்காக அருள்செய்த நீ இன்று கோடானுகோடி மக்கள் கூப்பிட்டும் மனமிரங்காதது ஏன் கோபாலா?

நீ வெளியில் வந்ததும் மழை பொழிந்து எங்கும் வளம் பெருகும் என்று காத்திருக்கும் எங்களை ஏமாற்றலாமா அத்தி வரதா?

நீரிலிருக்கும் நீ அதன் அருமையும் பெருமையும் அறியாயோ?

உனைக் கரம் குவித்து வணங்குகிறோம்..🙏

தண்டனிட்டுத் தாள்
பணிகிறோம்..🙏

சிரம் குனிந்து பாதம்
தொழுகிறோம்..🙏

உன் விழிமலர்களைத்
திறந்து பார்..🙏

உன் கருணையை
மழையாய்ப் பொழிந்துவிடு..🙏

அத்தி வரதா..அருளாளா🙏

வரம்தா ...எங்கள் வரதா🙏

அத்தி வரதா உனை மன
சுத்தியோடு வணங்கி
நித்தமும் அடிபணிந்து
பக்தியுடன் துதித்து
தித்திக்கும் நின் நாமம்
சித்தம் குளிரப் பாடி
முக்தி பெறுவதற்கு
சித்திக்கும் நாள் வருமோ?

அத்திவரதர் தரிசனம்...1.7.2019 -17.8.2019



Happy Friendship Day..4.8.2019

என் சிநேகிதி
எனக்கு பள்ளி நாட்களில் தோழிகள் உண்டு. ஆனால் படிப்பு முடிந்தபின் அந்தத் தோழமை தொடரவில்லை.

திருமணத்திற்குப் பின் மொழி தெரியாத வெளி மாநில வாசம்! அதில் நட்புக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை!

என் கணவருக்கு வங்கியில் அடிக்கடி  வரும் வேலை மாற்றங்களால் பல ஊர்களில் வாசம்! அப்போது எனக்கு சில சிநேகிதிகள் கிடைத்தாலும்,
அடுத்த ஊருக்குச் செல்லும்போது,  அந்த சிநேகம் சில நாட்க
ளிலேயே கடிதத் தொடர்புடன் துண்டித்துப் போகும்.

பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். வாழ் நாளில் நாம் பலருடன் பழகுகிறோம். நட்புடன் இருக்கிறோம். ஆனால் யாராவது ஒருவர் மட்டுமே உள்ளார்ந்த, ஆழ்ந்த நட்புடன் இருக்க முடியும்.'ஹாய்-பை’ சொல்லிப் பிரியும் நட்பாக இல்லாமல்  ஆத்மார்த்தமாக இருக்கும் ஆழமான நட்பே இறுதி வரை தொடரும்.

நாங்கள் ஈரோட்டில் இருந்த சமயம் என் மகனுடன் படித்த மாணவனின் தாயாக  அறிமுகமான என் தோழி முத்துலட்சுமியின் ஆழமான, அழுத்தமான நட்பு, 25ஆண்டு
களுக்கும் மேலாகத் தொடர்கிறது.

எங்கள் எண்ணங்கள், ரசனைகள், அபிப்பிராயங்கள் ஒரே அலைவரிசையில் இருந்ததனால், எங்கள் நட்பும் இன்று வரை தொடர்கிறது.  நான்கு வருடங்களுக்குப் பிறகு ஈரோட்டை விட்டு மாற்றலாகி நாங்கள் கிளம்பியபோது, பிரிவு தாங்காமல் இருவருமே கண்கலங்கி விட்டோம். அன்று முதல் இன்று வரை தொலைபேசி, ஈமெயில், கடிதங்கள்தான் எங்கள் நட்பிற்குப் பாலமாக இருக்கிறது.

எங்களுக்குள் நட்பு இவ்வளவு வலுவாகக் காரணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்!

கணவர், சகோதரி, மகள்,
தாய் என்று யாரிடமும் பேச முடியாத பல விஷயங்களை நாங்கள் மனம் திறந்து பேசிக் கொள்வோம். அப்போது கிடைக்கும் ஆறுதலும் நிம்மதியும் தனிதான். எங்கள் மனக் கவலைகளை, ஆதங்
கங்களை ஒருவருக்கொருவர் நாங்கள் பகிர்ந்து கொள்ளுவதால் மனம் லேசாகி கவலை பறந்தோடுவதை உணர்கிறோம்.

நாங்கள் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. எங்கள் குழந்தைகள் கூட எங்களைக் கேலி செய்வார்கள். எங்களுக்கு ‘உபிச’ (உடன் பிறவா சகோதரி) என்ற பட்டமே கொடுத்தி
ருக்கிறார்கள்!

நான் வெளியூர்களில் இருக்கும்போது வருடத்தில் ஒரு முறையாவது நாங்கள் தவறாமல் சந்தித்துக் கொள்வோம். இப்பொழுது நான் திருச்சியில் இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிகிறது.

இன்றும் நினைத்தால் உடனே போனில் பேசிக் கொள்வோம்! வாய்விட்டுச் சிரிப்போம்!  பழைய நினைவுகளைப் பேசி மகிழ்வோம்!எத்தனை நெருங்கிய உறவுகள் இருந்தாலும் மனம் ஒன்றிய சிநேகிதிதத்திற்கு எதுவும் இணையாகாதுதான்.

எங்கள் முப்பது வயதுக்கு மேல் ஏற்பட்ட இந்த நட்பு, புரிந்து கொள்ளல் நிறைந்ததாக  இன்றுவரை   இருக்கிறது. இந்த நண்பர்கள் தின நாளில் என் தோழியைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அனைத்து மத்யம நண்பர்களுக்கும் என் நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!