Friday 25 May 2018

படித்த தில் பிடித்தது

ஒரு சமயம்
கலைவாணர் N.S.கிருஷ்ணன், எழுத்தாளர் அவர்கள்
மாநாடு ஒன்றில் பேசினார்.
  
“தற்போதைய எழுத்தாளர்கள் பேனாவை எப்படிப்பட்ட
*மையை* 
தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா?
சிலர்
*தற்பெரு“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
சிலரோ
*பொறா“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள்.
வேறு சிலரோ
*பழ“மை“*யில்
தொட்டு எழுதுகிறார்கள். பரவாயில்லை.
இவற்றையெல்லாம்
*அரு“மை“*யான
எழுத்துக்கள் என்று சொல்லாவிட்டாலும் ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம்.
“ஆனால் எழுத்தாளர்கள் தொடவே கூடாத சில
*“மை“கள்*
உள்ளன.
இவை என்ன தெரியுமா?
*கய“மை“*,
*பொய்“மை“*,
*மட“மை“*,
*வேற்று“மை“*
ஆகியவைதாம்.
கூட்டத்தில் கைதட்டல் எழுந்தது.
“எழுத்தாளர்கள் தொட்டு எழுதவேண்டிய
*“மைகள்“*
என்னென்ன தெரியுமா?
*நன்“மை“*
தரக்கூடிய
*நேர்“மை“*, *புது“மை“*,
*செம்“மை“*,
*உண்“மை“*.
இவற்றின் மூலம் இவர்கள்
நீக்க வேண்டியது
எவைத் தெரியுமா?
*வறு“மை“*,
*ஏழ்“மை“*,
*கல்லா“மை“*,
*அறியா“மை“*
ஆகியவையே.
இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் தங்கள்
*கட“மை“*
யாகவும்,
*உரி“மை“யாகவும்*
கொண்டு சமூகத்திற்குப்
*பெரு“மை“*
சேர்க்க வேண்டும்“ என்று பேசி முடித்தார்.
கூட்டத்தில் கைதட்டலும் உற்சாக ஒலியும் விண்ணைப் பிளந்தன.

*அன்புத் தம்பியே!*


*அன்புத் தம்பியே!*
💛💛💛💛💛💛💛💛💛
நற்றமிழின் சாறெடுத்து
நனி கரும்பைப் பிழிந்தெடுத்து
நன்நயமும் மென்நடையும்
நவில்நடையும் சொல்லழகும்
நற்சுவையாய் கலந்தெடுத்து
நீ நவின்ற நன்றிமடல்
அருமை!அழகு!அற்புதம்!
💙💙💙💙💙💙💙💙💙
வாழ்த்திய அனைவருக்கும்
வகைவகையாய் நீ சொன்ன
வார்த்தைகள் மிகச் சிறப்பு!
💜💜💜💜💜💜💜💜💜
இன்று போல் என்றும் நீ
இளமையுடன் இன்பமுடன்
வளமையுடன் மகிழ்ச்சியுடன்
பாங்குடனே வாழ்வில் 
சீரும் சிறப்பும்
பேறும் புகழும்
பெருமையும் திறமையும் இறையருளால் பெறுவாய்!
💚💚💚💚💚💚💚💚💚
உன் கனவுகளும் ஆசைகளும்
கச்சிதமாய் நிறைவேறி *வாகைசூடி சரித்திரம்படைத்திடவும்*
*வானம் தொடும் 
புகழ் அடைந்திடவும்*
*வசந்தமான வாழ்வு 
நிலைபெறவும்*
வாழ்த்துகிறேன்
இவ்வைம்பதாம் பிறந்தநாளில்
தாங்கொணா மகிழ்ச்சியுடன்
*தமக்கை நான்!*
💐💐💐🌸🌸🌸💐💐💐


Sunday 13 May 2018

தாயே தலை வணங்குகிறேன்




 அன்னையர் தினப் பதிவு...13.5.2018

அன்புள்ள அம்மா வணக்கம்!

தலைமகளாய் என்னை ஈன்றெடுத்தாய்!

அள்ளி அணைத்து அரவணைத்து முத்தமழை பொழிந்தாய்!

தலைவாரி பூச்சூட்டி என்னை அழகு பார்த்தாய்!

அன்பாய், பண்பாய் இருக்க கற்பித்தாய்!

கல்வி,கலைகளில் சிறக்க ஊக்கம் தந்தாய்!

கடமையில் கருத்தாய் இருக்க கற்றுக் கொடுத்தாய்!

அடுத்தவரை நேசிக்க அழகாய் சொல்லித் தந்தாய்! 

தவறுகளைத் திருத்திக் கொள்ள சற்றே கோபித்தாய்!

என் மணநாள் அன்று  கண் கலங்கி அழுதாய்!

பரிவாய், பாசமாய், பக்குவமாய் வாழ அறிவுரைத்தாய்!

நான் சோர்ந்து போனபோது பரிவாய் எனக்கு ஆறுதல் தந்தாய்!

நான் பாடும்போது பரவசமடைந்தாய்!

என் எழுத்துக்களை படித்து ரசித்தாய்!

நான் தாயானபோது முகம் மலர ஆனந்தித்தாய்!

என் குழந்தைகளை பாசத்துடன் நேசித்தாய்!

அன்பு தந்தாய்!
ஆசையாய் அரவணைத்தாய்!

 நான் துவண்டபோது நீ தோள் கொடுத்தாய்!
நான் சிரித்தால் நீயும் முகமலர்ந்து சிரித்தாய்!

பக்க பலமாய் துணையிருந்தாய்!
சக்தியாய் உடனிருந்தாய்!
நீ ஏன் அம்மா மறைந்தாய்?

மகிழ்ச்சியான தருணங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும்போது நீ உடன் இல்லை என்ற உணர்வில் கண்கள் கசிகின்றது.

நீ அன்று எனக்கு அளித்த அறிவுரைகளும், படிப்பினைகளுமே இன்று என் வாழ்வை சிறக்க வைத்திருப்பதை உணர்ந்து உனக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனையோ விஷயங்கள் உன்னிடம் மட்டுமே சொல்ல விழைகிறேன்.

உன்னை மீண்டும் காண மனம் ஏங்குகிறது.

இன்று எல்லாம் இருந்தும் நீ இல்லையே அம்மா!
என்று எங்கு உன்னைக் காண்பேன் அம்மா.

உன்னைத் தாயாய் அடைந்ததற்கு தலைவணங்குகிறேன் என் அன்பு அன்னையே!