Tuesday 5 February 2019

அன்புப் பாலம் 

ராதா பாலு

"ஜோதி! இங்க வாம்மா! சமையல் அப்பறம் செய்யலாம். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்."

அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி, நைட்டிக்கு மாறியவள், தயாராக வைத்திருந்த காஃபியைக் குடித்தாள். இரவு சமையலைக் கவனிக்க அடுக்களைக்குள் சென்றவளை கமலியின் குரல் தடுத்தது.

"இதோ வரேம்மா! என்ன விஷயம்?" அருகில் வந்து அமர்ந்தாள் ஜோதி.

"என்னங்க...நீங்கதான் சொல்லுங்களேன்!"

"என்னப்பா...அம்மா என்ன சொல்றாங்க?"

"அது.... ஒரு கல்யாண விஷயம். நீயே சொல்லேன் கமலி!"

கல்யாணம் பற்றிப் பேசினாலே பிடி கொடுத்துப் பேசாமல் நழுவி விடுவாள் ஜோதி! அதனால் தயங்கிய வெங்கடாசலம், கமலியைக் கைகாட்டி விட்டார்.

"கல்யாணமா? யாருக்கு? எங்க?"

"அம்மா ஜோதி! இன்னும் எத்தனை நாளைக்கு நீ இப்படி தனியா வாழ முடியும்? சேகர் போய் விளையாட்டுப் போல இரண்டு வருஷம் ஆயாச்சு. நாங்க இன்னும் எவ்வளவு நாள் சாஸ்வதம்? உனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க நானும், அப்பாவும் முடிவு பண்ணியிருக்கோம்மா! இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னைப் பார்க்க அந்தப் பையன் வருவான். இந்த நைட்டியை மாற்றி ஒரு நல்ல புடவையைக் கட்டிக்கோ."

"திடீர்னு என்னம்மா இதல்லாம்? என்னால சேகரைத் தவிர இன்னொருத்தரை...."

"இதப்பாரு ஜோதி! உன்னை நீயே ஏமாத்திக்காத. உனக்கும் சின்ன வயசு. குழந்தைகளைப் பெத்துகிட்டு சந்தோஷமா வாழ வேண்டிய வயசு. நாங்க எதுவும் உன் நல்லதுக்குதாம்மா சொல்வோம். மறுத்துப் பேசாதே"

வெங்கடாசலம் கண்டிப்பாகக் கூறினார்.

"ஏம்பா! நான் உங்களுக்கு பாரமா இருக்கேனா? எங்கயாவது லேடீஸ் ஹாஸ்டலுக்கு போயிடவா?"

ஜோதிக்கு அழுகையில் வார்த்தைகள் தடுமாறியது.

"அப்படி இன்னொரு தரம் சொல்லாதம்மா. நாங்க ரெண்டு பேரும்தான் உனக்கு பாரமா இருக்கோம். உன் பிறந்த வீட்டுக்கும் போகாம எங்களுக்கு செய்யணும்னு உனக்கு என்னம்மா தலையெழுத்து?'

"அப்பா! அப்படியெல்லாம் பேசாதீங்க. கல்யாணமான அன்னிக்கே அவருடைய உறவுகளும் என் உறவாயிடுச்சு. அவருக்கு அப்புறம் அவரோட வேலையை நான் ஏத்துகிட்ட மாதிரி, அவரோட பொறுப்புகளையும் ஏத்துக்க வேண்டியது என் கடமை இல்லயா அப்பா? அந்தக் கடமை எனக்கு பாரமில்லப்பா! அது என் உரிமை ஆனா நீங்க ரெண்டு பேரும்தான் என்னை இன்னமும் உங்க பெண்ணா நினைக்கலை."
கண் கலங்கினாள் ஜோதி.

"உன்னை எங்க சொந்தப் பெண்ணா நினைச்சுதாம்மா இந்த முடிவை எடுத்திருக்கோம். நாங்க சொல்றதை நீ எப்பவும் தட்ட மாட்டேங்கிறதாலதான் அந்தப் பையனை வரச் சொல்லிருக்கோம்மா. அவரும் மனைவியை ஒரு வருஷம் முன்னால மூளைக் காய்ச்சல்ல பறி கொடுத்தவர்"

கமலி சொல்ல வெங்கடாசலம் தொடர்ந்தார்.

"அவருடைய மாமனார், மாமியாருக்கு அவர் மனைவி ஒரே மகள். இவங்களை அவர்தான்மா தன்கூட வெச்சுகிட்டிருக்கார். அவங்க வற்புறுத்தலாலதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கார். அவருடைய மாமனார் என் பால்ய நண்பன்மா."

"நீ சேகருக்கு துரோகம் பன்றதா நினைக்காதம்மா. அவன் உயிர் போறதுக்கு முன்னால எங்ககிட்ட உனக்கு இன்னொரு கல்யாணம் செய்து வெக்கச் சொல்லி சத்தியம் வாங்கிண்டான். அதை நிறைவேத்தற்து எங்க கடமையில்லயாம்மா?'

சொல்லும்போதே கமலியின் நாக்கு தழுதழுத்தது. ஜோதிக்கு பழைய நினைவுகள் மனதில் வந்து நெஞ்சில் அடைத்தது.

சேகருக்கு அடிக்கடி டூர் போகும் வேலை. ஊரில் இருக்கும் நேரங்களில் இருவரும் ஜாலியாக சினிமா, பீச் என்று ஊரைச் சுற்றி சந்தோஷமாக நாட்களைக் கழிப்பார்கள். கமலியும் ஜோதியை எந்த வேலையும் செய்ய விடாமல் சேகரோடு இருக்கச் சொல்லிவிடுவாள்.

அன்றும் இப்படித்தான் மிக சந்தோஷமாக இருவரும் பைக்கில் சினிமாவுக்குக் கிளம்பினார்கள். போகும் வழியில் திடீரென ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் எதிரில் வந்த லாரி மோத, இருவரும் தூக்கி எறியப் பட்டார்கள். அவ்வளவுதான் ஜோதிக்குத் தெரியும்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஜோதி கண்விழித்தபோது சேகர் சாம்பலாகியிருந்தான். சேகருக்கு தலையில் நல்ல அடிபட்டு ஆபரேஷன் செய்து, ஒரு நாள் நன்கு பேசிக் கொண்டிருந்ததாயும் பிழைத்து விட்டான் என்று சந்தோஷப் பட்டபோது, திடீரென்று தலையில் ரத்தப் போக்கு அதிகமாகி இறந்து விட்டதாயும் சொன்னதைக் கேட்ட ஜோதி அலறிய சத்தத்தில் மருத்துவமனையே அதிர்ந்தது.

மீண்டும் மயக்கமானவள் நார்மலாக ஒரு வாரமாயிற்று. சேகரை இழந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே அவளுக்கு சில மாதங்களாயிற்று.

பழைய நினைவுகளால் தாக்கப்பட்டு மௌனமாயிருந்த ஜோதி, மாமியாரின் குரலில் நிகழ் காலத்துக்கு வந்தாள்.

"என்ன ஜோதி யோசிக்கற? போய் உடையை மாத்திக்கிட்டு வா. உனக்கு நல்லபடி கல்யாணத்தை முடிச்சுட்டு நாங்க ஏதாவது ஒரு முதியோர் இல்லத்துக்கு போகலாம்னு இருக்கோம்."

உடை மாற்ற எழுந்த ஜோதி 'பட்'டென்று உட்கார்ந்தாள்.

"வேண்டாம்... நான் இதுக்காகதான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன். நீங்க என்னை விட்டுப் போவதாயிருந்தால் நான் கல்யாணமே செஞ்சுக்க முடியாது. கடைசி வரைக்கும் உங்க கூடவே இருந்துடுறேன்."

"என்ன ஜோதி இது இதெல்லாம் நடக்கற காரியமா?"

"நானே அந்தப் பையன்கிட்ட பேசிக்கறேன். இதுக்கு அந்தப் பையன் ஒத்துகிட்டா ஓகே! இல்லாட்டி நோ மேரேஜ்!"

ஜோதி உள்ளே சென்றதும் கமலி, வெங்கடாசலத்திடம் கவலையோடு கேட்டாள்.

"என்னங்க இது? இவ இப்படி பேசறாளே? இவ மருமகளா கிடைச்சது நாம பண்ணின புண்ணியம்."

கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கமலி. "பேசாமல் இரு. முதலில் கல்யாணம் முடியட்டும்."

"வாங்க மகேஷ்! உக்காருங்க! கமலி.... ஜோதியை டிஃபன், காஃபியோட வரச் சொல்லு."

"அந்த ஃபார்மாலிட்டியெல்லாம் எதுக்குங்க?"

மகேஷ் கூச்சத்துடன் சொல்ல ஜோதி தட்டில் குலோப்ஜாமூன், மிக்சருடன் காஃபியை எடுத்து வந்தாள். மகேஷிடம் கொடுத்தவள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"நான் என்னைப் பற்றி ஸ்பெஷலா சொல்ல ஒண்ணுமில்லீங்க. நான் ஒரு மெகானிகல் எஞ்சினியர். உங்களுக்கெல்லாம் 'ப்ரேம் நிவாஸ்' பற்றி தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். அந்த அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன். நான் வேலை செய்த கம்பெனியில் அனுவை சந்தித்தேன். நட்பு காதலாகி கல்யாணம் செய்து கொண்டோம். நாலு வருஷம் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தோம்."

உணர்ச்சி மிகுதியில் வார்த்தைகள் தடுமாறின.

"அனு அவங்க பெற்றோருக்கு ஒரே மகள். ஊர் பேர் தெரியாத எனக்கு அனுவைக் கல்யாணம் செய்து கொடுத்த அவங்களோட பெருந்தன்மை, எனக்கு அவங்க மேல இருந்த மதிப்பை உயர்த்தியது. அவங்களும் எங்க கூடவே இருந்தாங்க. அனாதையா அன்புக்கு ஏங்கிக்கிட்டிருந்த சமயம் அம்மா, அப்பா கிடைச்ச சந்தோஷம் எனக்கு! மகளுக்கு அவள் விரும்பிய நல்ல வாழ்க்கை கிடைச்ச சந்தோஷம் அவங்களுக்கு! எங்க எல்லார் சந்தோஷத்தையும் அனுவுக்கு வந்த ஒரு நாள் ஜுரம் தவிடு பொடியாக்கிடுச்சு. எமனுக்கு என்ன அவசரமோ, ஆஸ்பத்திரியில் சேர்த்த நாலாம் நாள் அனு போய் சேர்ந்துட்டா. மூளை காய்ச்சல்னு காரணம் சொல்லிட்டாங்க டாக்டர்கள்."

துக்கம் நெஞ்சை அழுத்த, சற்று சுதாரித்துவிட்டு மேலே தொடர்ந்தான் மகேஷ்!

"அனு காரியமெல்லாம் முடிந்து அவளுடைய பெற்றோர் தனியா போறதா சொன்னாங்க. ஆனால் அருமையாகக் கிடச்ச பெற்றோரை நான் இழக்க விரும்பல. நான் அவங்க மகனா இருந்து கவனிச்சுக்கறேன். அவங்க வற்புறுத்தல்தான் என்னை இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தது."

"நீங்க உங்க மாமனார், மாமியாரைத் தாங்கற மாதிரிதான் ஜோதியும் எங்களை அவ பெற்றோரா நினைச்சு, எங்களுக்கு மகன் இல்லாத குறை தெரியாம பார்த்துக்கறா. சேகர் போனதும் அவளைப் பிறந்த வீடு போகச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் போக மறுத்துட்டா.... அப்புறம் உங்களுக்கு ஜோதியைப் பிடிச்சிருக்கா?

"முதல்ல அவங்க சொல்லட்டும்!"

"அப்பா...நான் கொஞ்சம் அவர்கிட்ட தனியா பேசணும்."

"சரிம்மா.... உன் அறைக்கு கூட்டிட்டு போ."

அறையினுள் மகேஷை அமரச் சொன்னாள் ஜோதி.

"நான் நேரடியாவே பேச விரும்பறேன். உங்க மனைவியின் பெற்றோரை நீங்க கூடவே வெச்சு ஒரு மகனாக சேவை செய்வதைப் பற்றி உங்க மாமனாரே பெருமையா சொன்னதா அப்பா சொன்னார். விலை மதிக்க முடியாதது இந்த உலகத்தில தன்னலமில்லாத அன்பு மட்டும்தான். எந்த ஒட்டும், உறவும் இல்லாத மனிதர்களைப் பாலமா இருந்து இணைப்பது அன்புதான். பணத்தை மட்டுமே மதிக்கிற இந்த உலகத்தில மனித மனத்தை மதிக்கிற நீங்க, என்னுடைய இந்த இரண்டு வேண்டுகோளுக்கு சம்மதிப்பீங்கனு நினைக்கிறேன்.."

"என்ன? கைகேயி மாதிரி இரண்டு வரம் கேட்கப் போறீங்களா?" சிரித்தான் மகேஷ்.

"கைகேயி தசரதர்கிட்ட அவர் மகனைப் பிரியச் சொல்லி வரம் கேட்டா! ஆனா நான் என் மாமனார், மாமியாரைப் பிரியாம இருக்க விரும்பறேன். அவங்களும் நம்ம கூட இருக்க நீங்களும், உங்க மாமனார், மாமியாரும் சம்மதிக்கணும்.

"அடுத்து நமக்குன்னு சொந்தமா ஒரு குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேன்."

"முதல் வேண்டுகோளுக்கு ஓகே! ஆனா இரண்டாவது...... புரியலையே?!"

"நம்ம இரண்டு பேருக்குமே பிரிவின் துக்கம் தெரியும். அதுபோல பெற்றோரை இழந்து அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தையை எடுத்து வளர்த்தாலென்ன? நம் சொந்த ரத்தத்திடம் அன்பு காட்டுவது இயல்பு; சுயநலமும் கூட. அதையே நமக்கு சம்பந்தமில்லாதவங்ககிட்ட காட்டும்போது அந்த அன்பு எல்லை கடந்து விரிகிறது.

"அதனால்தான் நமக்கு சம்பந்தமில்லாதவர்களை சொந்தமாக்கிக் கொண்டு அவர்களை என் அன்புச் சங்கிலியால் கட்ட விரும்புகிறேன். இதற்கும் நீங்கள் சம்மதித்தால், எனக்கு இந்தத் திருமணம் சம்மதம்."

அப்படியே விழிகள் வியப்பால் விரிய பேச்சற்று நின்று விட்டான் மகேஷ்!

 தன்னையே உற்றுப் பார்த்த மகேஷைக் கண்டு வெட்கத்துடன் தலை குனிந்தாள் ஜோதி!

"க்ரேட்! ரொம்ப க்ரேட்டுங்க நீங்க! அனாதையா பிறந்து வளர்ந்த எனக்கே இந்த எண்ணம் வந்ததில்ல. உங்களை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு இதில பரிபூரண சம்மதம். அதோட இன்னொரு பெற்றோர் எனக்கு இலவசமாக கிடைக்கும்போது..... ரொம்ப சந்தோஷமா இருக்குங்க!"

"அப்பறம்.... உங்களுக்கு என்னிடம் ஏதாவது கேக்கணும்னா கேளுங்க."

"என்னைத் திருமணம் செய்துகிட்டு உங்க விருப்பங்களை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா?"

அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு, கெஞ்சுவது போல மகேஷ் கேட்க ஜோதி 'களுக்'கென்று சிரித்து விட்டாள்.

"அய்யோ, போதும் உங்க விளையாட்டு. வெளிய நம்ம அம்மா, அப்பா காத்திருப்பாங்க! வாங்க, போகலாம்!"

வெகுநாட்களுக்குப் பின் சந்தோஷமாக, சிரித்த முகத்தோடு மகேஷுடன் இணைந்து வெளியில் வந்த ஜோதியைப் பார்த்த கமலிக்கும், வெங்கடாசலத்திற்கும் மனதிலிருந்த ஒரு பெரிய பாரம் இறங்கியதைப் போல் நிம்மதியாக இருந்தது.

"என்ன மகேஷ்! ஜோதி என்ன சொன்னா? எங்களையும் உங்க கூட வெச்சிக்க அனுமதி கேட்டிருப்பாளே? அதெல்லாம் சரிவராதப்பா."

"அதிலென்ன தப்பு அங்கிள்! இனி உங்களுக்கும், அம்மாவுக்கும் நல்லா பொழுது போகும். பேச்சுத் துணைக்குதான் என் மாமனார், மாமியார் இருக்காங்களே? நாம எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கலாம். இனி நான் உங்கள் மகன்!"

மகேஷ் குனிந்து இருவரின் கால்களைத் தொட்டு வணங்கினான்.

சேகரின் நினைவு வெங்கடாசலத்தின் கண்களை நிறைத்தது. ஆதரவாக அவரது கையைப் பிடித்தான் மகேஷ்!

"இனிமே நீங்க எதுக்கும் வருத்தப்படக் கூடாதுப்பா. கல்யாணத்துக்கு ஒரு நல்ல நாளாப் பாருங்க!"

வெட்கத்துடன் ஓரக் கண்ணால் ஜோதியைப் பார்த்துக் கொண்டே மகேஷ் சொல்ல, அந்த அறை சந்தோஷ சிரிப்பலையால் நிறைந்தது!
#ஆலயதரிசனம்

மங்களகிரி ஶ்ரீபானகல நரசிம்மர்

தனக்குப் பிறந்த மகனைப் பார்த்து மனம் கலங்கி நின்றான், அரசன் பரியாத்ரா.உடலின் அத்தனை பாகங்களும் அளவுக்கு அதிகமான வளர்ச்சியும்,அவலட்சணமும் கொண்டு பிறந்திருந்தான் மகன் ஹ்ருச்வச்ருங்கி. வளர்ந்ததும், தன் உடல் நிலை கண்டு வருந்திய அரசகுமாரன், பல திருத்
தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து, தன் குறைகளை நீக்கிக் கொள்ள எண்ணி,யாத்திரை கிளம்பினான்.
பல்வேறு ஆலயங்களைத் தரிசித்து இறுதியாக,மங்களகிரி எனும் புனிதமான தலத்திற்குச் சென்று மனதை ஒருமுகப்படுத்தி கடுந்தவம் புரிந்தான். உடல் அழகைப் பெற்றான். எனினும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க விரும்பாத ஹ்ருச்வச்ருங்கி, தன் தவப்பயனாக தன்னை ஒரு யானையாகவும் பின் பெரிய மலையாகவும் மாற்றிக் கொண்டான். அம்மலையே கிழக்குத் தொடர்ச்சி மலையில், 'பானகநரசிம்ம
சுவாமி'ஆலயம் அமைந்துள்ள மங்களகிரி.

இவ்வாலயத்தை தரிசித்தாலே நம் பாவங்கள் தவிடுபொடியாகும் என்கிறது தலபுராணம்.
தோடாத்ரி எனப்போற்றப்படும் மிகப் புனிதமான இத்தலம் மகாவிஷ்ணு தானே சுயம்புவாகத் தோன்றிய எட்டு ஷேத்திரங்களுள் ஒன்று.மற்றவை ஶ்ரீரங்கம், ஶ்ரீமுஷ்ணம், நைமி
சாரண்யம்,புஷ்கரம்,சாலகிராமம், வெங்கடாத்ரி, நாராயணாஸ்ரமம்.


கிருத யுகத்தில் தம் சுதர்சனத்தால் நமுசி என்ற அரக்கனை வதம் செய்த நரசிம்ம சுவாமி இங்கு சுதர்சன நரசிம்மராக் காட்சியளிக்கிறார்.
கீழிருந்து 360 படிகள் ஏறிச் சென்றால், யானை போன்று அமைந்த இம்மலையில்,யானையின் வாய்ப்பகுதி போன்று தோற்ற
மளிக்கும் இடத்தில் பானக நரசிம்மர் ஆலயம் துவஜஸ்தம்பத்துடன் காட்சி தருகிறது.
உள்ளே அமைந்துள்ள  சிறு சன்னதியில் தானே சுயம்புவாக 15செ.மீ. அளவில் பெரிதாகத்
திறந்தபடி, நரசிம்மரின் வாய்
மட்டுமே உள்ளது.அதனைச் சுற்றிலும் நரசிம்மரின் முகம் போன்று வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்ட  இவருக்கு நைவேத்தியம் பானகம் மட்டுமே. பக்தர்களால் காணிக்கையாகத் தரப்படும் பானகம், ஒரு சங்கினால் நரசிம்மரின் வாயினுள் ஊற்றப்படுகிறது. சுவாமி பானத்தைக் குடிப்பது போன்று தொண்டையிலிருந்து'களக், களக்'
என்ற சத்தம் ஏற்பட்டு, சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்து நின்றுவிடுகிறது. மீதியுள்ள பானகம் வெளியே வழிய ஆரம்பித்துவிட. அது பிரசாதமாக வழங்கப்படுகிறது. நாம் எவ்வளவு பானகம் நிவேதிக்கிறமோ. அதில் சரிபாதி மட்டுமே சுவாமியால் அருந்தப்படுவது ஓர் அதிசயம்.இதைக் காணும்போதே மெய்சிலிர்க்கிறது. இத்தனை பானகம் கீழே சிந்தினாலும் ஒரு எறும்பு கூட காணப்படாதது அதிசயம்!


அங்கிருந்து 50 படிகள் ஏறிச் சென்றால் மேலே சிறு சன்னதியில் மகாலட்சுமி சுயம்பு வடிவாகக் காட்சி தருகிறாள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவளாம் இவ்வன்னை!அருகிலுள்ள  உண்டவல்லி குகைப்பாதை கிருஷ்ணா நதிக்கரைக்கு செல்வதாகக் கூறப்படுகிறது.
மேலும் சில படிகள் ஏறிச் சென்றால் மலையில் அமைந்துள்ளக்ஷீர
விருட்சம் (பால்மரம்),நாரதரின் வடிவமாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தை தரிசித்து பக்தியோடு வழிபடும் பெண்களுக்கு,
பிள்ளைப்பேறு ஏற்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.


ஒவ்வொரு யுகத்திலும் இதேபோன்று நடந்துள்ளதாக தலபுராணம் மூலம் தெரியவருகிறது. கிருதயுகத்தில் அஞ்சனாத்ரி என்ற பெயரில் தேனும், துவாபரயுகத்தில் மங்களாத்ரி என்ற பெயரில் பாலும்,திரேதாயுகத்தில்
தோடாத்ரி, முக்தாத்ரி என்ற பெயரில் நெய்யும்  இதேபோல் நிவேதிக்கப்
பட்டதாம். கலியுகத்தில் மங்களகிரி என்ற பெயரில்  பானகம் நிவேதிக்கப்படுகிறது.


கிருதயுகத்தில் பாற்கடலிலிருந்து தோன்றிய மகாலட்சுமியை திருமால் மணந்துகொள்ள விரும்பியபோது,
தேவர்கள் இத்தலத்தில் ஒரு புஷ்கரணியை உண்டாக்கினார்கள். உலகின் புனிதமான நதிகளின் நீரை அதில் நிரப்ப, அதில் மகாலட்சுமி நீராடி, வைகுண்டம் சென்று,
திருமாலைக் கரம் பிடித்தாளாம். அந்தக் குளம் இன்றும் 'லட்சுமி புஷ்கரணி'என்ற பெயரில் அதில் நீராடும் பக்தர்களின் பாவங்களைக் களைகிறது.
திரேதாயுகத்தில் ஸ்ரீராமர் முக்தி
யடைய விரும்பியபோது, இத்தலம் வந்து தொழுத பின்பே வைகுண்டம் சென்றாராம். அதனால் இத்தலம் தோடாத்ரி, முக்தயாத்ரி என அழைக்கப்பட்டதாம். அச்சமயம் ஆஞ்சநேயர் தானும் ஸ்ரீராமருடன் வைகுண்டம் வர அனுமதி வேண்ட,
ராமர் ஹனுமானை கலியுகம் முடியும் வரை இத்தலத்தில் இருந்து உலகை ரட்சிக்கும்படிஆணையிட்டதால்,
இத்தலத்தின் காவல் தெய்வமாக  ஆஞ்சநேயர் அருள் செய்து கொண்டிருக்கிறார்.


துவாபர யுகத்தில் பஞ்ச
பாண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியுள்ளார்கள். மங்களாத்ரி என வழங்கப்பட்ட இம்மலையில் இருந்து சில மைல்கள் தூரத்திலேயே இந்திரகீல பர்வதம் என்ற மலையுள்ளது. அங்குதான் அர்ச்சுனன், சிவனை நோக்கி தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றதாகக்
கூறுகிறது புராணம்.


மலையடிவாரத்தில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இடது மடியில் லட்சுமியைத் தாங்கியபடி பொற்கவசத்தில் அற்புதக் காட்சி தருகிறார், பிரகலாதவரதர். ஆலயத்துள் மகாலட்சுமி, சீதா-ராம லட்சுமணருக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.தங்ககருடவாகனமும்,
வெள்ளி ஹனுமந்த வாகனமும் கண்கவர் அழகுடன் காட்சி தருகின்றன.
கிழக்கு திசையிலுள்ள பிரதான கோபுரம் காலி கோபுரம் எனப்படுகிறது. வித்யாசமாக உயர்ந்து தோற்றமளிக்கும் இக்கோபுரம்  தென் இந்தியா
விலேயே மிக உயரமான  கோபுரமாகும். 153 அடிஉயரமும்,
49 அடி அகலமும் கொண்டு,11 நிலைகளுடன் உயர்ந்து கிழக்கு மேற்காக அமைந்துள்ள இவ்வாலய கோபுரத்தின் அமைப்பும்,கட்டடக் கலையும் நம்மை வியக்க வைக்கின்றன.


இவ்வாலயத்திலுள்ள தக்ஷஜமாவர்த்த சங்கு,பகவான் கிருஷ்ணர் உபயோகித்தது எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்றும் அந்த சங்கு வெளியில் எடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப் படுமாம். அன்று மட்டுமே பக்தர்கள் அச்சங்கை தரிசிக்க முடியும்.


பல்குன மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்) பதினொரு நாட்கள் பிரம்மோத்ஸவம் கொண்டாடப் படுகிறது. இதனை முதலில் நடத்தியவர் யுதிஷ்டிரரே! கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன், தன் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாட்கள் கொண்டாட ஆசைப்பட,கிருஷ்ணர் அந்தப் பொறுப்பை தர்மரிடம் ஒப்படைத்தாராம். பிரத்யும்னனின் பிறந்த நாள், பல்குன சுத்த சப்தமி. அதற்கு முதல் நாள் சஷ்டியில் ஆரம்பித்து பிரம்மோத்ஸவத்தை
11 நாட்கள் கொண்டாடினார் தர்மர். அதுவே இன்றுவரை தொடர்கிறதாம். இது தவிர ஸ்ரீராம நவமி, ஹனுமத் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
யுகயுகமாய் மக்களின் பாவங்களைப் போக்கி,முக்திக்கு வழிகாட்டும் பானகல நரசிம்ம சுவாமியின் ஆலயத்திற்கு ஒருமுறை சென்று தரிசித்தால், நாமும் பிறவிப் பயனைப் பெறலாம்;பிறவாப் பேறும் அடையலாம்.


மங்களகிரி ஆலயம் ஆந்திராவில் விஜயவாடாவிலிருந்து 17 கி.மீ.
தூரத்தில் உள்ளது.
#ராதாபாலு