Sunday 12 May 2019

அன்னையர்தினஸ்பெஷல்


அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்!

அன்புள்ள அம்மா...

அம்மா என்றதும் நமக்குள் ஊற்றெடுத்துப் பிரவாகமாக ஏற்படும் உணர்வு....அது வேறு எந்த உறவுக்கும் ஏற்படாது.

ஐயிரண்டு மாதங்கள் சுமந்து, தன்  உதிரத்தால் பாலூட்டி, நம் தேவைகளை அவ்வப்போது அறிந்து அதற்கேற்ப அவற்றை நிறைவேற்றி நமக்காகவே வாழ்நாள் முழுதும் வாழ்ந்து முடிக்கும் நம் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள் அன்னையர் தினம்.

நம் கூடவே இருக்கும்போது தெரியாத அம்மாவின் அருமையை அவள் மறைந்த பின்பே உணர முடிகிறது என்பது கசப்பான உண்மை.

நம்மை தாலாட்டி, சீராட்டி, நல்லவைகளை சொல்லி வளர்த்து நம்மை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, நாம் உயர்ந்தால் தான் மகிழ்ந்து, நம் கண்ணீரை தன்  ஆதரவான வார்த்தைகளால் ஆறுதல்சொல்லித் துடைத்து...😞

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டு மறைந்த என் அம்மாவின் ஞாபகம் என்னை அம்மாவுடன் வாழ்ந்த அந்த நாட்களுக்கே அழைத்துச் செல்கிறது.

சின்னப் பெண்ணாய் இருந்தபோது, கனிவும், கண்டிப்புமாய் என்னை அரவணைத்து வழி காட்டியவள். நல்லன சொல்லி அல்லனவற்றை நீக்கியவள்.

பலமுறை அம்மாவின் கண்டிப்பு கோபத்தை ஏற்படுத்தினாலும் நான் தாயானபோது அதன் அவசியத்தை உணர்ந்தேன்!

என்னை நேரில் பாராட்டாமல், அடுத்தவர்களிடம் என்னைப் பற்றி பெருமையாகப் பேசிய அம்மாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்!

வேறு யாரிடமும் சொல்ல முடியாத தன் மன ஆதங்கங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டபோது ஆறுதல் சொல்லியிருக்கிறேன்!

தன் சந்தோஷங்களை உடனுக்குடன் குழந்தையைப்போல் சிரித்துக் கொண்டே சொல்லி மகிழ்ந்த சமயம் நானும் இணைந்து மகிழ்ந்தி
-ருக்கிறேன்.

என் திருமணத்தன்று என்னைப் பிரியும் சமயம் கலங்கி அழுத அம்மாவைப் பார்த்து என் மன வருத்தத்தை வெளிக் காட்டாமல் சென்றாலும், பலநாட்கள் அவளை நினைத்து அழுதிருக்கிறேன்.

என் குழந்தைகளின் உயர்வில் என் அம்மா அடைந்த மகிழ்ச்சியில் நான் ஆனந்தப் பட்டிருக்கிறேன்!

2005 ம் ஆண்டு  எட்டாம் தேதி அன்னையர் தினத்துக்கு அம்மாவிடம் தொலைபேசியில் பேசி வணங்கியபோது அம்மா சற்று உற்சாகம்  இல்லாதது போல தெரிந்தாலும், அடுத்த எட்டே நாட்களில் அம்மா என்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணியும் பார்க்கவில்லை.

என் அம்மாவின் 68ம் வயதில்..2000ல் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. பல டாக்டர்களையும் சோதனைகளையும் செய்தபின் என் அம்மாவின் இருதய வால்வில் கசிவு ஏற்பட்டு அது ஃபங்கஸாகி பரவியிருப்பதாக தெரிந்தது.

அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்ட தஞ்சை டாக்டர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் செய்யும்படி கூறினார். அவர்கள் பல சோதனைகளைச் செய்தபின் bypass surgery செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

என் அம்மாவுக்கு ஊசி போட்டுக் கொள்ளவே பயம். இதில் ஆப்பரேஷன் என்றதும்...வேண்டாம். எனக்கு தேவையில்லை...என்று சொல்லிவிட்டார்.

பின் மருந்து மாத்திரை ஊசி என்று சாப்பிட்டதில் சிறிது முன்னேற்றம் இருந்தது. 2004ல் மும்பையில் நடந்த என் மகள் திருமணத்திற்கு டாக்டர் ...ஃப்ளைட்,ரயிலில் ஜெர்க் இருக்கும்.போக வேண்டாம்... என்று சொல்லியும்..என் முதல் பேத்தி திருமணம். எனக்கு என்ன ஆனாலும் சரி. நான் போகவேண்டும்...என்று டாக்டரிடமே சொல்லிவிட்டு வந்தார்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் கடைசியில் நடந்த என்மகன் நிச்சய
தார்த்தத்திற்கு வந்தவர்...பேரன் கல்யாணமும் பார்த்து விட்டால் எனக்கு மிகவும் சந்தோஷம்...என்றார்.

ஆனால் மே15 திடீரென்று உடல்நிலை மோசமாகி, என் தம்பியும் அவன் மனைவியும் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ய முடிவு செய்து, அழைத்துச் சென்றபோது அங்கு தங்கவேண்டி வருமென்று ஒரு செட் புடவை, சீப்பு, கண்ணாடி, குங்குமம்,விபூதி, சத்யசாயிபாபா படம் அத்தனையும் எடுத்துச் சென்றாராம்.

அவ்வளவு நம்பிக்கையுடன் சென்றவர்...ஆஸ்பத்திரியில் வீல்சேரில் போகும்போதே தலை சாய்ந்துவிட..உடன் எமர்ஜென்ஸி வார்டில் அட்மிட் செய்து எத்தனையோ முயற்சித்தும் இறந்து விட்டார்.அம்மாவை எப்போதும் பிரிந்திராத என் அப்பா இச்செய்தி கேட்டு அதிர்ச்சியாகி விட்டாராம்.

என் அம்மா காலமான செய்தியைக் கேட்டபோது உள்ளத்தில் ஒரு வெறுமை சூழ்ந்த உணர்வு ஏற்பட்டது. மனதின் துக்கத்தையும் என்னால் அடக்க முடியவில்லை. மும்பையிலிருந்து சென்னை வருவதற்குள் ஒரு யுகம் போலிருந்தது. அம்மாவை கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்தபோது உள்ளம் உடைந்து நொறுங்கி அழுதுவிட்டேன்.

மறுநாள் காரியங்கள் செய்ய அம்மாவை வெளியில் எடுத்தபோது அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறிவிட்டேன்.

இனி அம்மாவிடம் ஏதும் பேச முடியாது, எதையும் சொல்ல முடியாது, நமக்கு ஆறுதல் சொல்லவும், அன்பாய் தலை கோதவும் இனி அம்மா இல்லை என்பதை நினைக்கும்போது 'இதுதான் யதார்த்தம்' என்று மனம் சொன்னாலும் கண்கள் அழுவதை நிறுத்த முடியவில்லை.

ஒவ்வொருமுறை நான் அம்மாவைப் பார்க்க வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போதும் என்னைக் கட்டியணைத்து கண்கலங்கி வழியனுப்பும் அம்மாவை இனி காண்பது எங்கே..எப்போ😩😰

அம்மா என்ற உறவுக்கு அழிவு ஏது? அன்றும், இன்றும், என்றும் இறுதிவரை அம்மாவின் அன்பும், அரவணைப்பும்,பாசமும் மறக்க முடியாது.எத்தனை உறவுகள் சுற்றிலும் இருந்தாலும் அம்மா என்ற வார்த்தைக்கு இணை ஏது?

அன்னையே உனக்கு நமஸ்காரம்🙏

Wednesday 8 May 2019

அண்ணலும்நோக்கினான்_அவளும்நோக்கினாள்


'கண்ணும் கண்ணும் பேசிய அந்தநாள் ஞாபகம் கண்ணில் தெரியுதே!'
பெண்பார்த்த அனுபவம்
சுவையான சுகமான அனுபவமாச்சே!என் கணவர் என்னைப் பெண் பார்க்க வந்தபோது என் வயது18.நாங்கள் இருந்தது முசிறியில். 'எனக்கு அதுக்குள்ள கல்யாணம் வேண்டாம்'என்றாலும் காது கொடுத்துக் கேட்பாரில்லை🤨
அன்று பொங்கல். நானும் என் தம்பிகளும் வாசலில் கரும்பு தின்று கொண்டிருந்தோம்.வாசலோடு போய்க் கொண்டிருந்த ஒருவர்..70 வயதிருக்கும்... நாங்கள் இருந்த வீடு தன் உறவினருடையது என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தார். என் அப்பாவிடம் எங்கள் குடும்ப விபரங்களைக் கேட்டார். தான் குடந்தையை அடுத்த உமையாள்புரம் என்றார்.
என் அம்மா அவரை நமஸ்காரம் செய்யச் சொல்ல (அந்நாட்களில் பெரியவர்கள் வந்தால் நமஸ்கரிக்க சொல்வது வழக்கம்)..பொண்ணுக்கு என்ன வயசு?வரன் பார்க்கறேளா..
என்றார். என் அப்பாவும்..இப்ப 18 வயசு. பார்த்துண்டிருக்கேன்.
நல்ல வரன் கிடைத்தால் முடித்து விடலாம்...என்றார்.
...எனக்கு உமையாள்புரம்.எனக்கு தெரிந்த நல்ல பையன் இருக்கான். ஜாதகம் தரேன். உமையாள்புரம் கடம் விசுவநாத அய்யரின்
அண்ணா பேரன். திருச்சி பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை.நல்ல பையன்...என்று கையிலிருந்த ஜாதகமும் கொடுத்து விட்டு என் ஜாதகமும் வாங்கிச் சென்றார்.
போகும்போது ...எனக்கு பல் இருக்கு. முறுக்கு கூட சாப்பிடுவேன். நாலு துண்டு கரும்பு கொடு...என்று என் தம்பிகளிடம் வாங்கி சாப்பிட்டார்!
என் அம்மாவுக்கு வங்கிப் பணியாளர் என்றதும் ஒரே சந்தோஷம்.இந்த இடம் முடிய வேண்டும் என்று கடவுளை வேண்ட ஆரம்பித்து விட்டார்!
என்அம்மா வழித் தாத்தாதான் எங்கள் குடும்பத்தில் ஜாதகப் பொருத்தம் பார்த்து சொல்பவர்....ஜாதகம் நல்ல பொருத்தம். ப்ரொசீட் பண்ணு...
என்று பதில் எழுதிவிட்டார்!
அவர்களும் ஜாதகம் பொருந்தியிருப்பதால் பெண் பார்க்க வருவதாக எழுதிவிட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை.
17வயதிலிருந்தே ஜாதகம் பார்க்க ஆரம்பித்தாலும் இதுவரை பெண்பார்க்கும் வரை வந்ததில்லை.ஜாலியா வேளாவேளைக்கு சாப்பிட்டு தூங்கி தம்பிகளோடு என்ஜாய் பண்றதை விட்டு வேறு வீட்டுக்கு போய்..அவர்கள் எப்படியோ என்னவோ... சமைத்து வீட்டு வேலைகளை செய்து கொண்டு...நினைக்கவே பயமாக இருந்தது.
சரி..பையனைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட தீர்மானித்தேன்! எங்கள் வீட்டில் என் சித்தப்பாவும், மாமாவும் வந்திருந்தார்கள்.என் அம்மா, அப்பா குடும்பத்தில் இதுதான் முதல் பெண்பார்க்கும் நிகழ்ச்சி என்பதால் என் சித்தப்பாவும், மாமாவும் முதல்நாளே வந்துவிட்டார்கள்.
என் அம்மா பஜ்ஜி ஸொஜ்ஜி வேண்டாமென்று மைசூர்
-பாகும்..தயிர்வடையும் செய்திருந்தார்.
மதியம் மாப்பிள்ளையுடன் அவர் அம்மா, அக்கா, தாத்தா திருச்சியிலிருந்து வருவதாக ஏற்பாடு.என் மாமனார் என் கணவர் பிறந்த சில மாதங்களிலேயே மறைந்து விட்டதால் என் மாமியாரின் அப்பாதான் இவரை வளர்த்தார். இந்தத் தாத்தாதான் ஜாதகம் கொடுத்த கரும்புத்
தாத்தாவின் நண்பர்!
நான் பட்டுப் புடவை கட்ட விரும்பாததால் ஸிம்பிளாக நைலக்ஸ் புடவைதான் கட்டியிருந்தேன்.எந்த ஸ்பெஷல் மேக்கப்பும் கிடையாது.(அப்படியாவது வேண்டாமென்று சொல்லிவிடுவார்களா என்ற எண்ணம்!!)
நாங்கள் முசிறி அக்ரஹாரத்தில் குடியிருந்தோம்.என் மாமா,
சித்தப்பா,தம்பிகள் அருகிலிருந்த பஸ்ஸ்டாப்பிற்கு சென்று என் கணவர் குடும்பத்தாரை அழைத்து வந்தனர்.
வந்ததும் அவரவர் ஊர் பற்றிய விசாரிப்புகள்..குடும்ப விசாரணைகள்!
அடுத்து பெண் பார்க்கும் நிகழ்ச்சி.ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நமஸ்காரம்! அதன்பின்  டிஃபன்,காபி சாப்பிட்டபின் பெண் பார்க்கும் நிகழ்ச்சி..அட..அன்றைய கதாநாயகியாகிய என்னைப் பார்க்க அவர்களுக்கு என்னவொரு ஆவல்!
...எங்காத்து பிள்ளைக்கு பாட்டு ரொம்பப் பிடிக்கும்.பாடத் தெரிஞ்ச பெண்தான் வேண்டும் என்றதால்
தான் உங்கள் பெண்ணை பார்க்க வந்தோம்...என்றார் என் மாமியார்!
முதலில்  'வாதாபி  கணபதிம்' பாடினேன்.இன்னொரு பாட்டு பாடச்சொல்லி தாத்தா கேட்க..'மாமவ பட்டாபி'.
முதலிலேயே என் மாமா 'பையனை நன்னா பாத்துக்கோ' என்று சொல்ல..நானும் நன்றாக அடிக்கடி பார்த்தேன்! என்னைவிட கலராக,
தலையில் நிறைய முடியுடன்
(இப்போ தேடிக் கொண்டி
ருக்கிறேன்!) நல்லவராக இருப்பார் எனத் தோன்றியது! அவரோ பாட்டை ரசிக்கும் சாக்கில் பாவையையும் ரசித்தார்!அப்பாடா..நம்ம வேலை
முடிந்தது என்று உள்ளே சென்றுவிட்டேன்!
தாத்தா தவிர மூவர் கூட்டணி கொல்லைப்புறம் சென்று குசுகுசுவென்று பேசிவிட்டு வந்தார்கள்! பெண் பிடித்து விட்டது என்று சொல்ல கௌரவக் குறைவு! ஆனால் லௌகீகம் பேச ஆரம்பித்து விட்டார்கள்!
என் மாமியார்,நாத்தனார் என் அம்மாவிடம் பேச..தாத்தா வீட்டை சுற்றிப் பார்க்க..பாவப்பட்ட அன்றைய ஹீரோ பேச ஆளின்றி உட்கார்ந்திருந்தார்! என் மாமா பக்கத்து அறையில் மூடியிருந்த சன்னல் கதவை லேசாகத் திறந்து என்னை மாப்பிள்ளையைப் பார்த்துக் கொள் என்றார்.
நான் பார்க்கும்போது..அவரும் என்னைப் பார்க்க..சரியான ஆள்தான்..ஏதாவது இடுக்கு வழியா நான் பார்ப்பேன்னு யோசிச்சு அவரும் பார்க்க..அண்ணலும் நோக்கினார்..இவளும் நோக்
கினேன்!(எப்படியோ..தலைப்பை பிடிச்சாச்சு!)
பெரியவர்கள் எல்லா விஷயமும் பேசி முடித்து..அப்பவே தெரிந்து விட்டது..இவர்களுக்கு பெண் ஓ.கே. என்று! ஆனாலும் ..என் தம்பி கொஞ்சம் யோசிச்சு
சொல்றேங்கறான்...என என் நாத்தனார் பந்தா விட..(இன்னமும் அந்த பந்தாகுறையவில்லை!
தாத்தா என் அம்மாவிடம
...தயிர்வடை நன்னாருக்கு.
இன்னொண்ணு கொடுங்கோ..
என்று வாங்கி சாப்பிட...என் மாமியார்,நாத்தனார் முகம் கடுகடு! (வீட்டுக்கு வந்து தாத்தா அவர்களிடம் டோஸ் வாங்கியதை பிறகு சொன்னார் என் கணவர்!)
..பொண்ணைக் கூப்பிடுங்கோ.என் தம்பி நன்னா பாத்துக்கட்டும்...என்று என் நாத்தனார் சொல்ல..மறுபடி நமஸ்காரம். என் மாமா...நீங்க என் மருமாளோட பேசறேளா?..
அவர் தன் அம்மா,அக்காவை ஆவலுடன் நோக்க அவர்களோ...அதெல்லாம் எதுக்கு? அப்றம்தான் ஆயுள் பூரா பேசப்போறாளே...(நான் அவரை பேசி மயக்கிடுவேன்னு பயமோ!) எனறு சாமர்த்தியமாக கட் சொல்ல..
நம்மாளு முகம்...பாவம்..காற்று போன பலூனாகி விட்டது!
பஸ் ஏற்றிவிட அவர்களோடு போன மாமா...என் மருமாளைப் பிடிச்சிருக்கோன?...என்று ரகசியமாக இவரைக் கேட்க..ஆம் என்று சொன்னதை வீட்டுக்கு வந்து சொன்ன மாமாவுக்கு  ஒரே சந்தோஷம்!
...ஏன் மாமா..அவரைக் கேட்டேளே..என்னைக் கேக்கலியே...என்றேன் கோபமாக!
...நாங்க உனக்கு நல்லதுதான் பண்ணுவோம். பேங்க்ல வேலை. (அப்பல்லாம் பேங்க் வேலைக்கு மவுசு ஜாஸ்தியாச்சே!) ஆஃபீஸர் ப்ரமோஷன் ஆறு மாசத்துல கிடைச்சுடுமாம்...என்று என் அம்மாவும் அப்பாவும் சொல்ல...
...ஜெய்சங்கர், சிவகுமார்
மாதிரிலாம் பையன் இருக்கணும்னு நினைக்காதே. அவரும் நல்ல உயரம்.கிருதா பெல்பாட்டம்னு ஃபேஷனா இருக்கார்.ரொம்ப மரியாதையா பேசறார். வேற என்ன வேணும் உனக்கு?அவருக்கும் உன்னை பிடிச்சிருக்கு....என்றார் என் மாமா
..எனக்கு கல்யாணமே வேண்டாங்கறேன்..என்றேன்.
...பையன் நன்னா இருக்கான். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்...என்று என் சித்தப்பா பின்பாட்டு பாட...
...என் தம்பிகளோ அத்திம்பேர் சூப்பர்...என்று ஸேம்ஸைட் கோல் போட🤩
...ஹ்ம்ம். இந்த வலை இல்லாட்டால்
வேறொரு வலையில் மாட்டிக் கொள்ளத்தானே வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் சம்மதித்தேன்!😉
திருமணம் நிச்சயமாகி பத்திரிகை அடித்ததும் முதல் பத்திரிகையை எனக்கு அனுப்பியிருந்தார் என்னவர்!😍
பெண் பார்த்தபின் அவரை மாப்பிள்ளை அழைப்பு அன்றுதான் பார்த்தேன். காரில் பெண்ணை ஏற்றிக் கொள்ளும்படி அவர் நண்பர்கள் சொல்ல, 82 வயதான எங்கள் இருவரின் தாத்தாக்களும்
...முறைப்படி காலை ஊஞ்சலுக்கு பின்பே இருவரும் இணைந்து உட்காரலாம்...என்றதால் இவருக்கு கொஞ்சம் வருத்தம்! பெரியோர் ஆசியுடன் திருமணம் முடிந்து திருச்சியில் வாழ்க்கை ஆரம்பம்.
கண்கள் நோக கண்களால் ஒருவரை ஒருவர் நோக்குவதையே நோக்கமாகக் கொண்டு கண்களால் பேசிக் கொள்வது எங்களுக்கு கை(கண்)வந்த கலை!!
பெண் பார்த்த அன்று அண்ணல் நோக்கிய அந்த சில நிமிடங்கள் கண்கள் கலந்தபோது காதல் திருக்கோலம் கொண்டு ஆசையில் மனம் தடுமாற தொப்பென்று சம்சார சாகரத்தில் விழுந்தவளை👩 இன்றுவரை கைதூக்கி நேசத்துடன் காதலித்து 'உன் கண்ணால்👁️ என்னை அன்றே கட்டிவிட்டாயடி..💘உன் சின்னப் புன்னகையால் என்னை விழ வைத்தாயடி..💞உன் அன்புக்கு நான் அடிமை'என்று மோகித்து இன்றுவரை  இறையருளால்🙏 இனிதான வாழ்க்கையே  எங்கள் சுகமான தாம்பத்யம்!💑