Monday 9 December 2019

10.பஞ்ச பத்ரி




பஞ்சபத்ரி
விஷால் பத்ரி
பத்ரி விஷால் பத்ரிநாதரின் பிரதான தலமான பத்ரிநாத். பூஜைகள் நடக்கும்போது, 'ஜெய் பத்ரி விஷால் கி'என்று பக்தர்கள் கோஷம் எழுப்புகிறார்கள்.

யோகபத்ரி
பத்ரிநாத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஜோஷி மட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு பத்ரிநாதர் ஆளுயர சாளக்ராம மூர்த்தியாக யோகநிலையில் காட்சி தருகிறார்.

பாண்டு மஹாராஜா குந்தியை மணந்து பாண்டவர்கள் பிறந்து  பாண்டுகேஷ்வரரைத் துதித்து தியானம் செய்ததால் இது 'யோகத்யான் பத்ரி' என்றும் அழைக்கப்படுகிறது. பாண்டு மஹாராஜா தன்னுடைய இறுதி காலத்தை இங்கே கழித்ததாகச் சொல்லப் படுகிறது.
பாண்டவர்களும்தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராச்சியத்தை பரீக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு
சுவர்க்காரோகணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து  துவங்கினர்.

பவிஷ்யபத்ரி 
இந்த ஊர், ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், 2744 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச் செல்ல வேண்டும். நரசிம்மர் தரிசனம் தருகிறார்.ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது ஜெய-விஜய (நரநாராயண)மலைகள் இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் பாதை அடைபட்டு விடும்.அப்போது இந்தபவிஷ்யபத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும் என்கிறார்கள்.

விருத்தபத்ரி
ஜோஷி மட்டிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், பிப்பல் கோட் போகும் பாதையில் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் முதலில் தரிசித்த தலம். நாரதருக்கு நாராயணர் முதியவராகக் காட்சி தந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. 

ஆதிபத்ரி
கர்ண பிரயாகையிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் ராணி கேத் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இங்கே குப்தர்கள் கால கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சங்கு, சக்கரம், தாமரை,கதை இவற்றுடன் தரிசனம் தருகிறார் நாராயணன்.

இவை எல்லாவற்றையும் தரிசனம் செய்வது சாத்தியமில்லை. நாட்கள் போதாது. மலைகளில் ஏறி இறங்கி செல்வதும் கடினம்.
நாங்கள் பத்ரிநாத் (விஷால்பத்ரி) மற்றும் யோகபத்ரி மட்டுமே தரிசித்தோம்.

யாத்திரைபற்றி
நாங்கள் சார்தாம் யாத்திரை செல்வது பற்றி யோசிக்கவே இல்லை. கேதாரில் ஹெலிகாப்டர் போகாவிட்டால் 14 மைல் நடக்கவேண்டும், குதிரையில் போக வேண்டும் என்றெல்லாம் பலரும் பயமுறுத்த கேதார் போவதெல்லாம் கஷ்டம் என்று விட்டுவிட்டோம்.

என் நாத்தனார் அவர் உறவினர்களுடன் போவதால் எங்களையும் கூப்பிட..போவதா வேண்டாமா என்ற குழப்பம். என் பிள்ளையிடம்  கேட்டதும்..நல்ல சான்ஸ். இப்ப விட்டா போகமுடியாது. கண்டிப்பா போய்ட்டு வாங்கோ..என்று பணத்தையும் கட்டிவிட்டான்.
அந்த கடவுளே இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்து தரிசனம் பண்ண கூப்பிட்ட மாதிரி நினைத்து மெய்சிலிர்த்தோம். நல்ல அற்புதமான தரிசனங்கள். மனதில் பதிந்ததை எழுத்திலும் பதிய வைக்கவே இந்த யாத்திரை அனுபவங்கள்.

*யாத்திரை செல்ல ஏற்ற மாதங்களாக செப்டம்பர் அக்டோபரே சிறந்தது. அட்சய திருதியை அன்று ஆலயங்கள் திறந்ததும் தரிசனங்கள் ஆரம்பித்து விடுமாம். மே ஜூனில் மலைகளிலிருக்கும் பனி உருகி வருவதால் பாதைகள் ஈரமாகி நடப்பது கடினம் என்கிறார்கள். ஜூலை ஆகஸ்ட் நல்ல மழை பெய்வதால் ஹெலிகாப்டர்கள் செல்வது கடினம்.நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

*நிறைய டிராவல்கள் இந்த யாத்திரைகளை அழைத்து செல்கிறார்கள். அவர்களே தங்குமிடம் ஏற்பாடு செய்து உணவும் அவ்வப்போது சூடாக சமைத்துப் போடுகிறார்கள்.அந்தக் குளிருக்கு இதமாக உள்ளது! சமைக்கும் வசதியுள்ள ஹோட்டல்கள், தர்மசாலைகளில் நமக்கும் தங்க ஏற்பாடு செய்கிறார்கள்.

*கேதார்நாத் பத்ரிநாத் யமுனோத்ரியில் அதிகபட்ச குளிர் இருப்பதால் தெர்மல், ஜெர்கின்கள்,கையுறைகள், கம்பளி ஸாக்ஸ்கள், தலை குல்லாக்கள்,  ஷீக்கள் அவசியம் தேவை.

*எல்லா இடங்களுக்கும் நிறைய உயரமான படிகள் ஏறி இறங்க வேண்டியிருப்பதால் சுவாச பிரச்னை முழங்கால்வலி இருப்பவர்களுக்கு கடினமே. அங்கு விற்கும் மூங்கில் கழிகளை வாங்கிக் கொண்டால் சற்று வேகமாக நடக்க உதவும்.

*எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அந்த இறைவனை தரிசித்ததும் 'நாம் செய்த புண்ணியம்' என்று மனம் பக்தியிலும் சந்தோஷத்திலும் மெய்சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது.

'மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்ற பெருமை நமக்குள்ளும் ஏற்படுகிறது. 'தேவபூமி' என்பதற்கேற்ப அந்த இயற்கை அழகும், பனி மூடிய மலைகளும், பெருகி ஓடும் நதிகளும், ஆன்மீக எண்ணங்களும்,மாசில்லாத சுற்றுச் சூழலும் அவ்விடத்திலேயே இருந்துவிட மாட்டோமா என்ற ஆசையைத் தூண்டுகிறது!

இதயம் கவர்ந்த இமயமே!
இயற்கை அழகில்
இமைக்க மறந்தேன்!
இன்பம் அடைந்தேன்!

உன்னில் நடந்தேன்!
உன்னை தீண்டினேன்!
உன்னை ரசித்தேன்!
உன்னில் மயங்கினேன்!

உன் உயரம் கண்டு வியந்தேன்!
என் துயரம் மறந்து மகிழ்ந்தேன்!
எத்தனை உயரம்..
எத்துணை ஆறுகள்..
அழகாய் இறங்கும் நீர்வீழ்ச்சிகள்..
ஆங்காங்கே ஆலயங்கள்..

என்னை மறந்து
உன்னில் கலந்தேன்!
ஈராறு நாட்கள் இணைந்திருந்தேன்!
இறைதரிசனங்களில்
இவ்வுலகம் மறந்தேன்!
இனி என்று காண்பேன்
இப்பிறவியில் உன்னை!

No comments:

Post a Comment