Saturday 6 July 2019

சபாஷ்மத்யமர்_படக்குறுங்கதைப்போட்டி... நம்பிக்கை


பத்மினி  தினமும் காலை பதினோரு மணிக்கு அவள் வீட்டுத் திண்ணையில் ஆஜராகிவிடுவாள். இரவுதான் உள்ளே செல்வாள். ஏன்? எதனால்?? யாருக்காக???
பத்மினிக்கும் பாஸ்கருக்கும் திருமணமாகி 40 வருடங்கள் ஆகிறது.  தஞ்சை மாவட்டத்திலுள்ள சிறிய கிராமத்தில் ஊராட்சித் தலைவராக இருந்த பாஸ்கரை மணம் புரிந்த
போது பத்மினியின் வயது 20.
பத்தாம் வகுப்புதான் படித்தாலும் ஓவியக்கலையில் நல்ல தேர்ச்சி பெற்றவள். பார்த்ததை அப்படியே வரையும் திறன் கொண்டவள்.
அவ்வூரில் ஒரு சிற்பக்கூடம் இருந்தது. அதிலிருந்த சிற்பி பாஸ்கரின் நண்பர்.பத்மினியின் ஓவிய ஆற்றலைக் கண்ட சிற்பி நண்பர் அவளது ஓவியங்களை சிலை வடிக்க ஆசைப் பட்டார். அவள் வரைந்த சில நடன
மாதுக்களின் ஓவியத்தைப் பார்த்து சிலைகளை வடித்தார். அவற்றை  பல ஆலயங்களுக்கும், பார்க்குகள், ஹோட்டல்களுக்கும் விற்பனை செய்தார்.
அதிலிருந்த ஒரு சிற்பம் அச்சு அசலாக பத்மினியைப் போலவே இருந்தது.


அதனை தாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஸ்கர் நினைத்தான். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடி விட்டது.
பத்மினி பாஸ்கர் தம்பதிக்கு சேகர், சுதாகர் என்று இரண்டு பிள்ளைகள். காமினி ஒரே பெண். பாசமான குழந்தைகள். 
பெரிய பையன் சேகர் catering technology படித்து சென்னையில் பெரிய ஹோட்டல் owner.  தற்போதைய swiggy, zomato என்று எல்லாவற்றுக்கும் online orderகள் அவன் ஹோட்டலில் இருந்துதான் செல்கின்றன.திருமணமாகி ஒரு பையன் முதல் வகுப்பு படிக்கிறான்.
(படம் எண்..1)

சின்னவன் சுதாகருக்கு +2  பாஸ் செய்வதே பெரும்பாடாகி  விட்டது. வேலையும் கிடைக்கவில்லை.  தஞ்சையில் ஒரு கேஸ் கம்பெனியில்  மேலாளராகப் பணியில் சேர்ந்தான்.
உழைப்புக்கு அஞ்சாதவன். கிடைத்ததை வைத்து திருப்தியுடன் வாழ்பவன். வீடுகளுக்கு சிலிண்டர் சப்ளை செய்ய ஆட்கள் உண்டு. பெரிய ஹோட்டல்களுக்கு தானே கொண்டு கொடுப்பான்.
பத்மினியும், பாஸ்கரும் எவ்வளவோ சொல்லியும், திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆன்மிக நாட்டம் கொண்டவன். சமூக சேவையில் அதிக ஈடுபாடு உள்ளவன்.  அவனுக்கு துணை ரூபி என்ற நாய் மட்டுமே. எங்கு சென்றாலும் அவனுடனேயே பாதுகாப்பு காவலன் போல கூடவே செல்லும்.


கோவையில் இருக்கும் பெண் காமினியின் கணவன் ஒரு பெரிய கம்பெனியில் நிர்வாகி. பணத்திற்கும், வசதிக்கும் குறைவில்லை. அவளுக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் பெண் இருக்கிறாள்.
காமினி பொழுது போகாமல் வீட்டில் இருக்க விரும்பாமல் சிறியதாக ஒரு சூப்பர் மார்க்கெட் துவங்கினாள். உதவிக்கு இரண்டு பெண்களுடன் அதைத் தானே நிர்வகித்ததில் நல்ல லாபம் வந்தது.




மூவரும் குடும்பத்துடன் 15 நாட்களுக்கு ஒருமுறை வார இறுதியில் கிராமத்திற்கு வந்து விடுவார்கள். சுதாகருடன் ரூபியும் வந்து விடும். விதவிதமான சமையல் சாப்பாடு, ரூபியுடன் விளையாட்டு என்று இரண்டு நாள் நிமிடமாகப் பறந்துவிடும். அவர்கள் திரும்பச் செல்லும்போது பாஸ்கரும் பத்மினியும் அடுத்து அவர்கள் வரும் நாளை எண்ண ஆரம்பித்து விடுவார்கள்!
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் அச்சமயம் நடந்த அந்த கோரசம்பவம் பத்மினியின் வாழ்வையே புரட்டிப் போட்டது.
அந்த வருடம் அடித்த  புயலால் அந்த கிராமம் மிக மோசமான பாதிப்பை அடைந்தது. விளை
நிலங்கள், கால்நடைகள் பலவும் அடித்துச் செல்லப் பட்டன. இரண்டு நாட்கள் புயலும், மழையும் கோரதாண்டவம் ஆடின.
ஊர்மக்கள் தம்மையும் தம் பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதில் இருக்க, பாஸ்கரோ அந்த நட்டநடு  இரவில் வீடிழந்து, பொருளிழந்து  தவிப்பவர்களைப் பாதுகாக்க கிளம்பினார்.
...என்னங்க.எனக்கு பயமாயிருக்கு. காலைல போங்களேன்...என்றதைக் கேட்காமல் சென்றவர் திரும்ப வரவேயில்லை. கவலையுடன் அவரது நண்பர்களிடம் கூற அவர்கள்  சென்று பார்த்தார்கள்.
இரவு இயற்கை செய்த கோரத்தை பகலில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள் ஊர் மக்கள்.  வெள்ளத்தில் போனது போக பலரின் உடல்களும் இறந்த ஆடு மாடுகளும் கண்டு மனம் பதைத்துப் போனார்கள்.
ஆற்றோரம் இருந்த சிற்பக் கூடம் சின்னாபின்னமாகி அந்த சிற்பியும் உயிரிழந்து விட்டார். பல மைல் தூரம்  தேடியும் பாஸ்கரின் உடல் கிடைக்காததால் இறந்ததாக கணக்கெடுத்துக் கொண்டார்கள். அதை நம்பாதவள் பத்மினி மட்டுமே.
தன் பெண் பிள்ளைகளுக்கு நிலைமையைச் சொல்லிக் கதறினாள் பத்மினி. மூவரும் உடன் வந்து ..அப்பா திரும்ப வந்து விடுவார்..என ஆறுதல் கூறி தம்முடன் வரும்படி அழைத்தனர்.
பத்மினியோ பிடிவாதமாக பிள்ளைகளுடன் செல்ல மறுத்து விட்டாள். அம்மா சற்று சமாதானபின் கூப்பிடலாம் என்றெண்ணி திரும்பச் சென்றுவிட்டனர்.
நாட்கள் ஓடின. இரண்டு மாதம் ஆகியிருக்கும்.  மொபைலில் அம்மாவுடன் பேசிய காமினி
..அம்மா நம்ம ஊர் சிற்பக்கூடத்து சிலை ஒன்று, உன்னை மாதிரியே இருப்பதாக அப்பா சொல்வாரே.அதை ஒரு ஹோட்டலில் அழகுக்காக வைத்திருக்கிறார்கள்...என்றாள்.
(படம் எண்..4)
சுவாரசியமின்றி அதைக் கேட்டுக் கொண்டவள்...அந்த சிற்பக்கூடத்தின் சிலைகளை யாரோ திருடிச் சென்று விட்டதாக கேள்விப்பட்டேன்...என்றாள்.
..நான் அடுத்த வாரம் வரப்போ என்கூட வந்துடும்மா. இனி அப்பா திரும்ப வரமாட்டார்னு தோணுது..என்றாள்.
..அப்பா என்கிட்ட எப்பவும் சொல்லுவார் 'நான் உன்னை விட்டு போகமாட்டேன்'னு. அவரைப் பாக்கறவரைக்கும் நான் நம்ப முடியாது. இனி என்னைக் கூடப்பிடாத. நீங்கள்ளாம் எப்பவும் போல வந்து இருந்துட்டு போங்க..
அப்பா இறக்கவில்லை. நிச்சயம் ஒருநாள் வருவார்..என்றாள்.
பத்மினிக்கு பாஸ்கரின் நினைவுகளை மறக்க முடியவில்லை. பாஸ்கர் அவளை செல்லமாக மினி என்றுதான் கூப்பிடுவான். நான்கு மாதங்களுக்கு முன்பு அவர்களின் திருமணநாளன்று பாஸ்கர் சொன்னது இன்னும் அவள் காதுகளிலேயே ஒலிக்கிறது.
..ஏய்..இந்த வயசிலயும் நீ ரொம்ப அழகா இருக்கடா...
...போறுமே! பேரன் பேத்தியல்லாம் எடுத்தாச்சே. இந்த வயசுல என்ன பேச்சு இது?..வெட்கத்தோடு சொன்னாள்.
..மினிம்மா! நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே போயிடணும். பின்னால யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. நான் உன்னை தனியா விட்டுப் போகவே மாட்டேன்..
...ஏங்க நல்லநாளும் அதுவுமா இப்படியல்லாம் பேசறீங்க. நான் மட்டும் நீங்க இல்லாம எப்படி இருப்பேன்..
பாஸ்கரின் நினைவுகளிலிருந்து விடுபட முடியாதவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தது.
விளையாட்டு போல் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பாஸ்கர் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று எதுவும் தெரியவில்லை. குழந்தைகள் தம்மோடு வரும்படி கூப்பிட்டு அலுத்து விட்டார்கள்.
ஆனால் கணவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில்...எப்பங்க வருவீங்க...என்று மனதில் கேட்டுக் கொண்டே  தினமும் வாசல் திண்ணைக்கு சென்று  கணவரின் வரவை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் பத்மினி!




No comments:

Post a Comment