Saturday 4 April 2020

என்வாழ்வின்பொன்னானதருணங்கள்


கடவுளால் அளிக்கப்பட்ட இவ்வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்  பொன்னானவைதான் என்பது என் எண்ணம்.

அன்பான பெற்றோர், அருமையான கணவர், அழகான குழந்தைகளை அடைந்த நேரம் பொன்னானதுதானே!

தமிழகத்தைத் தாண்டாத எனக்கு திருமணமாதும் வடக்கே வாழும் வாய்ப்பு. கணவருடன் கைகோர்த்து கண்மலர்ந்து தாஜ்மகாலை ரசித்து அதன் அழகில் சொக்கிய நேரம் மறக்க முடியாத சொக்கத் தங்கமான தருணம்!

பின் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட அவர்களின் படிப்பு  மற்றும் இதர திறமைகளில் ஊக்குவித்து அவர்களைப் பத்தரை மாற்றுத் தங்கங்களாக  உயர்த்த நேரம் போனதே தெரியாமல் உழைத்த தருணங்கள் பொன்னானதே!

மூத்த மகன் +2வில் தமிழகத்தில் மாநில மூன்றாமிடமும், அடுத்த பிள்ளை +2வில் மாநில முதலிடமும் பெற்று என்னை ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைத்த பொன்னான தருணங்கள் நினைக்கும்போதே மனம் நிறைப்பவை!

இரண்டாம் மகன் +2வில் Commerce பிரிவு எடுத்து மாநில முதலாக வந்து திரு சேஷன், அன்றைய முதல்வர் திரு கருணாநிதி ஆகியோரிடம் பரிசுகள் பெற்றதோடு KKR பாமாயில் கம்பெனியாரின் மாருதி கார் பரிசு பெற்றதும் என் வாழ்வின் ஜொலிக்கும் தங்கத் தருணங்கள்!

என் மகள் மருத்துவரானதும், கடைக்குட்டி மகன் IITயில் M.Tech படித்து சிங்கப்பூரில் வேலைக்கு சென்றதும் 'என் தங்கமே' என்று அவர்களைப் பாராட்டிப் பரவசமடைந்த  ஹால்மார்க் தங்கத் தருணங்கள்!

மாற்றுக் குறையாத தங்கம் போன்ற மருமகள்களும், இன்னொரு பிள்ளையாக மாப்பிள்ளையும், நவரத்தினங்களாக பேரன் பேத்திகளும் கிடைத்த நேரங்கள் ஒரு நல்ல சிறப்பான வாழ்க்கை கிடைத்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறிய  தங்கத் தருணங்கள்!

புத்தகங்களில் மட்டுமே படித்தறிந்து அவற்றின் அழகில் சொக்கிப்போன பாரிஸையும், ஸ்விஸ்ஸையும் பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்ட எனக்கு அவை மட்டுமல்லாமல் கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம், பாலியின் இந்து ஆலயங்கள், பாங்காக்கின் டைகர் டெம்பிள்,ரோமின் கொலோசியம், வாடிகனின் புகழ் பெற்ற சர்ச், லண்டன்  பக்கிங்காம் அரண்மனை என்று பல நாடுகளையும் கண்டு மகிழக் கிடைத்த  வாய்ப்புகள் தகதகக்கும் தங்க நினைவுகள்!

பாரத நாட்டின் பல ஆலயங்களை தரிசித்திருந்தாலும் சமீபத்தில் சென்று தரிசித்த  சார்தாம் யாத்திரையில் கேதார்நாத் ஈசனை தொட்டு வணங்கியபோது 'பொன்னார் மேனியனை தரிசித்து பிறந்த பயனை அடைந்து விட்டோம்' என்று மெய்சிலிர்த்த பொன்னான தருணம்!

முப்பது வருடங்களாக தமிழ் இதழ்களில் கதை, கட்டுரை, போட்டிகளில் எழுதி அவை பிரசுரமாகி அவற்றை இதழ்களில் கண்டு சந்தோஷிக்கும் நேரம் பொன்னே கிடைத்ததாய் மகிழ்ந்த நேரங்கள்!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மத்யமரில் பல தலைப்புகளில் எழுதுவதும், அவற்றிற்கு பல மத்யமர்களின் பாராட்டுகளும், எழுத்துத் திறமையை ஊக்கப்படுத்தும் பூஸ்ட்டாக அட்மின்களால் கொடுக்கப்பட்ட  ஏழு POTW மற்றும் 2 GEMம் பெற்ற நேரங்கள் 'இங்கு நம் எழுத்துக்கும் மதிப்பு இருக்கிறது' என்று மனம் களிப்படைந்த நிமிடங்கள் தரம் குறையாத பொன்னான தருணங்கள் மட்டுமா என்னை வானில் சிறகடித்து பறக்க வைத்த தருணங்களும் கூட!

நான் போடும் பலவகைக் கோலங்கள், இசையுடன் இயைந்து பாடும் கீர்த்தனைகள், விதவிதமாய் செய்யும் பாரம்பரிய மற்றும் புதுவித சமையல்கள், என் blouseகளில் நானே உருவாக்கி தைக்கும் டிசைன்கள், அழகிய கைவேலைகள்..இவற்றை மனம் ஒன்றி செய்து அவை சிறப்பாக அமையும்போது அந்த நேரங்கள் நானே மகிழும் தங்கத் தருணங்கள்! இன்னும் இதுபோல் நிறைய்...ய!

ஒரு இல்லத்தரசியாக இருந்து எல்லா கடமைகளையும் முடித்து என் கணவருடன்  இனி இறை சிந்தனையுடன் வாழும்  வானப்ரஸ்த வாழ்க்கைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப் பொன்னான நேரத்தில் 'இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம்' என யோசிக்க வைத்து அந்தப் பொன்னான நேரங்களை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்த மத்யமருக்கு என் மனமார்ந்த நன்றிகள்🙏🏼🙏🏼

No comments:

Post a Comment