Saturday 4 April 2020

உலகம் முழுக்க விடுமுறை..!

ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்ட நாட்களில்தான் விடுமுறை விடுவார்கள். ஒட்டு மொத்தமாக எல்லா நாடுகளுக்கும் விடுமுறை கொடுத்து நாம் கேள்விப் படுவது இதுவே முதன்முறை!

இன்றைய நம் நிலையை நினைத்துப் பார்க்கிறேன். நான்கைந்து மாதங்களுக்கு முன்பு இது போன்ற நிலைமையை நாம் யோசிக்கக் கூட இல்லையே? கோடை விடுமுறைக்கு எங்கே எவ்வளவு நாள் போகலாம் எப்படியெல்லாம் enjoy பண்ணலாம் என்று எவ்வளவு முடிவு செய்து வைத்திருந்தோம்? இன்றோ வாசல்படியைக் கூட தாண்ட  முடியாத நிலை. வெளியூர்களில் வெளிநாடுகளில் இருக்கும் குழந்தைகள் பற்றிய கவலை.

70, 80 ஆண்டுகளுக்கு முன்பு நம் பெரியோர்கள் நமக்கு காட்டித் தந்த வாழ்க்கை நெறிமுறைகளை நாம் இன்று கடைப் பிடிக்கிறோமா?

அன்றைக்கு மடி ஆசாரம் என்று பெரியவர்கள் சொன்னதை இந்நாளில் கேலி செய்து புறம் தள்ளினோம். சாதத்தை தொட்டால் கை அலம்ப வேண்டும், கீழே அமர்ந்து சாப்பிட வேண்டும், சாப்பிட்ட இடத்தை துடைக்க வேண்டும் என்பதெல்லாம் மறந்தோம்.

வாசலில் சாணி கரைத்த தண்ணீரை தெளித்தால் கிருமிகள் வீட்டுக்குள் வராது, வெளியில் போய் விட்டு வந்தால் கை கால்களை அலம்ப வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை என்றானது. தலைமுடியைத் தொட்டாலும், நகம் வெட்டினாலும் கை அலம்ப வேண்டும் என்றதெல்லாம் கிருமிகள் நம்மிடமிருந்து விலக என்பதை அறியவில்லை.

வாசலில் கோலம் போடுவது தீய சக்திகளை உள்நுழையாமல் தடுக்கும் என்ற நம்பிக்கை
யெல்லாம் பத்தாம்பசலித்தனம் என்றாகி ஸ்டிக்கர் கோலம் இடம் பிடித்தது. வாசலில் மட்டுமா..பெண்களின் நெற்றியிலும் குங்குமம் வைப்பது அநாகரிகமாகி ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது.

ஒரு குழந்தை போதும் என்ற மனோபாவம் வளர்ந்தது.  ஒருவருக்கு ஒரு வீடு என்பது போக இரண்டு மூன்று வீடுகள்.  எல்லோரிடமும் எக்கச்சக்க   பணவசதி. பணத்தால் எதையும் செய்ய முடியும் என்பதால் குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்
கொருவர் தேவையில்லாமல் போய்விட்டது.

சாப்பாடு கூட ரெடியாகக் கிடைக்கும் போது தாய் தாரம் எதுவுமே அவசியமில்லா
ததாயிற்று. பணம் அதிகமாக கடவுளிடம் பயம் விலகி பக்தியும் காணாமல் போனது. ஆசார அனுஷ்டானங்கள்,  இரு பாலாருக்குமான அத்யாவசிய நியமங்கள் அநாவசியமாகிப் போனது.

ஆலயங்களில் இறைவன் எதிரிலேயே ஊழல், ஏமாற்றுதல், கடவுளை தரிசிக்க பணம் வாங்குதல் என்று 'கடவுளாவது ஒண்ணாவது..அவர் வெறும் கல்' என்று அவரை பணம் சம்பாதிக்க மட்டுமே கருவியாகக் கொண்டு வாழும் மக்கள் அதிகமாகிப் போனது. பாவம் செய்பவர்கள் தண்டிக்கப் படுவார்கள் என்பது போய் பாவம் செய்தாவது சொத்து சேர்க்கும் குணம் அதிகமாயிற்று.

அதர்மம் ஓங்கும்போதுதான் இறைவனின் அருள் வெளிப்படும். நமக்கு துன்பமும், துயரமும் வரும்போது நாம் தட்டுவது  இறைவன் வாழும் ஆலயக் கதவுகளையே.அந்த இறைவனே இன்று கோபித்துக் கொண்டு நம்மை அண்டவிடாது ஆலயக் கதவுகளை அடைத்துக் கொண்டு விட்டாரோ?

நாட்டில் எத்தனை திறமை வாய்ந்த  ஜோசியர்கள்.அவர்களாலும் இப்படி ஒரு நிலைமை வரும் என்பதைச் சொல்ல முடியவில்
லையே. இங்குதான் நாம் இறைவன் இருக்கிறான் என்று உணர முடிகிறது.  அன்றைய வழக்கங்கள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்று அறிய முடிகிறது. மறந்துபோன கை அலம்பும் பழக்கம் இன்று மறுக்க முடியாத அவசியம் ஆகிப் போனது. என்னே இறைவனின் திருவிளையாடல்.

ஒரு சின்ன கண்ணுக்கு தெரியாத கிருமி எப்படி இவ்வுலகையே ஆட்டி வைத்து கண்ணாமூச்சி ஆடுகிறது! பந்த், வேலை நிறுத்தங்கள் உலகுக்கு புதியல்லை. ஆனால் இன்று போல் உலகின் அத்தனை  தெருக்களும் அமைதியாக இருந்ததுண்டா? பூமியின் பாரம் தாங்காத பூமாதேவி ஓய்வு எடுக்கிறாளோ?! அவளுடன் இணைந்து  சகலமும் சாந்தியில் திளைக்கின்றன. இயற்கை தவிர அத்தனையும் மக்கள் உட்பட ஓய்வு எடுக்கிறோம்!

உலகை நல்வழிப்படுத்தவும் நாடுகளுக்குள் பகைமையைத் தவிர்க்கவும் அமைதியை நிலைநாட்ட போராடிய பெரியோர் எத்தனை பேர்? இன்று கொரோனா என்ற பெயரில் உருவான கிருமி கோடீஸ்வரனிலிருந்து ஒன்றுமே இல்லாத ஓட்டாண்டி வரை அத்தனை பேரையும் பேரமைதியில் ஒடுக்கி விட்டது.

நேரத்துக்கு ஒரு நாடாகப் பறக்கும் ஒரு தொழிலதிபருக்கும் சின்ன சந்தில் வாழும் ஏழைக்கும் வாழ்க்கை ஒரே மாதிரிதான்..வாழ்வதும் ஒருமுறையே என்று ஆணித்தரமாக அறிய வைத்து விட்டது கொரோனா.

இதிலிருந்து மீள நமக்கு ஒரே வழி அந்த இறைவனிடம் கதறி அழுது நம்மைக் காப்பாற்ற வேண்டுவது ஒன்றே.அவன்தாள் வணங்கி அவனருளை வேண்டுவோம். நாம் எவ்வளவு சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், அதைத் தீர்மானம் செய்து, நடத்திவைப்பது பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும்,பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, “பகவானே.! உன் சித்தம்.!" என்று சொல்லி,அவனைச் சரணடைவோம். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை.

இனி வரும் தமிழ்ப் புத்தாண்டு சார்வரியில் நமக்கு புதிதான சுத்தமான பூமியைத் தந்து நம்மை ஆரோக்யமாக வாழவைக்க இறைவனை பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment