Tuesday 11 December 2018

அருள்தரும்ஆனந்தசாயி

#ஆன்மிகம்
🙏#அருள்தரும்ஆனந்தசாயி🙏

#இன்றுஸ்ரீசத்யசாயிபாபாவின்93ம் பிறந்தநாள்🙏

ஸ்ரீசத்ய  சாய்  பாபா  என்  குரு; தெய்வம்; என்ன  கஷ்டம்  வந்தாலும் சாய்ராம் ..சாய்ராம்..என்று   என் உதடுகள்  அழைப்பது  அவரையே!அவர்  நாமம்  சொன்னதும் என் மனக்கவலைகள்  பறந்து  விடும். இது இன்று!

ஆனால் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்யசாயி பாபாவைப்  பற்றி அதிகம் தெரியாது...எந்த   ஈடுபாடும் கிடையாது. என் மாமியாருக்கும், கணவருக்கும் சீரடி பாபாவிடம் பக்தி அதிகம்.ஒவ்வொரு வியாழனும் பூஜை செய்வார்கள்.பர்த்தி பாபா எங்களை ஆட்கொண்டது எங்கள் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

ஆம்!  நாங்கள்  அச்சமயம் ஈரோடில் இருந்தோம்.என்  கணவருடன் வங்கியில் பணி புரிந்த சாயி பக்தை சுவாமியின் எழுபதாம் பிறந்தநாளுக்காக எங்கள்  வீட்டில் ஒரு  நாள்  பஜனை  வைத்துக் கொள்ளும்படி கேட்டார்.  பாபாவின் புகைப்படம் கூட எங்கள்  வீட்டில் இல்லை என்பதால் அவர்களே சமிதியின் புகைப்படம் ஒன்றைக் கொண்டு  வைத்து  பஜனையும் செய்தோம். நான் பலமுறை சொல்லியும் அந்தப் படத்தை
திரும்ப அவர்கள் எடுத்து  செல்லாததுடன்  என்னையே  வைத்துக்  கொள்ளும்படி  சொல்லிவிட    பாபா  'இனி  நான்  உங்கள்  வீட்டை  விட்டு   போவதாக இல்லை'  என்று  எங்கள்  வீட்டிலேயே தங்கி  விட்டார் ! அதன்பின் நானும், என்மகளும் சமிதியின் வாரபஜனை, நாராயண சேவை, நகர சங்கீர்த்தனம் எல்லாவற்றிலும் தவறாமல் பங்கு கொள்வோம்.

'நீ என்னை  நோக்கி  ஓரடி  எடுத்து வைத்தால்  நான் உன்னை  நோக்கி பத்தடி   வைத்து  வருவேன்'  என்பது சாயியின்  திருவாக்கு.  இதனை நான்  பலமுறை   உணர்ந்து அனுபவித்துள்ளேன். என் மகன் +2 படிக்கும்போது சுவாமியின் பஜனைக்கு சென்ற நான், என்  மகன்  நல்ல மதிப்பெண்கள் பெற்று  பள்ளியில் முதலாக வர வேண்டும்  என வேண்ட, சட்டென்று பாபா  படத்திலிருந்த பூ ஒன்று கீழே விழுந்தது. என்  மகன்  மாநிலத்தில் முதலாக வரப்போவதை அன்றே சூசகமாக பாபா சொன்னதை பிறகுதான் என்னால் உணர முடிந்தது!

ஒரு  கார்  வாங்க  அருள்  செய்ய பாபாவை  நான்  வேண்ட  அவரோ, மாநில  முதலாக  வந்த  என் மகனுக்கு  ஒரு  காரையே  பரிசாகப் பெற  அருள்  செய்தார். ஆம் !KKR பாமாயில் கம்பெனியினர்  என் மகனுக்கு மாருதி800 காரைப் பரிசாக அளித்தனர். எங்களுக்கு மிக ஆச்சரியம்! பெரிய விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கும் கார் பரிசு ஒரு +2 மாணவனுக்கு கொடுத்ததை அனைவரும் பாராட்டினர். ஒரே நேரத்தில்  நான் ஆசைப் பட்ட இரண்டு  விஷயங்களையும் நிறைவேற்றி  விட்டார் என் சுவாமி!

என் மகள் மருத்துவம் படிக்க விரும்பினாள் .  நாங்கள் அப்போது கோலாப்பூரில் இருந்தோம். அச்சமயம்  பெங்களூரில் என்மகன் வேலையில் இருந்ததால் அங்கு தங்கி, பர்த்திக்கு செல்வதாக முடிவு செய்தோம். பர்த்திக்கு அடிக்கடி செல்பவர்களிடம் கேட்டபோது காலை, மாலை இரு வேளையும் தரிசனம் உண்டு என்றார்கள். நாங்கள் சென்று சேர மாலை 5 மணிக்குமேல் ஆகிவிட்டதால் தரிசனம் முடிந்து விட்டதாகவும், இனி மறுநாள்தான் தரிசனம் என்றும் கூறிவிட்டார்கள். அங்கேயே இருக்கும் அறைகளில் தங்கலாம் என நாங்கள் முடிவு செய்தபோது, திடீரென்று சுவாமி மீண்டும் வருகிறார் என்று அனைவரும் தரிசன ஹாலுக்கு ஓடினர்.

நாங்களும் ஹாலுக்குள் சென்று அமர்ந்தோம். அவரது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தரிசனத்திற்கு வந்ததால், சுவாமி மீண்டும் வந்ததாகச் சொன்னார்கள். தரிசன நேரம் முடிந்துவிட்டதால் கூட்டம் இல்லை. நான்காம் வரிசையில் இடம் கிடைத்ததால் சுவாமியை கண்குளிர தரிசனம் செய்தோம்.சுவாமி பல மாணவர்களோடு பேசினார்; சிலரை தொட்டு அணைத்து ஆசிர்வாதம் செய்தார். சட்டென்று கையை சுழற்றி விபூதி வரவழைத்து அனைவருக்கும் கொடுத்தார். ஆஹா...சுவாமி எப்படி விபூதி வரவழைப்பார்..நம்மால் காணமுடியுமா..என்ற ஏக்கத்தை சுவாமி அப்பொழுதே போக்கி விட்டார்!

அச்சமயம் +2 படித்துக் கொண்டிருந்த என் பெண்ணுக்கு  எம்.பி.பி.எஸ் படிக்க மிக விருப்பம். அதுவரை நுழைவுத் தேர்வு இல்லாமலிருந்த மகாராஷ்டிராவில் அவ்வருட முதல் நுழைவுத் தேர்வு ஆரம்பிக்கப் போவதாக திடீர் அறிவிப்பு வந்தது. 15 நாளில் நுழைவுத் தேர்வு என்று அறிவித்த அரசு, விண்ணப்ப ஃபாரங்களையும் கொடுக்க ஆரம்பித்தது. இது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த, சில மாணவர்களும், பெற்றோர்களும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து நுழைவுத் தேர்வு நடத்தாமலேயே மேற்படிப்பு அட்மிஷன் செய்யக் கோரினர். இப்போது என் மகள் மிக மனம் சோர்ந்து விட்டாள்.

அடுத்தமுறை நான் பர்த்தி சென்றபோது, என் மகளுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவேண்டி அவரது ஆசியை வேண்டி,  ஒரு  கடிதம்  எழுதி  எடுத்து  சென்றிருந்தேன். சுவாமி வந்த  போது   நான்  வெகுதூரம்  தள்ளி  அமர்ந்திருந்ததால் அக்கடிதத்தைக்  கொடுக்க முடியவில்லை.சுவாமியின்  ஆஸ்ரம விலாசம் எழுதி தபால்  பெட்டியில் போட்டுவிட்டேன். 'சுவாமி  நமக்கு  பதில்  போட்டால்  எப்படியிருக்கும்' என்று  ஒரு  கற்பனை  வேறு!

ஒரு  வாரம்  கழித்து ஒருஇன்லெண்ட் கடிதம்  ஒன்று பெங்களூரில் என் பிள்ளை வீட்டுக்கு வந்தது. அதன் ஃப்ரம் அட்ரஸைப் பார்க்கையில், ‘பிரசாந்தி நிலையம்’, புட்டபர்த்தி என்றிருந்தது. ஒரு நிமிடம் எனக்கு மெய் சிலிர்த்து விட்டது. நான் எழுதிய கடிதத்திற்கு பதிலா? நம்ப முடியாமல் முன் பக்க விலாசத்தை பார்த்தபோது அங்கேயே பக்கத்து வீட்டிற்கு அந்தக் கடிதம் வந்திருந்தது. அவர்கள் மகன் பர்த்தியில் படிப்பதாயும், அவன் கடிதம் என்றும் கூறினார்கள். கடந்த 4, 5 வருடமாகக் குடியிருக்கும் அவர்கள் விலாசத்திற்கு வரவேண்டிய கடிதம், தவறுதலாக ஏன் என் வீட்டிற்கு வர வேண்டும்? சுவாமியின் அருளை என்ன சொல்வது? கண்டிப்பாக என் மகளுக்கு மெடிகல் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது!

அதன் பின்பு 2 நாளில் நான் கோலாப்பூர் திரும்பிவிட, உள்ளே வந்ததும் என் கண்ணில் பட்டது அம்மாத ‘சனாதன சாரதி’. ஆவலோடு எடுத்துப் பிரித்தவளின் கண்ணில் பட்டது, பக்தர்களின் கடிதங்களுடன் காட்சி தந்த பகவானின் வண்ணப்படம்! ‘உன் கடிதம் என் கையில் கிடைத்து விட்டது’ என்று சொல்கிறாரோ பகவான்! அடுத்த வாரமே நுழைவுத்தேர்வு ரத்தாகி மதிப்பெண் அடிப்படையில் மும்பாய், கிராண்ட் மெடிகல் கல்லூரியில் என் மகளுக்கு அட்மிஷன் கிடைத்தது

இப்படி பகவான் எனக்குஅருளிய  விஷயங்கள் பலப்பல. எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல் நடந்த  இந்த சம்பவம்  பாபாவின்  பேரருள் எனலாம்!

நான் பலமுறை பர்த்திக்கு சென்றிருக்கிறேன். அங்கு  சர்வீஸ் செய்பவர்களைப் பார்க்கும்போது 'சாயிநாதா! இது போன்ற  ஒரு வாய்ப்பை எனக்கு ஒருமுறை கொடுப்பாயா?' என்று  மனமுருக வேண்டுவேன். குழந்தைகளின் படிப்பு, வீட்டில் வேலை என்று  எனக்கு அதை நினைத்துப் பார்க்கக் கூட நேரம் இல்லை. ஆனால்  அதையும் நிறைவேற்றி வைத்தார்   அந்த கருணாசாயி!

 அடிக்கடி  பர்த்திக்கு  சர்வீசுக்கு  சென்றுவரும்  என் தோழியிடம்  நான்  என்   விருப்பத்தைக்  கூற  அவளும்  சமிதியில்  சொல்லி,விண்ணப்பித்து,  அதற்கான  விதிமுறைப்படி  என்னை  2006ம் ஆண்டு ஒரு வார சர்வீசுக்கு  அழைத்துச் சென்றாள். ஆஹா!  அந்த ஒரு வாரம் சொர்க்கமாக இருந்தது. அதிலும் சுவாமி அமர்ந்து  அனைவருக்கும் அருளாசி வழங்கும்  இடத்தைப் பெருக்கி,  துடைக்கும் சர்வீஸ்  கிடைத்ததை என்னவென்று சொல்ல? தினம் தினம் அவரது பாததூளி பட்ட  இடத்தில்  சேவை செய்ததோடு, தினமும் இரு வேளையும் அவரது   தரிசனம் வெகு அருகில்!  அந்த  அனுபவத்தை நினைக்கும்போதே இன்றும்  எனக்கு மெய்சிலிர்க்கிறது.

இன்று  அவர்  நம்முடன் இல்லையென்றாலும்  அவர்
நம்மைப்  பார்த்துக்  கொண்டும்  நம் கஷ்டங்களைத்  தீர்த்துக்  கொண்டும் தெய்வீக  நிலையில்  நம்மைக் காப்பாற்றுவதை  உணர  முடிகிறது.  #ஓம்ஸ்ரீசாயிராம்!🙏
#ராதாபாலு

No comments:

Post a Comment