Wednesday 12 December 2018

இந்தநாள்...இனியநாள்

இந்தநாள்...இனியநாள்!!

என் பேத்திகள் தாம்பரம் சங்கரா குளோபல் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியவள் ப்ரீத்தி ஆறாம் வகுப்பு; சின்னவள் ப்ரியங்கா UKG.

நேற்று அவர்கள் பள்ளியில் LKG, UKG குழந்தைகளுக்கு Grand-Parents day நடந்தது. அதற்காகவே நாங்கள் திருச்சியிலிருந்து வந்தோம்.
என் பேத்தி ப்ரியங்கா ஹிந்தி பாட்டுக்கு  நடனம் ஆடியதோடு, தாத்தா பாட்டி பெருமை பற்றி  சில நிமிடங்கள் பேசினாள்.

LKG, UKG குழந்தைகள் அத்தனை பேரும் ஏதாவது ஒரு ப்ரோக்ராமில் இருந்தார்கள். அழகழகாக ராதா கிருஷ்ணன் உடை, காக்ரா சோளி என்று வண்ணமயமாகக் காட்சியளித்த குட்டிகளின் அழகு மெய்மறக்கச் செய்தது. அவர்களின் சந்தோஷம், கோபம், சிரிப்பு, பயம் என்று ஒவ்வொரு உணர்வும் அற்புதம் என்று எண்ணுவேன்! நடனம் ஆடும்போது அவர்களின் ஒவ்வொரு பாவமும் அழகு!

இது தாத்தா பாட்டிகளுக்கான விழாவாச்சே? நிகழ்ச்சி நடத்தும் ஆசிரியை  வந்திருந்தவர்களைப் பார்த்து 'இன்று குழந்தைகளைப் போல தாத்தா பாட்டிகள் ஸ்டேஜில் வந்து விளையாட வேண்டும்' என்று சொல்ல, 'தாத்தா பாட்டி' என்று எல்லா குட்டிகளும் கோரஸாக பாடினார்கள்!!

முதலில் தாத்தாக்களுக்கான போட்டி.'எல்லா தாத்தாக்களும் மேடைக்கு வரவும்' என்று அழைக்க,  என் கணவர் முதல் ஆளாக மேடைக்கு சென்றார்! என் கணவர் எப்போதுமே எங்கள் பேரன், பேத்திகளுக்கு சரியாக ஓடிப் பிடித்து, ஏறி இறங்கி விளையாடுவார்! இங்கு என்ன விளையாட்டோ என்று எனக்கு ஒரே டென்ஷன்!

'பலூன் உடைக்கும் போட்டி' என அறிவித்த ஆசிரியை எல்லாருக்கும் 2 பலூன்களைக் கொடுத்து, 'தன் பலூனை உடைக்காமல் மற்றவர் பலூன்களை உடைக்க வேண்டும். கடைசி வரை பலூன் கையிலிருப்பவரே வின்னர்'என்று அறிவித்தார்!

ரெடி என்றவுடன் அத்தனை தாத்தாக்களும் அடுத்தவர் பலூனைக் குறிவைத்து ஓடி ஓடி உடைக்க, பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கோ ஒரே வேடிக்கையாக இருந்தது! என் கணவரின் வேகம் பார்த்து அந்த ஆசிரியை 'most energetic தாத்தா' என்று பட்டம் கொடுத்து பாராட்டினார்.என் பேத்திகளுக்கோ செம குஷி!

பரிசைப் பெற்ற இன்னொரு தாத்தா சாமர்த்தியமாக இரு பலூன்களையும் ஒரே கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் அடுத்தவர் பலூன்களை அநாயாசமாக உடைத்துவிட்டார்! இந்த ட்ரிக் வேறு யாருக்கும் தெரியவில்லை!

அடுத்து தாத்தா பாட்டி இருவருக்குமான Balls and basket போட்டி! தாத்தாக்கள் கையில் கூடை வைத்திருக்க, பாட்டிகள் பந்துகளை ஒவ்வொன்றாக எடுத்து கூடையில் தூக்கிப்போட, எதிரிலுள்ளவர்கள் அவற்றை கீழே விழாமல் பிடிக்க வேண்டும்! இதில் எங்களுக்கு பரிசு கிடைத்தது.

இவை தவிர, பல்லாங்குழி, தாயக்கட்டம்,  பரமபதம் என்று பழங்கால விளையாட்டுக்கள்! மொத்தத்தில் வந்திருந்த அத்தனை தாத்தா பாட்டிகளுக்கும் போட்டியில் வென்ற பரிசுகளுடன், நினைவுப் பரிசும் உண்டு.

மேடையில் ஏறி பரிசுகளைப் பெற்றபோது, சிறுவயதில் பள்ளியில் பெற்ற பரிசுகளின் நினைவு வந்து,  நாங்களும் சிலமணி நேரங்களுக்கு குழந்தைகளானோம்!

நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும்போது ஆசிரியைகள் சிலர் என் கணவரைப் பார்த்து,
'சார்.உங்கள் வயதுக்கு நீங்கள் இவ்வளவு உற்சாகமாக விளையாடியது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கு' என்று ஒரே பாராட்டு மழை! இவர் முகத்தில் பெருமையைப் பார்க்கணுமே!

என் பேத்திகளைப் பார்த்து 'உங்க தாத்தா, பாட்டி ரொம்ப கிரேட்' என்று சொல்ல, என் பேத்திக்கு ஏக சந்தோஷம்!

மொத்தத்தில் இந்த விழா வித்யாசமானதாகவும், உற்சாகமானதாகவும் எங்களை பழைய பள்ளி நாட்களுக்கு அழைத்து சென்றது!!

தாத்தாக்களின் விளையாட்டை நீங்களும் கீழேயுள்ள வீடியோவில் ரசிக்கலாம்! வேஷ்டி,ஆரஞ்சு கலர் ஷர்ட் அணிந்திருப்பவர் என் கணவர்!


No comments:

Post a Comment