Tuesday 11 December 2018

#தனித்திறமைகள்


#தனித்திறமைகள்

கோலம், பாட்டு, கைவேலை, தையல், சமையல் என்று எனக்கு பல திறமைகள்(!) இருந்தாலும் என் தனித்திறமை எழுத்து! 'உன் முக்கியமான எழுத்து திறமை பற்றி எழுதவிட்டுட்டயே' என்று என் கணவர் சொல்ல,' ஆமாம்..மறந்தே போச்சே!' என்று அதையும் எழுதிவிட்டேன்!

நான் கடந்த 35 ஆண்டுகளாக பல இதழ்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். கம்ப்யூட்டர் இல்லாத நாட்களில் பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி அனுப்பணும். அதன் காப்பியெல்லாம் கிடையாது. மெயிலில் அனுப்பவும் முடியாது. அது தேர்வாகவில்லையெனில் திரும்பவும் வராது. இப்ப எல்லாம் computerல் save பண்ணிக்கலாம். எனக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்தது என் செல்லப் பிள்ளைகள்! ரொம்பப் பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்கள். நான் எழுதி புத்தகங்களில் வந்த அத்தனை கட்டுரைகளையும் பத்திரமாக வைத்துள்ளேன். அவற்றை தொகுத்து எனக்கு ஒரு blog ஆரம்பித்து அதில் போட்டவர் என் அன்புக் கணவர்! நான் எழுத்தாளர் என்பதில் அவருக்கு அலாதி பெருமை!

நான் எல்லாவிதமான கட்டுரைகள் எழுதினாலும் ஆலயதரிசனக் கட்டுரைகள் என் ஸ்பெஷல். ஞான ஆலயம், பக்தி, சக்திவிகடன், தீபம், ஹிந்து தமிழ் அனைத்திலும் என் ஆலய தரிசனக் கட்டுரைகள் வெளியாகும். எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அங்குள்ள ஆலயம் சென்று தரிசித்து அது பற்றி எழுதுவேன். சிங்கப்பூர் பலமுறை சென்றுள்ளேன். அங்குள்ள ஆலயங்களின் அழகும், அமைதியும் எனக்கு மிகப் பிடித்தவை. நான் சென்று தரிசித்த கெய்லாங் சிவாலயம் பற்றி எழுதிய கட்டுரை இத்துடன் இணைத்துள்ளேன். என் blog....http://radhabaloo.blogspot.com இதுவரை நான் அனுப்பிய தனித்திறமை பதிவுகளுக்கு லைக்கிட்டும், கமெண்ட் போட்டும் என்னை மகிழச் செய்த அனைத்து மத்யமர்களுக்கும் நன்றி!நன்றி!!

#ராதாபாலு
#கெய்லாங்சிவன்கோயில #சிங்கப்பூர்
சிங்கப்பூர் ஒரு அழகிய நகரம். தமிழ், ஆட்சி மொழியில் ஒன்றாக இருப்பதால் இங்கு தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். 1800 களில் இங்கு வாழ்க்கை தேடிச் சென்ற மக்கள் உருவாக்கியவையே இங்குள்ள இந்து தெய்வங்களுக்கான ஆலயங்கள். சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையான இக்கோயில்களில் சிறந்த உற்சவங்களும், திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இந்தியக் கட்டடக் கலைஞர்களால் தென், வட இந்திய ஆலய அமைப்புகளை இணைத்து வித்தியாசமாக, தனித்துவமிக்கதாக இவ்வாலயம் எழுப்பப் பட்டுள்ளது. இளஞ்சிவப்பும், வெளிறிய பழுப்பு நிறமும் இணைந்த வண்ணத்தில், மூன்று கோபுரங்களுடன், எண்கோண வடிவ கலையழகுடன் பத்து அடிக்கு மேற்பட்ட உயரத்தில் காட்சி தருகிறார் சிவபெருமான்.

அலங்கார வளைவுடன் காணப்படும் நுழை வாயிலில் இருந்து 21 படிகள் ஏறிச் சென்றால் விஸ்தாரமான பெரிய மண்டபம். அழகிய தெய்வீக சிற்பங்க்களைக் கொண்ட பெரிய தூண்கள். மேல் விதானக் கோலங்கள் கண்கவர் காட்சி. தகதகவெனப் பிரகாசிக்கும் கொடி மரத்துக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்திகேஸ்வரரைத் தொழுது, முன்னே சென்றால் ஸ்ரீ விஸ்வநாதரின் வலப்பக்கம் அமர்ந்திருக்கும் கணபதியை வணங்கி, சிவபெருமானைத் தொழுவோம்.

சற்று மேலே பார்வையைச் செலுத்த, ஆஹா... எல்லா ஆலயங்களிலும் சுற்றுப் பிரகாரத்தில் காட்சி தரும் 63 நாயன்மார்களும் எண்கோண மண்டப விமானத்தில், வண்ணமயமாய்க் கைகூப்பித் தொழுதபடி நின்று இறைவனை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஈசனின் சன்னதிக்கு நேர் மேலே நடராஜ தரிசனம். விஸ்வநாதப்பெருமான் வெள்ளித் திருவாசியுடன் காட்சி தருகிறார். ஐயனின் இடப்பக்கம் காட்சி தரும் குமரப் பெருமானை வணங்கி, சன்னிதியை சுற்றி வரும்போது மோனத்துடன் தரிசனம் தரும் தட்சிணா மூர்த்தியையும், சுற்றுத் தெய்வங்களையும் வணங்கி அம்மனின் சன்னிதிக்கு வருவோம்.

இரண்டடி உயர விசாலாட்சி அன்னை சிந்தையைக் கவரும் வண்ணம் தரிசனம் தருகிறாள். ஆலயத்தின் தூய்மையும், தெய்வங்களின் சாந்நித்தியமும் தெய்வீகமான அமைதியும், மனதுக்கு புத்துணர்வைக் கொடுக்கின்றன. நவக்கிரக சன்னிதியையும், நடராஜ சபையையும் வணங்கி கீழே வருவோம்.

கீழே வலப்பக்கம் உள்ள நர்மதேஸ்வரர் என்ற பாணலிங்கம், ஆத்ம லிங்கமாகப் போற்றப்படுகிறது. இந்த லிங்கத்துக்கு ஜாதி, மத பேதமின்றி யாரும் அபிஷேகம், வஸ்திரம், புஷ்பம் சாத்தி அலங்காரம், தீபாராதனை செய்யலாம். செய்யும் முறை அங்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கான பால், சந்தனம், விபூதி, கங்கை நீர், வில்வம் போன்றவை ஆலயத்தில் கிடைக்கிறது. நாமே நம் கையால் அபிஷேகம் செய்வது மன சாந்தியைத் தருகிறது. திங்கட்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் இங்கு நீண்ட வரிசையில் நின்றே அபிஷேகம் செய்ய முடியுமாம்.

கீழுள்ள சுற்றுச் சுவர்களில் ஈசனின் தாண்டவக் கோலங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. கீழ்ப் பிரகாரத்தின் இடப்பக்கம் சூரிய பகவான், சந்திரன், சனீஸ்வரர், காலபைரவரின் சன்னிதிகள் உள்ளன. இங்கு நவராத்திரி, வசந்த நவராத்திரி, சிவராத்திரி, ஸ்கந்த சஷ்டி, திருவாதிரை போன்ற உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோத்சவம் நடத்தப்படுகிறது. மேலே ஏறிச் செல்ல முடியாதவர்களுக்காக லிஃப்ட் வசதி உள்ளது. இவ்வாலயத்தில் இலவச தேவார வகுப்புகளும், இலவச ஹோமியோபதி மருத்துவமும் செய்யப்படுகிறது. கல்யாணம், காது குத்து, அன்னபிராசனம், சிரார்த்தம் போன்றவைகளும் செய்து வைக்கப் படுகின்றன. ஊழியர்களுக்கான வீடுகளும் ஆலயத்தினுள்ளேயே அமைந்துள்ளது. ஆலயம் கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2-ல் உள்ளது. பாயா லேபர் ஸ்டே ஷனில் (Paya Laber MRT) இருந்து நடந்து செல்லலாம். சிங்கப்பூர் செல்பவர்கள் அவ்சியம் கண்டு தரிசிக்க வேண்டிய ஆலயம்.

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை, மாலை 6 மணி முதல் 9 வரை. ஆத்மலிங்க பூஜை நேரம்: காலை 7 மணி முதல் 11-45 வரை. மாலை 6.30மணி முதல்8.45 வரை

No comments:

Post a Comment