Monday 4 May 2020

இன்று காமதா ஏகாதசி🙏🏼3.4.2020


M...சித்திரை மாத வளர்பிறை ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்று பெயர். தம்பதிகளின் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஏகாதசி இது. நினைத்ததை நிறைவேற்றித் தருவதுடன் ஏழு ஜன்ம பாவங்களும் நீக்கிவிடும்.

நாகராஜனின் சாபத்தால் அரக்கனாக மாறிய ஒரு கந்தர்வன் சாப விமோசனம் பெற அவன் மனைவி இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பயனால் கந்தர்வன் நலமடைந்தான்.முன்னொரு காலத்தில் போகீபூர் என்னும் நகரத்தை ஆண்ட புண்டரீகன் அவையில் தேவர்களும் முனிவர்களும் கூடியிருந்தபோது அவைப் பாடகனான லலித் என்பவன் அரசவையில் பாடும்போது சிற்றின்ப சிந்தனையோடு பாடினான். இதைக் கேட்ட மன்னன் வெகுண்டு அவனை அரக்கனாகப் போகும்படி சபித்தான். லலித் அரக்கனாகிக் காடுகளில் திரிந்தான். அவன் மனைவியான லலிதா அரக்கனான தன் கணவனைப் பின் தொடர்ந்தாள். அச்சமயம் அவர்களுக்கு சிருங்கி முனிவரின் தரிசனம் கிடைத்தது. அவர், இவர்களின் துயரை அறிந்து, காமதா ஏகாதசி விரதத்தை எடுத்துரைத்தார்.

இதைக் கேட்ட  இருவரும் மகிழ்ந்து அடுத்துவரும் காமதா ஏகாதசி விரதத்தைப்  விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழி
பட்டனர். இதன் பலனாக அவன் தன் அரக்க ரூபம் நீங்கி, மீண்டும் தன் சுய உருவைப் பெற்றான். இருவரும் நீண்ட காலம் மகிழ்வோடு வாழ்ந்தனர்

உடலின் இயக்கத்தை உறுதி செய்யும் உணவில்லாதபோது நம் வயிறு  ஓய்வுகொண்டு தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்ளும். இதற்காகவே ஏகாதசி அன்று உபவாசம் இருக்க நம் முன்னோர்
கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். உடல் பேசாமல் இருந்து மனம் கண்டபடி நினைவுகளால் அலைக்கழிக்கப் படக்கூடாது என்பதற்காக அன்றைய நாளை இறைவழிபாட்டில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார்கள். எனவேதான் ஏகாதசி அன்று நாம் புண்ணிய நாளாகக் கடைப்பிடிக்கிறோம்.

ஓர் ஆண்டில் மொத்தம் 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25- ம் வருவதுண்டு. ஒவ்வோர் ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயரும் தனிச் சிறப்பும் பலன்களும் வாய்ந்தவை.

ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றையும் பகவானிடம் ஈடுபடுத்தி அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.

ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாயாலேயே ..
'சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்
சுத்தம் ஏகாதசி விரதம்'
என்று கூறியுள்ளார். பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம்...என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

மனித முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போகும்போது நாம் தேடி செல்வது இறைவனின் சந்நிதானமே. துன்பம் நீங்க அவனருள் தேவை.

இப்போது உலகமே கொரோனா சுழலில் சிக்கித் தவிக்கிறது. நாம்,  வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மோசமான நிலை. வீட்டில் மகிழ்வாக இருக்கிறோம் என்பதை விட நமக்கு கொரோனா வந்து விடுமோ என்ற பயமும் உள்ளூர இருப்பதை மறுக்க முடியாது.

இதுபோன்ற அச்சங்களை விடுத்து நேர்மறையான அதிர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டியது அவசியம். அதுவே, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நமக்குள் உருவாக்கும். அப்படி நாம் பயனுனடையவே நம் முன்னோர்கள் இது போன்ற விரத நாட்களை வகுத்திருக்கிறார்கள்.

அத்தினங்களில் இறைவழிபாடு செய்யும்போது நம் மனம் புத்துணர்ச்சி அடைந்து அனைத்தையும் வெல்லும் ஆற்றலைப் பெறுகிறது. அப்படி சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம்.

இத்தகைய சிறப்புகளை உடைய காமதா ஏகாதசியைக் கடைப்பிடிக்க கிடைக்கும் நன்மைகளைப் புராணம் பட்டியலிடுகிறது.

ஏழு ஜன்மப் பாவம் தீரும்..
ஆன்மா சுத்தமாகும்..
சாபங்கள் தீரும்..
மூவுலகிலும் இதைப் போன்ற சுப முகூர்த்த நாள் இல்லை..
எதிர்மறை உணர்வுகளை நீக்கி நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும்..
தீமைகள் இல்லாத வாழ்வை அருளும்..
தீர்க்க ஆயுளையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருளும்..

ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நாராயணனை வணங்க வேண்டும். தற்போது ஆலயங்கள் எல்லாம் மூடியிருக்கிற காரணத்தால் வீட்டிலேயே இருக்கும் சுவாமிக்கு நமஸ்காரம் செய்து வழிபடலாம்.

சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. அப்படி விரதமிருந்து மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இன்றைய நிவேதனம்..
பயத்தம் கஞ்சி
கேரட் அல்வா



No comments:

Post a Comment