Wednesday 7 August 2019

அத்தி வரதா..வரம்தா🙏




அன்புள்ள அத்தி வரதா..
ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்🙏உனக்கு ஆதங்கத்தில் சில கேள்விகள்.

அத்தி வரதா..அத்தி வரதா..என்ற கோஷம் உனக்கு தேனாய் இனிக்கிறதா?

ஆயாசமாகப் படுத்திருந்த நீ இப்பொழுது ஆரவாரமாக நின்றிருக்கிறாயே..கால்கள் துவளவில்லையா?

மீண்டும் நாற்பதாண்டுகள் நீரினுள் சயனிக்க இரவும் பகலும் நின்று உன் உடம்பை நிலைக்குக் கொண்டுவர இந்த தோற்றமா?

உன்னைக் காணவரும் மக்கள் படும் பாட்டைக் கண்டாயா..காணாதது போல் காட்சி தருகிறாயா?

உன்னை கூட்டத்தில் முட்டி மோதி, பாடுபட்டு தரிசித்தால் மட்டுமே பரமபதம் தருவாயா?

சயனித்திருந்தபோது கண்களைத் திருப்ப முடியாமல் மேலே பார்த்திருந்தாய்..இப்போதோ நேராகப் பார்த்தும் எதுவும் தெரியவில்லையா?

பணம் இருந்தால் மட்டுமே  உன் பதவிசான கோலத்தை பக்கத்தில் வந்து பார்க்க முடியுமா?

பக்தி என்ற பெயரில் பொய்யாக உலாவருபவர்களை உன்னால் அறிய முடியாதா?

பாமர மக்கள் உனை தரிசிக்கப் படும் பாட்டை உன் கண்கள் காணவில்லையா?

'கோவிந்தா' என்று கதறியழைத்து உன் தரிசனத்தை கண்சிமிட்டும் நேரம் கூட காணமுடியாது திரும்பும் பாமர மக்களை பார்த்தாயா?

ஈரேழுலகையும் கட்டி மேய்க்கும் ஆநிரைக் கண்ணா... உனக்கு 'எதுவும் தெரியாது' என்று ஜாலம் செய்துவிட்டு மீண்டும் 'ஜலவாசம்' செய்யப் போகிறாயா?

உன்னிடம் நாங்கள் கையேந்துவது ஆழிமழை வேண்டி..இது உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

கோகுலத்து மக்களுக்கு கோவர்த்தனம் தூக்கி மழையிலிருந்து காப்பாற்றினாயே..அந்த மலையைத் தூக்கியபடியே இங்கு வந்துவிட்டாயோ?!

அதனால்தான் வருணதேவனும் உன்னிடம் பயந்து வரத் தயங்குகிறானோ!

'நாராயணா'என்று மகனை அழைத்த அஜாமிளனுக்கு ஓடி வந்து மோட்சம் அளித்த பரந்தாமா!

'என் மானத்தைக் காப்பாற்று' என்று கதறிய திரௌபதிக்கு உடன் அருள் செய்த வாசுதேவா!

'ஆதிமூலமே' என்றலறிய கஜேந்திரனைக் காப்பாற்ற சங்கு சக்கரத்தை கைமாற்றி எடுத்து வந்த  ஜகத்ரட்சகா!

பிரகலாதனுக்காக தூணிலிருந்து வெளிவந்த பரமாத்மா!

அன்று ஒருவரின் குரலுக்காக அருள்செய்த நீ இன்று கோடானுகோடி மக்கள் கூப்பிட்டும் மனமிரங்காதது ஏன் கோபாலா?

நீ வெளியில் வந்ததும் மழை பொழிந்து எங்கும் வளம் பெருகும் என்று காத்திருக்கும் எங்களை ஏமாற்றலாமா அத்தி வரதா?

நீரிலிருக்கும் நீ அதன் அருமையும் பெருமையும் அறியாயோ?

உனைக் கரம் குவித்து வணங்குகிறோம்..🙏

தண்டனிட்டுத் தாள்
பணிகிறோம்..🙏

சிரம் குனிந்து பாதம்
தொழுகிறோம்..🙏

உன் விழிமலர்களைத்
திறந்து பார்..🙏

உன் கருணையை
மழையாய்ப் பொழிந்துவிடு..🙏

அத்தி வரதா..அருளாளா🙏

வரம்தா ...எங்கள் வரதா🙏

அத்தி வரதா உனை மன
சுத்தியோடு வணங்கி
நித்தமும் அடிபணிந்து
பக்தியுடன் துதித்து
தித்திக்கும் நின் நாமம்
சித்தம் குளிரப் பாடி
முக்தி பெறுவதற்கு
சித்திக்கும் நாள் வருமோ?

அத்திவரதர் தரிசனம்...1.7.2019 -17.8.2019



No comments:

Post a Comment