Wednesday 7 August 2019

Happy Friendship Day..4.8.2019

என் சிநேகிதி
எனக்கு பள்ளி நாட்களில் தோழிகள் உண்டு. ஆனால் படிப்பு முடிந்தபின் அந்தத் தோழமை தொடரவில்லை.

திருமணத்திற்குப் பின் மொழி தெரியாத வெளி மாநில வாசம்! அதில் நட்புக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை!

என் கணவருக்கு வங்கியில் அடிக்கடி  வரும் வேலை மாற்றங்களால் பல ஊர்களில் வாசம்! அப்போது எனக்கு சில சிநேகிதிகள் கிடைத்தாலும்,
அடுத்த ஊருக்குச் செல்லும்போது,  அந்த சிநேகம் சில நாட்க
ளிலேயே கடிதத் தொடர்புடன் துண்டித்துப் போகும்.

பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். வாழ் நாளில் நாம் பலருடன் பழகுகிறோம். நட்புடன் இருக்கிறோம். ஆனால் யாராவது ஒருவர் மட்டுமே உள்ளார்ந்த, ஆழ்ந்த நட்புடன் இருக்க முடியும்.'ஹாய்-பை’ சொல்லிப் பிரியும் நட்பாக இல்லாமல்  ஆத்மார்த்தமாக இருக்கும் ஆழமான நட்பே இறுதி வரை தொடரும்.

நாங்கள் ஈரோட்டில் இருந்த சமயம் என் மகனுடன் படித்த மாணவனின் தாயாக  அறிமுகமான என் தோழி முத்துலட்சுமியின் ஆழமான, அழுத்தமான நட்பு, 25ஆண்டு
களுக்கும் மேலாகத் தொடர்கிறது.

எங்கள் எண்ணங்கள், ரசனைகள், அபிப்பிராயங்கள் ஒரே அலைவரிசையில் இருந்ததனால், எங்கள் நட்பும் இன்று வரை தொடர்கிறது.  நான்கு வருடங்களுக்குப் பிறகு ஈரோட்டை விட்டு மாற்றலாகி நாங்கள் கிளம்பியபோது, பிரிவு தாங்காமல் இருவருமே கண்கலங்கி விட்டோம். அன்று முதல் இன்று வரை தொலைபேசி, ஈமெயில், கடிதங்கள்தான் எங்கள் நட்பிற்குப் பாலமாக இருக்கிறது.

எங்களுக்குள் நட்பு இவ்வளவு வலுவாகக் காரணமே பகிர்ந்து கொள்ளுதல்தான்!

கணவர், சகோதரி, மகள்,
தாய் என்று யாரிடமும் பேச முடியாத பல விஷயங்களை நாங்கள் மனம் திறந்து பேசிக் கொள்வோம். அப்போது கிடைக்கும் ஆறுதலும் நிம்மதியும் தனிதான். எங்கள் மனக் கவலைகளை, ஆதங்
கங்களை ஒருவருக்கொருவர் நாங்கள் பகிர்ந்து கொள்ளுவதால் மனம் லேசாகி கவலை பறந்தோடுவதை உணர்கிறோம்.

நாங்கள் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. எங்கள் குழந்தைகள் கூட எங்களைக் கேலி செய்வார்கள். எங்களுக்கு ‘உபிச’ (உடன் பிறவா சகோதரி) என்ற பட்டமே கொடுத்தி
ருக்கிறார்கள்!

நான் வெளியூர்களில் இருக்கும்போது வருடத்தில் ஒரு முறையாவது நாங்கள் தவறாமல் சந்தித்துக் கொள்வோம். இப்பொழுது நான் திருச்சியில் இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிகிறது.

இன்றும் நினைத்தால் உடனே போனில் பேசிக் கொள்வோம்! வாய்விட்டுச் சிரிப்போம்!  பழைய நினைவுகளைப் பேசி மகிழ்வோம்!எத்தனை நெருங்கிய உறவுகள் இருந்தாலும் மனம் ஒன்றிய சிநேகிதிதத்திற்கு எதுவும் இணையாகாதுதான்.

எங்கள் முப்பது வயதுக்கு மேல் ஏற்பட்ட இந்த நட்பு, புரிந்து கொள்ளல் நிறைந்ததாக  இன்றுவரை   இருக்கிறது. இந்த நண்பர்கள் தின நாளில் என் தோழியைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அனைத்து மத்யம நண்பர்களுக்கும் என் நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment