Wednesday 28 August 2019

கண்ணனின் பிறந்தநாள்

கண்ணன் பிறந்தான் களிப்புடன் நாமும் கும்மியடிப்போம்
வாரீர்..வாரீர்!
கோகுலம்தனிலே குதூகலமாகக் கொண்டாடுவோம் வாரீர்..வாரீர்!

ஆண்டுகள் பல்லாயிரம் ஆயினும்
கண்ணனின் லீலைகள் விளையாட்டாகவும்..ஆனந்தமாகவும்..சிருங்காரமாகவும்..தத்துவார்த்தமாகவும் அவரவர் வயதுக்கேற்றபடி இன்பம் தரும். அந்த லீலாவிநோதன் கோகுல பாலனின் பிறந்த நாளே ஜன்மாஷ்டமி.

இந்தியா முழுதும் இந்த நாள் மிகப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது.கிருஷ்ணர் பிறப்பின் சிறப்புகள்..
பிறந்தவுடன் பேசியவன் கண்ணன்
நான்கு கரங்களில்சங்குசக்ர பீதாம்பரதாரியாக அவதரித்தான்.
பிறந்ததும் அழவில்லை.

கண்ணன் நடுஇரவில் கம்சன் அயர்ந்திருக்க, காவலாளிகள் உறங்கும் நேரம் அவதரித்தான். கம்சனாகிய ஆணவம் அடங்கி, காவலாளிகளாகிய புலன்கள் உறங்கும்போது இறைஒளி தோன்றும் என்பதே அவதார தத்துவம்.

வாழ்க்கை தர்மத்தை எடுத்து
ரைப்பதே கிருஷ்ணாவதாரம். வாழ்க்கையில் நேர்மை வேண்டும்.. தீயன ஒழிய வேண்டும்.. சிருங்கார ரசம் இன்றியமையாதது என்பன கண்ணன் உலகுக்கு எடுத்துக் காட்டியது. பராசக்தியின் அழகையும், ராமனின்
லாவண்யமும் ஒருங்கே கொண்ட கண்ணனின் அழகில் மயங்காதவருண்டோ?

கண்ணன் பூஜைக்கு வெண்ணெய் அவசியம் வேண்டும். ஆனால் சீடை, முறுக்கு? இதற்கு திரு.நீடாமங்கலம் ஸ்ரீகிருஷ்ண
மூர்த்தி பாகவதரின் விளக்கம் வித்யாசமானது! எல்லா அவதாரங்களும் மங்கல ஒலிகளோடு நிகழ்ந்தன. ஆனால் கண்ணன் பிறந்த நடுநிசியில் ஏது மேளமும் தாளமும்! அச்சமயம் தூங்கிக் கொண்டிருந்த கம்சன் பயங்கர கனவுகள் கண்டு பற்களை 'நறநற'வென்று கடித்தானாம்! அந்த ஒலியை நினைவுபடுத்தவே சீடை முறுக்கு செய்யப் படுகிறதாம்!

கோபியர்கள் வீட்டில் கண்ணன் வெண்ணெய் திருட வர வேண்டுமென விரும்புவார்களாம். அவன் வந்துவிட்டுத் திரும்பப் போகும்போது அந்தக் குட்டிப் பாதங்கள் கண்ணன் வந்துவிட்டு போனதைக் காட்டிவிடும்.அதனால் அந்நாளில்  வெண்ணெயில் பாதச் சுவடுகளை போடுவார்களாம். இக்காலத்தில் அதை நினைவுறுத்தவே மாவினால் பாதம் போடுகிறோம்.

தமிழ் நூல்களில் சிறப்பாகக் கூறப்படும் நப்பின்னையே தமிழ் நாட்டின் ராதை.இவளை ஏழு எருதுகளை அடக்கி கண்ணன் மணந்ததாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் உரைக்கிறது.

இளம் வயதில் பால லீலைகளைச் செய்த கண்ணன், பாரதத்தில் கீதாசாரியனாகிறான். கீதையின் உபதேசங்கள் எந்த நாளுக்கும் ஏற்றவை.

மற்ற மதங்களில் கடவுளின் தூதரே மத உண்மைகளை விளக்கியிருக்கிறார். ஆனால் ஹிந்து மதத்தில் மட்டுமே கடவுளாகிய கண்ணன் நேரில் நின்று 700 ஸ்லோகங்களில்  வாழ்வின் தர்மம் மற்றும் மத உண்மைகளை விளக்கியுள்ளார்.

மற்ற தெய்வங்களை மரியாதையுடன் வணங்கும் நம்மால் கண்ணனை மட்டுமே கொஞ்ச முடியும்..கோபிக்கவும் முடியும். நீ என்னிடம் வராதே என்று சொல்லும் போதே மானசீகமாக அவனை அள்ளி அணைத்து உச்சி முகர முடியும்! இப்படித்தானே கண்ணன் நாமதேவர், சூர்தாசர், முக்தாபாய், துக்காராம், ஞானதேவர் ஆகியோருடன் கூடவே இருந்திருக்கிறான். ஆழ்வார்களும் ஆண்டாளும் அவனையே நம்பியிருந்து அவனடி அடைந்ததை  நாம் அறிவோம்.

சின்னக் கண்ணனின் பிறந்தநாளை நாமும் அவன் நாமங்களைப் பாடியும் பேசியும் 'கண்ணன் பிறந்தான்..எங்கள் கண்ணன் பிறந்தான்'என கோலாகலமாகக் கொண்டாடி அவன் தாளிணைகளை இறைஞ்சுவோம்.






No comments:

Post a Comment