Sunday 24 November 2019

சார்தாம் யாத்திரை

சார்தாம் யாத்திரையில் நாம் தரிசிக்க வேண்டிய சில முக்கிய ஆலயங்கள்.

#உத்தரகாசி
உத்தர காசி  பாகீரதி நதிக்கரையில் கடல்
மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. பல ஆறுகள் கொண்ட இம்மா
வட்டத்தில், பாகீரதியும் யமுனையும் பெரிய ஆறுகள்.  வாரணாசியில் உள்ளது போலவே இங்கேயும் ஒரு 'அசி' நதி இருக்கிறது. ஸ்கந்த புராணத்தில் 'கலியுகத்தின் காசி' என்று சொல்லப்பட்டுள்ளது இத்தலம்.

கலியுகம் பாதி முடியும்போது இப்போதுள்ள பத்ரி கேதார் தலங்கள் அழிந்து விடுமாம். பஞ்சபத்ரிகளில் ஒன்றான பவிஷ்யபத்ரி பத்ரியாகவும் உத்தரகாசி கேதாராகவும் மாறிவிடும் என்கிறது புராணம்.

உத்தர காசியிலுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மிக அழகாக உள்ளது. இந்த ஆலயத்தில் சிவபெருமான் தவத்தில் வீற்றிருப்பதாக ஐதீகம். கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் சிவலிங்கம் தென்திசை நோக்கி லேசாக சாய்ந்திருக்கிறது. எமன் மார்கண்டேயரின் உயிரைக் கவர முயன்றபோது, மார்கண்டேயர் சிவபெருமானைக் கட்டி அணைத்துக்கொண்டதால், அவரை எமனிடமிருந்து சிவபெருமான் காப்பாற்றினார்; அதன் காரணமாகத்தான் சிவலிங்கம் தென்திசையில் சாய்ந்திருக்கிறது என்று கூறுகிறது ஸ்தல புராணம். இந்தத் தலம் மார்கண்டேய மஹரிஷிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கர்ப்பக்கிருகத்தின் உள்ளேயே விநாயகர் பார்வதி தேவி கார்த்திகேயர் விக்ரகங்கள் உள்ளன. தற்போது உள்ள கோவில் தேஹ்ரி மன்னர் சுதர்ஷன் ஷாவின் மனைவி கனேதி தேவி 1857ல் கட்டியது.

கோவில் வளாகத்திற்குள்ளேயே, காசி விஸ்வநாதர் சன்னிதிக்கு எதிரே சக்தி தேவிக்கும் கோவில் உள்ளது. சக்தி தேவி 19.5 அடி உயரம் கொண்ட திரிசூலமாகக் காட்சி தருகிறாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான யுத்தத்தில் இந்த திரிசூலத்தைக் கடவுள்கள் பயன்படுத்தி அசுரர்களை அழித்ததாக ஐதீகம். இந்தத் திரிசூலத்தில், விஷ்ணுவின் சுதர்சன சக்கிரமும் பரசுராமரின் கோடரியும் சேர்ந்துள்ளதாகவும் ஐதீகம்.

இங்கே பாரத திபேத்திய கலாச்சாரப் பிணைப்பைக் காட்டும் விதத்தில் கல்வெட்டுக்களும் அழகிய சிற்பங்களும் உள்ளன. வேதம் பயிலும் பாடசாலை உள்ளது.

நாங்கள் சென்ற அன்று கர்வாசௌத் (Karva Chauth). அன்று நம் காரடை நோன்பு போன்று கணவரின் ஆயுளுக்காக செய்யும் பண்டிகை என்பதால் கோவிலில் நிறைய பெண்கள் பூஜை செய்தனர்.

#குப்தகாசி
ருத்ரப் பிரயாகையைத் தாண்டி உள்ளது குப்த காசி என்கிற இடம்.  குப்தகாசிக்கு எதிரே உள்ள ‘ஊகிமட்’ என்கிற கிராமத்தில்  மணிகர்ணிகா என்கிற  நீரூற்று  உள்ளது.

150 படிகளுக்கு மேல் அமைந்துள்ள  இந்தக் கோவில் கேதார்நாத், நேபாளம், பசுபதிநாத் ஆகிய ஆலயங்களுடன் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் இங்கு செய்யப்படும் பூஜை, புண்ணிய காரியங்கள்,தான தருமங்கள் அந்தத் தலங்களில் செய்த பலனைத் தருவதாக ஐதீகம்.

கோவில் மிகவும் அழகாக  கிட்டத்தட்ட கேதார்நாத் போலவே உள்ளது. கோவிலுக்கு முன்புறம் அழகிய சிறிய குளம் உள்ளது.
அதில் ஒரு பக்கம் ‘பசு’ முகத்திலிருந்து கங்கையும்  மறுபுறம் ‘யானை’ முகத்திலி
ருந்து யமுனை நீரும் ஊற்றிக்
கொண்டிருக்கிறது. சரஸ்வதி பூமியிலிருந்து இணைவதால் திரிவேணி சங்கமம் எனப்படுகிறது.

பாண்டவர்கள் தங்கள் பாவம் தீர சிவபெருமானை தேடி காசி சென்ற போது அவர்களுக்கு காட்சி தராமல் திருக்கயிலாயத்திற்கு வந்து விட்டார். அவரைத் தேடி இமயமலை வந்தபோது ஈசன் இவ்விடத்தில் நந்தி ரூபத்தில் மறைந்ததால் இவ்விடம் குப்தகாசி என்ற பெயர் பெற்றது.

அர்த்தமண்டபத்துடன்  சிங்கி-பிங்கி எனும் துவார
பாலகர்கள் ஆலயத்தை காவல் காக்க கருவறையில் சிவலிங்க ரூபத்தில் அருள்பாலிக்கின்றார் விஸ்வநாதர். அவருக்கு எதிரே  நுண்ணிய  வேலைப்பாடுகளுடன் சிறிய பஞ்சலோக நந்தியெம்
பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமான் கௌரிதேவியை
இங்குதான் பெண் கேட்டார் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அவுரங்கசீப் காசி ஆலயத்தை அழித்து மசூதியாக மாற்றியபோது விஸ்வநாதர் இங்கு வந்தவர் இங்கேயே தங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.

விஸ்வநாதர் ஆலயத்திற்கு இடப்பக்கம்  இன்னொரு சிறு சன்னதி உள்ளது. அது அர்த்தநாரீசுவரர் சன்னதி. இவ்வாலயத்தில் இடபத்தின் மேல் அமர்ந்த கோலத்தில் ஆண்பாதி பெண்பாதியாக சிவசக்தியின் பளிங்குமூர்த்தமாக அருள் பாலிக்கின்றார். இடப்பக்கம் மூக்குத்தி, அக்கமாலை, சுவடி, திருப்பாதங்களில் கொலுசு, வலப்பக்கம் நாகம், இளம்பிறை, திரிசூலம், திருப்பாதங்களில் நாகம்  என அழகு மிளிர்கிறது. பின்புறம் அன்னபூரணிக்கு ஒரு சிறு சன்னதி உள்ளது.

#ஜோஷிமட்
ரிஷிகேஷிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், கடல்மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஜோஷிமட் அல்லது திருப்பிருதி எனும் திவ்யதேசம். பெருமாளின் மீது பக்தர்களுக்கும், பக்தர்கள் மீது பெருமாளுக்கும் இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப்பிரீதி என்று பெயர் பெற்று,  பிறகு இந்தப் பெயர் திருப்பிருதி என்று  மருவியிருக்கலாம்.இங்கே இருக்கும் நரசிம்மர் மற்றும் வாசுதேவர் ஆலயங்கள் ஆதிசங்கரரால் கட்டப்பட்டுள்ளன.

திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் கிடந்த திருக்
கோலத்தில் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது இந்தக் கோவிலில் எழுந்தருளியிருப்பவர் இருந்த கோலத்தில் சேவை சாதிக்கும் நரசிம்மர். இந்தக் கோவில் நரசிங் மந்திர் என்றே அழைக்கப்படுகிறது.

இங்குள்ள கல்பவிருக்ஷம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. நரசிம்மர், துர்கை ஆகியோருக்கு இங்கே கோவில்கள் இருக்கின்றன.

கேரளாவில் இருந்து 8-ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோதிர்மட்,கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை)

#வசிஷ்டர்குகை
ரிஷிகேஷிலிருந்து 25 கி.மீ. தொலைவில் பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ளது வசிஷ்டர் குகை. சில படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும்.

சப்தரிஷிகளில் ஒருவரும் பிரம்மாவின் மானஸபுத்திர
ருமான வசிஷ்டரின் பிள்ளைகள்
விசுவாமித்திரரால் வஞ்சனை
யால் கொல்லப்பட்டபோது மனம் வெறுத்த வசிஷ்டர் தானும் கங்கையில் விழுந்து உயிர்விட  முடிவு செய்தார்.

கங்காதேவி அவரைக் காப்பாற்றி அங்கு தங்கியிருக்க வேண்டினாள். அருந்ததிக்கும் அவ்விடம் பிடித்துப் போய் அங்கேயே தங்கினர்.பல நூறு ஆண்டுகள் இங்கு தவம் செய்தபின் வசிஷ்டர் தன்  மனசஞ்சலம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.
அருந்ததி குகையும் அருகில் உள்ளது.

இவ்விடம் சுவாமி புருஷோத்த
மானந்தா ஆஸ்ரமத்தால்  மிக அழகாக பராமரிக்கப்படுகிறது. சற்று நீண்ட குகையினுள் சிறிய சிவலிங்கம் உள்ளது. அமைதியும் சுத்தமும் மனதைக் கொள்ளை கொள்கின்றன.அங்கு தியானம் செய்ய ஆசனங்களும் உள்ளன. எவரும் உள்ளே சென்று அமர்ந்து தியானம் செய்யலாம். அருகில் அமைதியாக ஓடும் கங்கை
நதியின் அழகு சொக்க
வைக்கிறது.

#ஹனுமான்சட்டி
ஜோஷிமட் பத்ரிநாத் பாதையிலுள்ள ஹனுமான் சட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் புராண பெருமை பெற்றது. பீமன் திரௌபதிக்காக சௌகந்திக புஷ்பத்தை தேடிச் சென்றான். வழியில் படுத்திருந்த ஹனுமனை வழிவிடும்ழடி பீமன் சொல்ல, ஹனுமனும் தன் வாலை நகர்த்திவிட்டு போகச் சொன்னார்.

தன் பலத்தைப் பற்றி அகந்தை கொண்டிருந்த பீமன் அலட்சியமாக வாலை நகர்த்தினான். அது நகரக்கூட இல்லை.தன் கையால் பலம் கொண்டவரை நகர்த்தியும் முடியவில்லை. தன் கர்வம் குறைந்து பீமன் மன்னிப்பு கேட்க ஹனுமன் தான் யாரென்று கூறி சகோதரனை அணைத்து ஆசி வழங்கினார். அவ்விடமே இவ்வாலயம் உள்ள இடம். இதே பெயரில் உள்ள இன்னொரு ஊர் யமுனோத்ரி செல்லும் வழியில் உள்ளது.

கோவில் சிறிதானாலும் மிக அழகாக இருக்கிறது. இங்கு ஹனுமான் சாலிஸா சொல்லி எதை வேண்டினாலும் நிறைவேறுமாம்.

இன்னும் பல ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் புராண வரலாறுகள் உள்ளது. எல்லா இடங்களுக்கும் செல்ல யாத்திரையின் 12 நாட்கள் போதாது!

No comments:

Post a Comment