Saturday 16 November 2019

முக்தித் தலம் கேதார்நாத்


நாங்கள் பத்ரிநாத், மனா கிராமம்,பஞ்சபத்ரி,வேறு சில ஆலயங்கள் தரிசனம் முடித்தபின் குப்தகாசி சென்று தங்கினோம். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்ல வேண்டும்.

இன்னொரு வழி சூரிய சந்திரர்கள் வழிபட்ட கௌரிகுண்ட் வழியாக சென்றால் குதிரை, டோலி அல்லது நடைப் பயணமாக 14கி.மீ. மேலே ஏறிச் செல்ல வேண்டும். இங்கு ஒரு வெந்நீர் ஊற்று உள்ளது. இறைவனின் பாகம் வேண்டி அம்பிகை தவம் செய்த இடம் இது.

நாங்கள் ஹெலிகாப்டரில் செல்ல குப்தகாசி ஹெலிபேடுக்கு சென்றோம். ஹெலிகாப்டர்கள் வருவதும் போவதுமாக பறந்துகொண்டே இருந்தன.அங்கு எடை பார்த்து ஹெலிகாப்டர் தாங்கக்கூடிய அளவுக்கு ஏற்றவாறு ஐந்து ஆறு என்று சிறு குழுவினராகப் பிரித்து ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்தனர்.



உள்ளே அமர்ந்து உடலை ஆட்டக்கூடாது, டாடா சொல்லக் கூடாது,புகைப்படம் எடுக்கக் கூடாது என்றெல்லாம் கண்டிஷன்கள்! பைலட் அருகில் இருவரும் பின்னால் நான்கு பேரும் அமர வேண்டும்.

விமானத்தில் பறந்த நமக்கு ஹெலிகாப்டரில் செல்வது புதிய அனுபவம்! செங்குத்தான இரு மலைகளுக்கிடையே செல்லும்
போது  'பாறையில் மோதிவிடுமோ' என்று நடுக்கம்! கீழே அதல
பாதாளத்தைப் பார்க்க கதி கலங்குகிறது! மலைகளுக்கிடையே மெல்லிய வெண்கோடாக ஓடும் மந்தாகினியின் அழகு மயங்க வைக்கிறது! மனதிற்குள் நமசிவாய மந்திரம் ஓட, கண் எதிரே இமயமலைச் சாரல்கள் மஹாமேருவாக மஹேஸ்வர ரூபமாகவும், தேவியின் ஸ்ரீ சக்ரமேரு போலவும்  தோன்றியது.

அதிகமில்லை..வெறும் 7 நிமிடங்களில் கேதார்நாத்தில் இறங்கிவிட்டோம். அங்கிருந்து ஒன்றரை கி.மீ. நடந்தால் ஆலயம். உயமில்லாத படிகள் ஏற சுலபமாக உள்ளது. வழியில் உட்கார பெஞ்சுகள், கழிவறைகள், கடைகள் உள்ளன. நடக்க முடியாதவர்
களுக்கு கூடைடோலி
எனப்படும் ஒருவரே முதுகில் தூக்கிச் செல்லும் டோலி உண்டு.

உத்தர்கண்ட் மாநிலத்தில் ருத்ரப் பிரயாகை மாவட்டத்தில் கடல்மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 3500 மீட்டர்கள் (11,700 அடிகள்) உயரத்தில் இமயமலைச்சாரலில் அமைந்துள்ளது கேதார்நாத் ஆலயம். 22,850 அடி உயரத்தில் 'மஹாபந்த்' எனப்படும் பனிச்சிகரத்தின் வாயிலில் இருக்கிறது கேதார்நாத்.

நர-நாராயணர்கள் பத்ரிகாஸ்ரமத்தில் தவமிருந்து, மண்ணால் ஆன லிங்கத்தை வைத்துப் பூஜை செய்தபோது பிரசன்னமான சிவபெருமான், அவர்கள் விருப்பத்திற்கிணங்க ஜோதிர் லிங்கமாக கேதாரநாதராக அங்கேயே தங்கிவிட்டதாகச் சிவபுராணம் கூறுகிறது.

மூன்று பக்கமும் பனி மூடிய மலைகள்  பின்னால் சுமேரு பர்வதம் எனப்படும் மலைத்
தொடர்கள்.  திருவானைக்
காவலிலும், காஞ்சிபுரத்திலும் தேவியினுடைய உக்ரத்தை ஸ்ரீசக்ர யந்திரம் ஸ்தாபித்து அவளை ஸாந்தஸ்வரூபியாகச் செய்த  ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில்  உருவாக்கப்பட்ட கற்கோயில் ஓங்கி உயர்ந்த விமானத்துடன் கலையம்சத்துடன் எழிலாகக் காட்சி தருகிறது.

கேதாரேசுவரர் ஆலயம் பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது. வெளியே தலையை சற்று உயர்த்தி உள்ளிருக்கும் இறைவனைக் காண்பதுபோல் பெரிய நந்தியம்பெருமான் உள்ளார்.

சிங்கி பிங்கி என்ற இரண்டு துவார பாலகர்களுடன் ஒவ்வொரு கதவிலும் தசாவதாரக் கோலங்களுடன் அற்புத சிற்பக்காட்சிகள். உள் மண்ட
பத்தில் பஞ்சபாண்டவர்களுடன் திரௌபதி குந்திக்கும் அழகிய சிலைகள். நடுவில் வெள்ளிக் கவசம் பூட்டிய நந்தியம்பெருமான். அதனையடுத்து கணபதியும் கௌரிதேவியும் காட்சி தருகிறார்கள்.

திருஞான சம்பந்தரும் சுந்தரரும்  தென்கயிலாயமான திருக்கா
ளத்தியைத் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்தே கேதாரத்தையும் தரிசனம் செய்து பாடியுள்ளனர்.

வாழ்வாவது மாயமிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல்
பசிநோய் செய்த பறிதான்
தாழாது அறஞ்செய்மிந்தடங்
கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான்
திருக்கேதாரமெனீரே!
என்று சுந்தரர் பாடிய கேதாரீசனைக் காணும்போது மெய்சிலிர்க்கிறது..மனம் ஆனந்தத்தில் நிறைகிறது..
கண்ணீர் பெருக இது கனவோ என்று உள்ளம் தடுமாறுகிறது.

உள்ளே கருவறையில் முக்கோணம் போன்று அமைந்த பாறை போன்ற தோற்றத்தில் எம்பெருமான் காட்சி தருகிறார். காலை நிர்வாண பூஜை சமயம் அவரைத் தொடலாம்..அபிஷேகம் செய்யலாம்..அணைத்துக் கொள்ளலாம்..நம் தலையை அவர் மேல் வைத்து  நமஸ்கரிக்கலாம்.
நானும் என் கணவரும் இணைந்து அங்குள்ள பண்டா சொல்லியபடி சங்கல்பம் செய்து பூஜித்து இணைந்து நமஸ்கரித்தபோது பெற்ற பிறவிப் பயனை அடைந்த  உணர்வினைப் பெற்றோம். அந்த நேரம் மனதில் எதுவும் வேண்டத் தோன்றவில்லை.

காலையில் நிகழ்த்தப்படும் நிர்வாண தரிசன பூஜையும்
என்றும் மாலையில் சிங்கார தரிசன பூஜையும், காலை வேளைகளில் பால்போக், மஹாபிஷேகம், ருத்ராபிஷேகம், அஷ்டோபசார பூஜை, சம்பூரண ஆரத்தி போன்ற பலவிதமான பூஜைகளும், மாலை வேளைகளில் சிவ சஹஸ்ரநாமம், சிவ அஷ்டோத்ரம், சிவ மகிமை ஸ்தோத்ரம், ஏகாந்த சேவை போன்ற பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

அவர் இங்குக் கோயில் கொண்ட வரலாற்றைப் பார்ப்போம்.
மகாபாரதப் போர் முடிந்ததும் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் பாவத்தி
லிருந்து விடுபடக் கட்டிய கோயில் இது என்று கருதப்படுகிறது. மகாபாரதப் போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் சிவபெருமான் கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள், காசியிலிருந்து கயிலாயம் நோக்கி பிரயாணம் செய்யத் தொடங்கினர். ஹரித்வார் வழியாக இமயத்தை அடைந்தபோது தொலைவில் சிவபெருமானை கண்டனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

சிவபெருமானைத் தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானை தேடி அலைகையில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர்.

பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்
படுகிறது.அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது.சிவனைப் பிடிக்க அவர்கள் பின் தொடர்ந்து சென்றபோது அவர்
பூமிக்குள் மறைய ஆரம்பிக்க, எருமையின் பின்பக்கம் கேதாரத்திலும், மற்ற நான்கு பாகங்களும் வேறு நான்கு இடங்களிலும் தங்கியதாக ஐதீகம்.
இதனால் இந்தத் தலம் ஸுமேரு
அல்லது பஞ்ச பர்வதம்
எனப்படுகிறது.

காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்
லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன.

பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்க
ரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

சிவபெருமானுடைய புஜம் துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், வயிறு மத்யமஹேஷ்வரத்திலும், ஜடை கல்பேஷ்வரத்திலும் தங்கிவிட்டதாகக் கருதப்படுகிறது

கேதாரநாதனின் புஜங்களாகக் கூறப்படும் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது துங்கநாத். இவ்விடத்திலிருந்து கேதார்நாம், நந்ததேவி, தூனகிரி, பந்தர்பூஞ்ச் ஆகிய இடங்களைக் காண முடியும்.

சிவனின் முகமாகக் கருதப்படும் ருத்ரநாத்தில் ’வைதரிணி’ நதி பாய்கிறது. இந்தத் தலத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் நீலகண்டர் என்று அழைக்கப்
படுகிறார்.

வயிறு தங்கிய இடம் மத்யமஹேஷ்வர். குப்த காசியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

ஜடாரூபமாக் காட்சிதரும் கல்பேஷ்வர் ஜோஷி மட்டிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகைக்
கோவில்.

சிவபெருமானின் அவதாரமான  ஆதி சங்கரர் வழிபட்ட அற்புதத்
தலம் கேதாரம். ஈசனிடம்
அவர் ஐந்து ஸ்படிக லிங்கங்கள் பெற்ற பின் முக்தி லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த புண்ணியத் தலம் என்பதால் இது முக்தித் தலமாகும். அவர் தவம் செய்து மகாசமாதி அடைந்த இடம் ஆலயத்திற்கு பின்னால் இருந்தது அழிந்து விட்டதாகக் கூறப்ப
டுகிறது.

தரிசனம் முடித்து ஆலயத்தை பிரதட்சிணம் செய்தோம். பல சாதுக்கள் ஜடாமுடியுடனும், உடல் முழுதும் விபூதியுடனும் அமர்ந்து பூஜைகளும் ஹோமங்களும் செய்ய நம்மை அழைக்கின்றனர்.

ஆலயத்துக்கு நேர் பின்னால் ஒரு பெரிய பாறை வண்ணம் அடிக்கப்பட்டு வணங்கப் படுகிறது. 2013ல் இமயத்தில் பெருவெள்ளம் வந்தபோது கேதார்நாத் ஆலயம் அழிந்துவிடும் என்று பயந்தார்களாம். அச்சமயம் மேலிருந்து உருண்டு வந்த இந்தப் பாறாங்கல் ஆலயத்தின் பின்னால் நின்று விட்டதாம். வெள்ளத்
தண்ணீர் ஆலயத்தை சிதைக்
காமல்  இருபுறமும் பிரிந்து சென்றதாம். இதை மெய்சிலிர்க்க சொல்கிறார்கள் அங்கிருப்போர். இறைவன் இருப்பதை இது போன்ற சம்பவங்களே நமக்கு எடுத்துரைக்கின்றன.

இவ்வாலயம் தீபாவளியோடு ஆறு மாதங்கள் பனியினால் மூடப்படும். பின் அட்சயதிருதியை அன்று திறக்கப்படும். அச்சமயம் இங்குள்ள பஞ்சமுகங்களைக் கொண்ட உற்சவ மூர்த்தி  கீழுள்ள உகிமட் (உஷாமட்) ஓம்காரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி பூஜைகள் தொடரும். ஆறுமாதம் கழித்து கோயில் திறக்கும்போது இங்கிருந்து கிளம்பி மலைக்கு சென்று மூலவரோடு அருள்பாலிப்பார்.












.








































No comments:

Post a Comment