Saturday 29 February 2020

இறைவனிடம்_பேசிய_ தருணங்கள்..1


இறைவனைக் காட்டியதும், அவரால் முடியாததில்லை என்று போற்றியதும், அவரை இறுக்கப் பிடித்தால் நீ இனிமையாக வாழலாம் என்றும் சொல்லிக் கொடுத்ததும் என் அம்மா.

தவறு செய்தால் சுவாமி கண்ணைக் குத்திவிடும், பொய் சொன்னால் வாய் பேசமுடியாது, திருடினால் கையில் காயம் படும் என்றெல்லாம் பயமுறுத்தும் அம்மா ஒரு விஷயத்தை சரியாகப் பண்ணினால் 'சுவாமி பரிசு கொடுக்கும்' என்பார். நாங்கள் நச்சரிப்போம் எப்ப சுவாமி வரும் என்று. சுவாமியை நேரில் பார்க்க ஆசை! 'சுவாமி நம்ம கண்ல படமாட்டார். ராத்திரி வந்து பரிசை தலைமாட்டில் வைத்துச் சென்றுவிடுவார்' என்பார். அதை வைப்பது அம்மாதான் என்று தெரிய ரொம்ப நாளாயிற்று! அப்பவும் அவள் நம்மை ஏமாற்றி யிருக்கிறாள் என்று எண்ணத் தோன்றியதில்லை.

நான் நான்காம் வகுப்பு படித்த சமயம் நடந்த சம்பவம் இது. என் உடன் படிப்பவள் மல்லிகா என்று பெயர், அவள் மாலை நேரம் என் வீட்டுக்கு வந்து என்னுடன் படிப்பாள். ஒருநாள் என் பாட்டு வாத்யாருக்கு கொடுக்க 10ரூபாய்.. புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் (என் அப்பா வங்கியில் பணி புரிந்ததால் எப்பவும் புதிய நோட்டுகள் தான்) அப்பா கொடுத்ததை என் புத்தக அலமாரியில் வைத்திருந்தேன்.என் தோழி படித்து விட்டு கிளம்பிப் போய்விட்டாள்.

நான் பாட்டு கிளாஸ் கிளம்பியபோது  ஒன்பது ரூபாய்தான் இருந்தது. அம்மாவிடம் சொன்னேன். என் ஃப்ரெண்ட் தவிர யாரும் வராததால் அவள்தான் எடுத்திருக்க வேண்டும் என்றார் என் அம்மா. என்னை அனுப்பி அவள் அம்மாவிடம் சொல்லி கேட்டுவா என்றார். நான் கேட்டபோது அவள் தான் எடுக்கவில்லை என்றாள்.

இரவு அப்பாவிடம் விஷயம் சொன்னதும் மீண்டும் அவள் வீட்டில் சென்று 'புதிய நோட்டு இருக்கா?' என்று கேட்பதோடு அந்த நோட்டின் நம்பரையும் குறித்துக் கொடுத்தார். மறுநாள் நான் மீண்டும் போய்க் கேட்டபோது அவள் அம்மாவுக்கே சந்தேகம் வந்து அவளை கோபமாகத் திட்டி விசாரித்த போது, தான்
எடுத்ததாக சொல்லி ரூபாயைக் கொடுத்தாள். என் அப்பா எழுதிக் கொடுத்த அதே நம்பர். அவள் அம்மா என் வீடு வந்து மன்னிப்பு கேட்டார். அதன்பின் அவள் என் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடன் பேசுவதுமில்லை.

ஒன்றிரண்டு மாதத்திற்கு பின் அவள் மாவு மில்லில் அரைக்கப் போனபோது அந்த மெஷின் சுற்றும்போது கையை விட்டு ஒரு விரலில் மேல்பாதி பாகம் கட் ஆகி விட்டது என்று கேள்விப் பட்டு, என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா..பாவம். தப்பு செய்தால் தண்டனை சாமி கொடுப்பார்னு சொன்னேனே. பார் அவள் அன்னிக்கு நம்ம வீட்டிலருந்து பணத்தை திருடினதுக்கு இப்டி ஆயிடுத்து பார்..என்றார். அந்த நிகழ்ச்சி என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திட  அது முதல் நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உண்டாகியது.

கடவுளை தாய் தந்தை குருவாக மட்டுமன்றி தோழனாகவும் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை அவர் என் நண்பன். அவரிடம் கோபமும் கொள்ளலாம்..சண்டையும் போடலாம்..நான் எது தேவை என்றாலும் அவரிடம் சற்று வேகமாக  அதிகாரமாகத்தான் பேசுவேன்.

கடவுள் பேசுவாரா? அவர் பேசுகிறாரோ இல்லையோ நான் அவருடன் கண்டிப்பாக பேசுவேன். ஆனால் அதன் பலன் எனக்கு கிடைத்துவிடும்!...இங்க பாரு எனக்கு இந்த வேலை ஆகணும் நீ என்ன பண்ணுவியோ தெரியாது எப்படியாவது நடத்தி வைக்கணும்.
என்பேன்! இதை நான் சத்தமாகவே சுவாமி அறையில் நின்று கடவுளிடம் சொல்வேன்.

அதைப் பார்த்து என் கணவர் 'என்னைஅதிகாரம்
பண்ற மாதிரி சுவாமியையும் பண்ணாத. பாவம் அவர் உன்ட்ட மாட்டிண்டு கஷ்டப்பட்றார்' என்பார்!

'நான் உங்களை சாமி லெவலுக்கு வெச்சிருக்கேன்னு புரிஞ்சுக்கோங்கோ' என்பேன்!

'நான் போனா போறதுன்னு உன்னை பொறுத்துப்பேன். சுவாமிக்கு கோபம் வந்தா உனக்கு காரியமல்லாம் பண்ணிக் கொடுக்க மாட்டார்' என்று கேலி பண்ணுவார்!

என் மகன் ஈரோடில் 10ம் வகுப்பு படித்த சமயம் திடீரென்று ஒரு முழங்காலில் வலி என்றான். சாதாரண வலியாக இருக்கும் என்று மருந்தெல்லாம் தடவியும் சரியாகவில்லை. காலை அசைக்கக்கூட முடியாமல் தவிக்க, டாக்டரிடம்  சென்றபோது அவரும் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். மருந்துகள் முடிந்தும் வலி குறையாம லிருக்க வேறு ஸ்பெஷலிஸ்டிடம் காட்டினோம். X-ray, ஸ்கேன் எல்லாம் எடுத்தும் ஒரு பிரச்னையும் தெரியவில்லை. 3 மாதமாகியும் எந்தபலனும் இல்லை. காலை ஊனி நடக்கவே முடியவில்லை. ஆயுர்வேத மருந்திலும் பயன் இல்லை. டாக்டரை மாற்றியதுதான் மிச்சம். உள்ளூர எனக்கு...இனிமேல் பிள்ளையால் நடக்க முடியுமா... என்றெல்லாம் கவலை,பயம்.
இறுதி ஆண்டுப் பரீட்சைகள் நெருங்கி விட, பள்ளி செல்ல முடியவில்லை. நண்பர்கள் மூலம் நடந்த பாடங்களை வாங்கிப் படித்தான்.

நானும் எங்கள் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டேன். மனதில் திடீரென்று திருப்பதி பெருமாள் 'நான் இருக்கிறேனே.
நினைவில்லையா' என்று கேட்பது போல் தோன்ற, திருமலையானிடம் 'உன் சந்நிதிக்கு என் குழந்தையை மலையில் நடத்தி அழைத்து வருகிறேன். நீதான் அவனை நடக்க வைக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டுவிட்டேன். அன்றைய மனநிலையில் நடக்கமுடியுமா முடியாதா என்றெல்லாம் எதுவும் யோசிக்கத் தோன்றவில்லை.

டாக்டர்கள் எல்லா சோதனையும் செய்து மருந்து சாப்பிட்டும் வலிக்கான காரணம் பிடிபடாததால் கோவை சென்று காண்பிக்கலாமா என்று யோசித்தோம். மறுநாள் எழுந்தவனை 'கால் எப்படி இருக்கு?நடக்க முடியற்தா' என்றேன். அவனும் எழுந்து சற்று ஊனிக் கொண்டு நடந்தாலும் வலி இருக்கிறது என்றான். மறுநாள் வலி வெகுவாகக் குறைந்து பிடித்துக் கொண்டு நடந்தவன் அதற்கு மறுநாள் சாதாரணமாக நடக்க ஆரம்பித்தபோது, அந்த திருமலையானுக்குதான் நன்றி சொன்னேன்.

முன் ஜன்ம பாக்கியை இந்த ஜன்மத்தில் கடவுள் வசூல் பண்ணி விடுவார் என்பார் என் அம்மா. அது மாதிரி இந்த மலை ஏறி வந்து தரிசிப்பதும் போலும். சாதாரணமாக இருந்தால் நடந்து செல்வது பற்றி யோசித்திருக்கவே மாட்டோம்.

இதுபோல் இன்னொரு முறை தலைவலி வந்து நான்கு மாதம் சரியாகவில்லை. MRI ஸ்கேனிலும் ஒரு பிரச்னையும் இல்லை. மனம் கலங்கிய நான் அவன் தலைமுடியை காணிக்கையாகத் தருவதாக வேண்டிக் கொண்ட நாலு நாளில் தலைவலி போன இடம் தெரியவில்லை.

அவனருளை நமக்கு செய்ய இதுபோன்ற வேண்டுதல்களையும் நம் மூலம் செய்து நமக்கு புண்ணியம் தருவது அவன் செயலே!
பதிவு நீண்டு விட்டது. இன்னொரு பதிவு தொடரும்...

No comments:

Post a Comment