Saturday 29 February 2020

இறைவ(ன்)னுடன் பேசிய தருணங்கள்..2

காலை எழுந்தது முதல், இரவு வரை இறைவனை ஏதாவது ஒரு விஷயத்துக்கு தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன். என் வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தால் மலைக்கோட்டை பிள்ளையார், அருகிலுள்ள சிவாலயம், சற்று தூரத்தில் உக்ரமாகாளி அம்மன்,
சீனிவாசப் பெருமாள் கோவில், கடைசியாக எங்கள் வீட்டிலிருந்து 4,5 கட்டிடம் தள்ளியுள்ள அனுமன் ஆலயம். காலை எழுந்ததும் பால்கனி சென்று அத்தனை தெய்வத்தையும்  வணங்கிய பின்பே காஃபி சாப்பிடுவேன்.

இறைவனுடன்  பேசுவது நான்தான்.பதிலை அவன் செயல்களில் காட்டிவிடுவான்.
என் அம்மாவுக்கு இதயத்தில் பிரச்னை வந்தபோது டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றபோது என் அம்மா மறுத்து விட்டார். 'எனக்கு ஒரே ஆசை..என் பேத்தி கல்யாணத்தைப் பார்க்க வேண்டும்' என ஆசைப்பட்டபோது சத்யசாயி பாபாவிடம்..சாய்ராம். என் அம்மாவை இன்னும் நான்கைந்து வருடங்கள் நல்லபடியா வை. பிறகு உன் இஷ்டம்..என கோரிக்கை வைத்தேன். பேத்தி கல்யாணத்தோடு பேரன் நிச்சயதார்த்தமும் பார்த்தபின்பே மறைந்தார்.

நாங்கள் ஜெர்மனியில் என் மருமகள் பிரசவத்திற்கு சென்றபோது என் அப்பா உடல்நிலை மோசமாகி வென்டிலேட்டரில் வைத்ததாகவும் என்னை வரச் சொல்லியும் தம்பி சொல்லிவிட்டான்.

எனக்கோ தர்மசங்கடம். குழந்தை பிறந்து 10 நாள்கூட ஆகவில்லை. டிக்கெட் விலை வேறு அதிகம். நான் ஒரே பெண். அப்பாவைப் பார்க்காமல் இருக்க முடியாது. குழப்பத்திற்கு ஒரே தீர்வாக சுவாமிநாதனிடம்..என் அப்பாவை நார்மல் ஆக்க வேண்டியது உன் வேலை. வந்து உனக்கு ஒரு அபிஷேகம் செய்கிறேன்'என ஆர்டர் போட்டேன்.

இரண்டு நாளில் அப்பா நார்மலாகியதாக செய்திவர, அடுத்த மாதம் திரும்பியபோது நேராக சென்று அப்பாவைப் பார்த்தோம். ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அடுத்த 2 மாதத்தில் மீண்டும் உடல்நிலை அதிகமாக அவரது கடைசி நாட்களில் நான் உடனிருந்தது என் பாக்கியம்.

என் கணவருக்கு திடீரென்று பேசமுடியாமல் போக பல டாக்டர்களைப் பார்த்தும் எந்த ப்ராப்ளமும் இல்லை என்று சொல்லி, Speech therapy மட்டுமே போதும் என்று சொல்லி
விட்டார்கள். ஆனாலும் சுற்றியிருப்பவர்கள் சொன்னவை..'பேச்சே வராது, குளறிதான் பேச முடியும், அவருக்கு இப்படி ஆச்சு.இவர் திக்கிதிக்கி பேசுவார்' என்றெல்லாம் சொல்ல எனக்கு பயம் அதிகமாகி விட்டது. கணீரென்று தினமும் ருத்ரம் சொல்லி பூஜை செய்பவர் மனதுக்குள்ளேயே சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை.

எங்கள் குலதெய்வத்திடம் 'ஏன் இப்படி அவரைக் கஷ்டப்படுத்தற? அவர் குரல் சரியாகிய பின்பே உன் சந்நிதி வருவேன். அவர் ருத்ரம் சொல்லி உனக்கு அபிஷேகம் செய்ய சீக்கிரம் அவருக்கு குரல் கொடு' என்று கண்டிஷன் போட்டேன்.

ஆறு மாதங்களுக்கு பின் அவர் பழையபடி பேசியபோது நேராக குலதெய்வம் சந்நிதி சென்று கண்ணீர் மல்க நன்றி சொன்னேன்.

'ஏய்..கண்ணா மரியாதையா நான் கேக்கறதை நடத்திக் கொடுத்துடு' என்று மிரட்டுவதும் உண்டு! அவனைக் கெஞ்சியதும் உண்டு..கொஞ்சியதும் உண்டு!

நான் வேண்டியது நடைபெறாதபோது 'இனிமேல் உன்னோடு பேசமாட்டேன். உன் இஷ்டப்படி என்ன வேணா பண்ணு. என் கஷ்டத்தை நான் பொறுத்துக்க சக்தியை மட்டும் கொடுத்துடு' என்று கோபிப்பேன்.

இறைவன் அருளிய அனுபவங்கள் ஏராளம்..அதில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த அனுபவத்தை இன்று நினைத்தாலும் உடல் நடுங்கு
கிறது. திருச்சிக்கு அருகில் சிறிது தூரத்தில் பாலையூர் என்ற இடத்தில் எங்களுக்கு நிலம் உள்ளது. அங்கு சில கொய்யா சப்போட்டா மரங்கள் இருப்பதால் அவ்வப்போது சென்று பார்த்து வருவோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என் பெண் வயிற்றுப் பேரனும், பேத்தியும் வந்திருந்தபோது அங்கு சென்று வரலாமென்று  சாப்பாடு முடித்து மதியம் ஒரு மணிக்கு எங்கள் நேனோ காரில் கிளம்பினோம். பேரனோடு ஜாலியாக வம்படித்துக் கொண்டு போனபோது எங்கள் தோட்டத்திற்கு செல்ல 10,15 நிமிடங்களே இருக்கும். திடீரென்று வண்டியில் ஏதோ வித்யாசமான சத்தம் வந்தது. என் கணவர் ப்ரேக் போட முயற்சித்தும் க்ளட்ச் வேலை செய்யாததால் முடியவில்லை.  வேகமும் குறைக்க முடியாதபோது என் கணவரும் சற்று பயந்து விட்டார்.

என் பேத்தி பின்னால் மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்.என் பேரன் பயந்து...தாத்தா என்னாச்சு வண்டியை நிறுத்து...என்று கத்தினான்.  நானோ பயந்து கடவுளை யெல்லாம் கூப்பிட ஆரம்பித்தேன். காரின் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் போய் அடுத்த நொடி அதன் இஷ்டத்துக்கு ஓடி ஒரு பெரிய சத்தத்துடன் வலப்பக்கம் கவிழ்ந்து விட்டது. நான் சாய்ராம் என்றும் என் பேரன் ஜய்பஜ்ரங்பலி என்றும் கத்திவிட்டோம்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. அந்த அரை நொடியில் ஆயிரம் எண்ணங்கள். 'நாம் போனாலாவது பரவாயில்லை. அடுத்தவர் குழந்தைகளுக்கு ஏதாவது ஆனால்' என்று நினைவு வேறு.கார் விழுந்து தலைக்கு மேல் நாலு சக்கரமும் சுற்றி நின்றுவிட, 'அட..நாம் உயிரோடு இருக்கிறோமா' என்று நினைத்தவள், மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று பயந்து கொண்டே பார்த்தேன். நெஞ்சு படபடப்பு.

கார் அப்படியே தலைகீழாக எதிரிலிருந்த மரம் தடுத்ததால் கீழே உருண்டு விழாமல் நின்று கொண்டிருந்தது. என் கணவரும் பேரனும் சீட்டிலிருந்து கீழே விழுந்து மெதுவாக எழுந்து முன் பக்கம் நின்றிருந்தார்கள். நானும் என் பேத்தியும் கார் கவிழ்ந்ததால் கீழே விழுந்து விட்டோம். பேத்தி மலங்க மலங்க அரை தூக்கத்தில் விழித்து ' பாட்டி என்ன ஆச்சு?' என்றது.

கதவைத் திறந்து கீழே இறங்கலாமென்றால் எந்த லாக்கும்  திறக்க முடியவில்லை. கொஞ்சம் ஆடினாலும் கார் ஆடி கீழே விழுந்து விடுமோ என்று பயம். தெருவில் யாரும் இல்லை. காரின் கதவுகளில் நாங்கள் வேகமாகத் தட்ட சத்தம் கேட்டு ஏழெட்டு பேர் ஓடி வந்தார்கள்.

ஒருவர் பலமாக கதவைத் திறக்க முயல, முடியாததால் , 'உள்ளே எத்தனை பேர் இருக்கீங்க? யாருக்காவது அடி பட்டிருக்கா?'என்று கேட்க, அப்பதான் அந்த நினைவு வந்து பார்க்க, அதிசயம்..நாலு பேருக்கும் ஒரு கீறல் இல்லை. என் மனமோ என் வசமே இல்லை. பயத்தில் உடல் நடுங்க 'கிருஷ்ணா சுவாமிநாதா சாய்ராமா எதுவும் ஆகாமல் காப்பாத்து'என்று சுலோகங்களை சொல்ல ஆரம்பித்தேன்.

'கண்ணாடியைத் திறங்கம்மா' என்று ஒருவர் சொல்ல, முடியவில்லை என்று சைகை காட்டினோம். மீண்டும் முயற்சிப்போம் என்று திறக்க..என்ன அதிசயம்..
கண்ணாடி திறந்து கொண்டது.

என் கணவரும் பேரனும் மெதுவாக வெளியிலிருப்பவர்கள் உதவியுடன் வெளியே குதித்து விட்டனர். பேத்தியை தூக்கி இறக்கியாச்சு. என்னால் சாய்ந்திருந்த சீட்டில் ஏறிக் காலை வெளியில் வைக்க முடியவில்லை. கவிழ்ந்து விட்டதால் மேலிருக்கும் கண்ணாடி கீழே வந்துவிட்டது. வெளியிலிருந்தவர்..பயப்படாதீங்கஎன் காலில் ஏறி மெதுவா இறங்குங்க'என்றபடி தன் காலால் தாங்கிக் கொண்டார். அந்த நேரம் அவர் தெய்வமாகத் தெரிந்தார். கீழே ஒரே முள்செடிகள்..ஏப்ரல் மாதம்..நல்ல வெயில். என் செருப்புகள் காரில் அவிழ்ந்து விட்டதால் சூட்டில் நிற்க முடியவில்லை.

கார் விழுந்த இடத்திற்கு பின்னால் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. எங்கள் கார் விழுந்தபோது மதிய சாப்பாட்டு மணி அடிக்க பிள்ளைகள் வெளி மைதானம் வந்தபோது எங்கள் சத்தம் கேட்டு ஏதோ விபத்து என்று சொல்ல பள்ளி வேலைஆட்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கூடிவிட்டனர். அனைவருக்கும் பெரிய ஆச்சரியம் எங்கள் யாருக்கும் ஒரு காயம் கூட படாதது. இன்னும் சற்று முன்போ தாமதமாகவோ நடந்திருந்தால் எல்லோரும் வகுப்புகளில் இருந்திருப்பார்கள். இதுவும் கடவுள் செயல்தானே?

நாங்கள் பத்திரமாக வெளியில் வந்ததும் 10 பேராக காரைத் தள்ளி மேலே கொண்டு நிறுத்தி விட்டார்கள். 'மரம் இருந்ததால் வண்டி உருளவில்லை. இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்குமோ.நீங்க கும்புடற சுவாமிதான் உங்களை ஒரு காயம் கூட படாமல் காப்பாத்தியிருக்கு' என்றபோது எனக்கு சரியான நேரத்தில் வந்து உதவிய அவர்களும் தெய்வமாகத் தெரிந்தார்கள்.

ஒரு ஆசிரியர் தன் டூவீலரில் என்னையும் பேத்தியையும் அழைத்துச் சென்று பள்ளி ஆசிரியர்கள் அறையில் உட்காரச் சொல்லி பிஸ்கட் கூல்ட்ரிங்க் எல்லாம் வாங்கித் தந்து சாப்பிடச் சொன்னார். ஆனாலும் எனக்கு அந்த அதிர்ச்சியில் எதுவும் வேண்டியிருக்கவில்லை. குழந்தைகளுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றியது அந்த தெய்வம்தானே?

என் கணவர் தினமும் பஞ்சாயதன பூஜை செய்பவர். அந்த வருடம் நாங்கள் ஷண்ணவதி செய்து கொண்டிருந்ததால் அன்று தர்ப்ணம், பூஜை எல்லாம் முடித்துதான் கிளம்பினோம். அந்த பூஜாபலனும் பித்ருக்களின் ஆசியும்தான் எங்களைக் காப்பாற்றியது என்று தோன்றியது.

நான் என் பேரன் பேத்தியுடன் வாடகை வண்டி ஒன்றில் ஏறி திருச்சி வந்துவிட்டோம். என் கணவர் இன்ஷ்யூரன்ஸ்க்கு ஃபோன் செய்தபோது, வண்டி என் பிள்ளை பெயரில் இருப்பதால் அவனுக்கு மெஸேஜ் போக உடன் அவன் ஃபோன் செய்து விட்டான்.

நாங்கள் விஷயத்தை அவனிடம் சொல்ல, அவன் மற்றவர்களிடம் சொல்லி வரிசையாக ஃபோன். காயம் படவில்லை என்பதை யாரும் நம்பாமல் வீடியோவில் பார்த்த பின்பே நம்பினார்கள். என் பெண் மாப்பிள்ளை ரொம்பவே பதறி விட்டார்கள். நல்ல
வேளையாக பாதிப்பு எங்களுக்கு இல்லை..முக்கியமாக குழந்தைகளுக்கு...பாவம் கார்தான் சப்பட்டையாகி ஆஸ்பத்திரி போய் வந்தது!

இந்த சம்பவம் கடவுள் நம்முடன் எப்பொழுதும் அரணாக இருக்கிறான், நம்மை கவனித்துக் காப்பாற்றுகிறான் என்ற நம்பிக்கையை அதிகமாக்கியது.அவனுக்கு ஜன்மம் முழுக்க நன்றி சொன்னாலும் போதாது. அதுமுதல் இறைவனுடனான நெருக்கம் இன்னும் இறுகியது.

இறைவன் பேசுவது மட்டுமா..பசித்த நேரத்தில் சாப்பாடும் போட்டிருக்கிறார்! நாங்கள் என் மகனுடன் மலேசியாவில் Battu Caves முருகன் கோவில் சென்றிருந்
தோம். மலை ஏறி தரிசனம் முடித்து வர மதியம் ஆகி பசி வயிற்றைக் கிள்ளியது. கோவில் குருக்களிடம் 'பக்கத்தில் ஹோட்டல் இருக்கா?' என்றபோது, இங்கு vegetarian சாப்பாடு கிடைப்பது கஷ்டம். என்னோடயே சாப்பிடலாம். வாங்கோ'என்று அழைத்துப் போய் கோவில் மடப்பள்ளியில் சாப்பிட்டோம். தான் சுவாமிமலை என்று அவர் சொன்னபோது நாங்களும் அந்த ஊர் என்று தெரிந்து சந்தோஷப்பட்டார். முருகப் பெருமான் அன்று எங்கள் பசியை போக்கியது அவனருள்தானே?

சப்தஸ்தான தலங்களை தரிசித்து வரும்போது திருச்சோற்றுத்துறை ஈசனை தரிசித்த முடித்ததும் அந்த குருக்கள்'நீங்க இங்கயே சாப்ட்டு ரெஸ்ட் எடுத்துண்டு வெயில் தாழ  போங்கோ' என்றார். அந்த ஊர் அன்னதானத்துக்கு பெயர் பெற்றதாம். ஈசனே அவர் வடிவில் தன் பிரசாதத்தை சாப்பிடச் சொன்னதாகத் தோன்றியது.

இதுபோல் இறைவனுடன் நான் பேசுவதும் அவர் பேசாமலே பதில் சொல்வதும் எங்கள் நித்யப்படி வழக்கமாகி விட்டது! 'இனி உன்னிடம் நான் எதுவும் கேட்கப் போவதில்லை. நீ நடத்துவதை நடத்து. இன்றுபோல் என்றும் எங்களை காத்து நோய் நொடியில்லாத வாழ்வு தந்து உன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்பதே என் வேண்டுதல்.

No comments:

Post a Comment