Thursday 20 February 2020

யாதகிரி பஞ்ச நரசிம்மர் கோவில்


ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!

நரசிம்மர் உக்ர தெய்வம் என்றாலும் தன்னை பக்தியுடன் வணங்குபவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தன் குழந்தை போல் காப்பாற்றுவார். இது நாம் பிரகலாத சரித்திரத்
திலிருந்து அறிந்த விஷயம். ஆந்திரா நரசிம்ம மூர்த்திக்கு மிகப் பிடித்த இடம் போலும்! நிறைய நரசிம்மர் ஆலயங்கள்.மங்களகிரி, அந்தர்வேதி, அஹோபிலம், சிம்மாசலம், யாதகிரி, வேதாத்ரி, மட்டபல்லி என்று நிறைய்ய உள்ளன.

யாதகிரிகுட்டா, தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான பஞ்ச நரசிம்மர்
கோவில். இந்தக் கோவில்
ஐதராபாதில் இருந்து 65 கி.மீ துரத்தில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.

திரேதா யுகம் நடக்கும் போது  இங்கு ஒரு குகையில்
ரிஷிய சிருங்கர், சாந்தாதேவி இருவரின் புத்திரரான யது என்ற ரிஷி அனுமானின் அருள் பெற்று தவம்  இருந்தார். இவருக்கு மஹாவிஷ்ணு தரிசனம் தந்து அருள் புரிந்தபோது, ரிஷியும்
தான் நரசிம்ஹ மூர்த்தியாக அவரைப்பார்க்க விரும்பினார்.
முதலில் ஜ்வாலா நரசிம்ஹ
ராகவும்,  பின்னர் உக்ர நரசிம்மராகவும், பின் கண்டபேருண்ட நரசிம்மராகவும்  தோன்றினார். ரிஷியோ அந்தத் தோற்றங்கள் வேண்டாமென்று கூற யோக நரசிம்மராகக் காட்சி அளித்தார். அதிலும் திருப்தி படாமல் போனதால் சாந்தமாக லக்ஷ்மி நரசிம்மராக தரிசனம் கொடுத்து அருள் புரிந்தார்.  இதனால் இது பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது.

பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் இந்த கோயிலை பற்றிய தகவல்கள் உள்ளது. இன்றும் கருவறையில் இந்த ஐந்து ரூபங்களில் நரசிம்மஸ்வாமி
காட்சியளிக்கிறார்.

ரிஷி தவம் செய்த இடம் இப்போதுள்ள கோவிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழி பட்டு முக்தி அடைந்த பிறகு அங்குள்ள மக்கள் முறை அறியாது வழிபட்டதால் லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார்.

பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை காட்டி அங்கு  இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார். அவ்விடமே தற்சமயம் குன்றின் மேலுள்ள குடவரைக் குகை ஆலயம். அதன்பின்பே இங்கு  முறையான பூஜைகள் தொடங்கப்பட்டன. இங்கு பாஞ்சராத்ர முறைப்படி பூஜை நடைபெறுகிறது.

இங்கு பல அர்ச்சனை சேவைகள் நடைபெறுகின்றன. நாங்கள் 216 ரூபாய் கொடுத்து சஹஸ்ரநாம அர்ச்சனைக்கு சென்றோம். நரசிம்மர் ஐந்து ரூபங்களில் அழகுறக் காட்சி தருகிறார். 12அடி நீளமும், 30அடி உயரமும் கொண்ட குடவரைக் கோயிலில் பாறையில் சுயம்புவாக காட்சி தருகின்றனர் ஐவரும். அவற்றிற்கு கவசம் அணிவிக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயரும் அங்கு உள்ளார். அருகில் ஆறடிக்கும் மேல் உயரத்தில் லக்ஷ்மியும் நரசிம்மப் பெருமானும் பொற்கவசம் பூண்டு நின்ற நிலையில் அற்புதக் காட்சி தருகின்றனர். அர்ச்சனைகள் இந்த நரசிம்மருக்கே. காணும்போதே மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்.

சகஸ்ரநாமம் முடியும்வரை அரைமணி நேரம் அமர்ந்து இறைவனை கண்குளிர, மனம் நெகிழ தரிசித்தோம். இவர் வைத்ய நரசிம்மராக விளங்கு
கிறார். நோய் நொடியில்லாத வாழ்வை வேண்டிக் கொண்டேன். பின் அர்ச்சனை, தீபாராதனை முடித்து அபிஷேக தீர்த்தம் சடாரி குங்குமம்  பெற்றுக் கொண்டு வெளிவந்தபோது மனம் நிறைந்திருந்தது.

பில்லி, சூன்யம், ஏவல் போன்
றவை விலகவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வருகிறார்கள். ஒரு மண்டலம் (40 நாட்கள்) பிரதட்சிணம் என்னும் வேண்டுதல் இங்கே பிரசித்தம். திருமணப்பேறு, பிள்ளைப்பேறு உள்ளிட்ட எல்லா நலன்களும் இத்தலம் வந்தால் கிட்டுகின்
றனவாம்.தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பீடிக்கப் பட்டவர்களை காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும்,   பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ மூலிகைகளைத் தந்து பக்தர்களின் நோயைத் தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கி
யத்திற்கு நல்லாசியும் வழங்குவதாகக் கூறப்படுகிறது. நரசிம்மர் காட்சிதந்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28-ஆம் தேதி கொண்டாடப்
படுகிறது.

கர்ப்பக்கிரஹத்தின் மேல் சிகரத்தில் தங்க சுதர்சனச்சக்கரம் உள்ளது. முன்பெல்லாம் இந்தச்சக்கரம் பக்தர்கள் வரும்போது அந்தப்பக்கம் திரும்பிஒரு காம்பஸ் போல் வழிக்காட்டுமாம். தற்சமயம் ஆலயத்தில் புனருத்தாரணம் செய்வதால் அந்த சக்கரம் கழற்றி வைக்கப் பட்டிருப்பதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பின்பு மீண்டும் பொருத்தப்படமென்றும் கூறினார்கள்.

ஆஞ்சநேயர் இருந்த தலம் என்பதாலோ என்னமோ ஏகப்பட்ட குரங்குகள்! நம் கையில் இருப்பதைப் பிடுங்க ஆயத்தமாக உட்கார்ந்திருக்கின்றன!

ஆதி  நரசிம்மர் கோவில் இவ்வாலயத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து பளிச்சென காட்சி தரும் இவ்வாலயத்தில் இரண்டு அதிசயங்கள் உள்ளன, ஒன்று ஹனுமான் இங்கிருந்து கிஷரா என்னும் இடத்தில் தாவிய போது வந்த ஹனுமானின் கால் அடித் தடம். மற்றொன்று அங்கு உள்ள தண்ணீர் வற்றாத தெப்பகுளம்.

யாதகிரி செல்ல ஹைதராபாதிலிருந்து நிறைய பஸ் வசதி உள்ளது.தெலிங்கானா செல்பவர்கள் உடல்நல ஆரோக்யம் வேண்டி அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம்.

No comments:

Post a Comment