Tuesday 28 January 2020

மார்கழி சிறப்பு...17.12.2019- 13.1.1920 வரை..

மார்கழியில் விடிகாலை பஜனை செய்வது புண்ணியம் தரும் என்பதை நாம் அறிவோம். அந்நாளில் அத்தனை ஊர்களிலும் பரவலாக இருந்த இந்த பஜனை இப்போது மிகவும் குறைந்து விட்டது. இந்த நாம பஜனை ஜீவாத்மாவுடன் ஐக்கியமாவதற்கான சிறந்த வழி. இன்னிசை வாத்ய கோஷத்துடனான பஜனை எல்லா உள்ளங்களையும் எளிதில் இழுத்து மனதை பகவத் ஸ்மரணம் செய்ய வைக்கிறது.

மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டது.

நம் மதத்தில் இன்றுவரை அதிகமாகி வரும் ஒரு நல்ல பக்தி விஷயம் நாமபஜனை மட்டுமே. சாஸ்திரங்களில் எந்த பூஜையும் செய்ய ஆசை இருந்தாலும் அவற்றை செய்ய சக்தியும் வசதியும் இல்லாதவர்க்கு இந்த நாம பஜனையே அத்தனை பலன்களும் தருவதாகக் கூறப்படுகிறது. பகவான் கண்ணனே கலிகாலத்தில் தான் நாம சங்கீர்த்தனம் செய்யும் இடங்களில் இருப்பதாக 'கலௌ ஸங்கீர்த்தம் கேசவம்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment