Thursday 30 January 2020

ரசகுல்லா பிறந்த கதை

இனிப்புப் பிரியர்களின் பட்டியலில் முக்யமான இடத்தைப்  பிடிப்பது ரசகுல்லாதான். சர்க்கரைப் பாகில் மிதக்கும் வெண்ணிறப் பஞ்சு போன்ற ரசகுல்லா கடந்த 150 ஆண்டுகளாகச் சுவைக்கப்
பட்டுவருகிறது! இதற்கு ஆதாரம் ரஸமலாய்தான்!

இந்த ரசகுல்லாவைக் கண்டுபிடித்தது யார்?
பாலாடைக் கட்டியாலான இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பதில் புகழ் பெற்றவர்கள் வங்காளிகள்.  மேற்குவங்கத்தில்
1868-ல் நொபின் சந்திரதாஸ் என்பவர் ரசகுல்லாவை உருவாக்கினார். இதனால் ‘ரசகுல்லாவின் கொலம்பஸ்’ என்று பாராட்டப் படுகிறார். வட கொல்கத்தாவில் பாக்பஜார் பகுதியில் இன்றும் அவருடைய இனிப்புக் கடையில் ரசகுல்லாவுக்கு கூட்டம் அலைமோதுகிறது!

தமிழகத்தைப் பொறுத்தவரை வங்க இனிப்புகள் என்றாலே கே.சி.தாஸ் இனிப்பகம்தான் நினைவுக்குவரும். கே.சி.தாஸ் என்பவர் நொபின் சந்திரதாஸின் மகன் என்பதையும் ரசகுல்லா உருவான சிக்கலான வரலாற்றையும் அந்நிறுவனத்தின் இணையதளம் நமக்குச் சொல்கிறது.

பாலிலிருந்து பாலாடைக் கட்டியைப் பிரித்தெடுப்பது நெடுங்காலமாகத் தவறான உணவுப் பழக்கமாக இந்தியாவில் கருதப்பட்டுவந்தது. போர்த்து
கீசியர்களிடமிருந்துதான் பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் முறையை மேற்கு வங்கத்தினர் கற்றுக்கொண்டார்கள். அதுவும், சர்க்கரைப் பாகில் பாலாடைக் கட்டியைக் கொதிக்கவைத்து ரசகுல்லாவை முழுசாக வெளியில் எடுக்கப் பல வருஷம் படாதபாடுபட்டார் நொபின் என்கிறது வரலாறு!

இந்த ரசகுல்லாவுக்கு நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷாரும் அடிமையாம்! வில்லியம் ஹெரால்ட் என்ற அவர்களது சமையல் வல்லுனர் பலநாள் முயன்றும் அவரால் இந்த சுவையுடன் செய்ய முடியாமல் தோல்வி அடைந்து , தம் நாட்டிற்கு இங்கு தயாரிக்கப்பட்ட ரசகுல்லாக்களை எடுத்துச் சென்றாராம்!

இத்தனை சுவையான  ரசகுல்லா தமக்கே உரியது என்று உரிமை கோரியது மேற்கு வங்காளம்! நொபின் சந்திர தாஸால்தான் கண்டுபிடிக்கப் பட்டது என்று புவிசார்  குறியீட்டை 2015-ல் கோரியது மேற்கு வங்காள அரசு.

ஆனால் அது தமக்கே சொந்தம் என்று வரிந்து கட்டிக்கொண்டு ரசகுல்லாவுக்கு உரிமை
கொண்டாடியது ஒடிஸா அரசு!  600 ஆண்டுகளுக்கு முன்னரே ரசகுல்லாவின் முன்னோடியான ‘சென்னா பொடா’ பூரி ஜகநாதர் கோயிலில் ஸ்பெஷலாம்!

அதற்கு ஒரு சுவையான கதை!
பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதர் மனைவி லஷ்மியிடம் சொல்லாமல் ரத வலத்திற்கு சென்று விட்டார். அதனால் லட்சுமி கோபப்பட்டு கோவிலின் கதவை அடைத்து படுக்க சென்று விட்டார். அவரை சமாதானப்படுத்த
ஜெகந்நாதர் அல்வா போல் ரசகுல்லா தயாரித்துக் கொடுத்தார்! அதனால்  பனிரெண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரசகுல்லாவை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று  ஒரிசா மாநிலத்தவர் கூறுகின்றனர்! யார் ரசகுல்லாவைக் கண்டுபித்தார் என்பது பூரி ஜெகந்நாதருக்குத் தான் வெளிச்சம்!

ஒரிசா ரசகுல்லா சிகப்பு நிறத்திலும், வங்காளிகள் ரசகுல்லா வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. ரசகுல்லா தயாரிப்புப் பயிற்சி நிறுவனத்தைக்கூடத் தாங்கள் நடத்திவருவதாயும் ஒடிஸா கூறியது. இப்படி ஒரு இனிப்புக்கு நடந்த காரசாரமான சண்டை 2017 நவம்பரில் ‘ரசகுல்லா மேற்கு வங்கத்துக்கே சொந்தம்’ என்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்குவந்தது.

திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கும்பகோணம் ஃபில்டர் காபி போல் பெங்கால் ரசகுல்லாவும் ஃபேமஸ் ஆயிற்று!

No comments:

Post a Comment